உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் (மத்தேயு 4:10) என்ற இயேசுவின் கட்டளைக்கு எதிராக, மரியாளுக்கு வணக்கம் செலுத்துவது ஏன்?

அன்னை வணக்கம்

"வானதூதர் தூது சொல்ல வந்த நேரத்தில் நம்பிக்கையுடன் தாம் அளித்த இசைவைக் கன்னி மரியாள் சிலுவை வரை தயங்காது காத்து வந்தார். இவ்வாறு இசைவளித்த நேரத்திலிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டோர் முடிவில்லா நிறைவு பெறும்வரை அருள் திட்டத்தின்படி மரியாளின் தாய்மையும் தடையின்றி நீடிக்கும். ஏனெனில், விண்ணேற்புக்குப் பின்பும் இந்நிறைவாழ்வு அலுவலை அவர் விட்டுவிடவில்லை. மாறாக பலவிதங்களில் பரிந்துபேசி நிலையான நிறைவாழ்வடைய நமக்குத் தேவையான கொடைகளை எப்போதும் பெற்றுத் தருகின்றார்." (திருச் சபை எண். 62) எனவே, "நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாளுக்கு நம்பிக்கை கொண்டோர் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்." (திருச்சபை எண். 52)

"திருச்சபை மரியாளைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் (Hyperdulia) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப் பெற்றவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் 'கடவுளின் தூய்மைமிகு தாய்' ஆவார். பரிசுத்த கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணக்கம் செலுத்தினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் புகலடைந்திருக்கின்றனர். குறிப்பாக எபேசு (கி.பி. 431) திருச்சங்கத்திற்குப் பிறகு, வியத்தகு முறையில் கடவுளின் மக்கள் மரியாளை அதிக மதிகம் வணக்கம் செலுத்தவும், அன்பு செய்யவும், உதவிக்கு அழைக்கவும், கண்டுபாவிக்கவும் முற்பட்டனர்." (திருச்சபை எண்.66)  "'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்' (லூக்கா 1:48) என்று மரியாளே முன்மொழிந்ததற்கு ஏற்ப, திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது. மனிதரான வாக்குக்கும், தந்தைக்கும், பரிசுத்த ஆவியாருக்கும் நாம் அளிக்கும் ஆராதனையில் (Latria) இருந்து உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது. மேலும், இறை ஆராதனையை இவ்வணக்கம் மிகச்சிறந்த விதமாய் ஊக்குவிக்கிறது எனலாம். வழுவற்ற மரபுக் கோட்பாட்டிலிருந்து மாறுபடாத, இறையன்னைக்குரிய பலவகையான பக்தி முயற்சிகளின் பயனாக நாம் தாயைப் பெருமைப்படுத்தும்போது, மகனை அறிந்து, அன்பு செய்து மாட்சிமைப்படுத்துகிறோம்; அவர் கட்டளைகளின்படி நடக்கிறோம். ஏனெனில், அவருக்காகவே அனைத்தும் உள்ளன.' (கொலோசையர் 1:15-16)" (திருச்சபை எண்.66)