உத்தரிக்க ஸ்தலம் பதிவு-1 ஐந்து காய தந்தை புனித பியோவுக்கு நிகழ்ந்த உத்தரிக்க ஸ்தல ஆன்மாக்களின் காட்சிகள். ***

காட்சி ஒன்று:

1922 ஆம் ஆண்டின் மே மாதம், ஐந்து காய தந்தை புனித பியோ, அவருக்கு ஏற்பட்ட பின்வரும் நிகழ்வினை, இத்தாலி நாட்டின் மெல்ஃபி மேற்றாசனத்தின் ஆயர் ஆல்பர்டோ கோஸ்தா, அவரது துறவற மடத்தின் அதிபர் சான் மார்கோவைச் சேர்ந்த அருட்தந்தை லோரென்சோ, மற்றும் மடத்தினைச் சேர்ந்த 5 துறவிகளிடம் வெளிப்படுத்தினார். அந்த 5 துறவிகளில் ஒருவரான சான் ஜியோவனி ரோடண்டோவைச் சேர்ந்த ஆல்பர்டோ த அபோலிட்டோ அந்த நிகழ்வினை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

ஒரு குளிர்கால மதியவேளையின் கடுமையான பனிப்பொழிவிற்குப் பின்னர், அன்று மாலை நேரத்தில், தந்தை பியோ மடத்தில் இருந்த விருந்தினர் அறையில் இருந்த குளிர்காயும் இடத்தில் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த பகுதிகளில் இருந்த மனிதர்கள் அணியக்கூடிய பழைய பாணியிலான மேலாடை அணிந்திருந்த வயதான மனிதர் ஒருவர் அவரருகில் வந்து அமர்ந்தார்.

 மடத்தின் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டிருந்த இந்த இரவு வேளையில் இந்த மனிதர் எவ்வாறு உள்ளே வந்தார் என்று எண்ணிக்கொண்டே தந்தை பியோ அம்மனிதரிடம், “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டார்கள்.

அம்மனிதர் தந்தை பியோவிடம், “தந்தை பியோவே, எனது பெயர் பியட்ரோ டி மௌரோ, நிகோலா என்பவரது மகன், என்னை செல்லமாக ப்ரீகோகோ என்று அழைப்பார்கள்” என்று கூறினார். மேலும் அவர் தந்தையிடம், “நான் இந்த துறவற மடமானது ஆதவற்றோருக்கு இல்லமாக இருந்த சமயத்தில் அறை எண் 4 ல், 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் நாள் மரித்தேன். அந்த இரவில், எனது கரங்களில் எரிந்து கொண்டிருந்த சுருட்டுடன் படுக்கையில் உறங்கிவிட்டேன். அதனால் எனது படுக்கையானது தீப்பிடித்து, நான் மூச்சுத் திணறி எரிந்து போனேன். நான் இன்னமும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்றேன். நான் அதிலிருந்து விடுதலை பெற்று கடவுளின் தரிசனத்தைக் காண ஒரு திருப்பலி தேவையாக இருக்கின்றது. அதற்காக உம்மைக்கண்டு உதவி பெற வேண்டி கடவுளிடம் அனுமதி பெற்று வந்தேன்” என்று கூறினார்.

இதனைக் கேட்டு தந்தை பியோ அவரிடம்,” நீங்கள் கவலைப்படாதீர்கள், நாளை உமது விடுதலைக்காக நான் திருப்பலி நிறைவேற்றுகின்றேன்” என்று கூறிய பின்னர், எழும்பி அவருக்குத் துணையாக மடத்தின் வாசல் வரை  வழியனுப்பச் சென்றார். தந்தை பியோ அந்த கணம் வரை மடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததை உணரவில்லை. கதவைத் திறந்து அம்மனிதரை வழியனுப்பிய பொழுது நிலா வெளிச்சத்தில் மடத்தின் திறந்த வெளி  முழுவதும் பனியால் நிரம்பியிருந்ததை கண்டார்கள். அம்மனிதர் தந்தையின் பார்வையிலிருந்து மறைந்த பின்னர், திடீரென்று தந்தைக்கு பயம் தொற்றிக்கொண்டது, உடனே கதவை மூடிவிட்டு விருந்தினர் அறைக்கு திரும்பச் சென்றார், அங்கு அவருக்கு மயக்கம் வருவது போன்று இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு தந்தை பியோ இந்த நிகழ்ச்சியை தந்தை பவுலினோவிடம் கூறினார். இருவரும் நகராட்சி காப்பகத்திற்கு அந்நிகழ்ச்சியினைக் கூறித்து 1908 ஆம் ஆண்டு ஆவணங்களை சோதித்தனர். அங்கு அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 18 ஆம் நாளில்  அறை எண் 4 ல்  பியட்ரோ டி மௌரோ என்பவர் தீக்காயங்களுடன் மூச்சுத்திணறி இறந்த ஆவண குறிப்புகள் இருந்ததைக் கண்டனர். அச்சமயத்தில் துறவற மடமானது ஆதரவற்றோருக்கு வீடாக பயன்பட்டு வந்திருந்ததாக குறிப்புகள் இருந்தன.

******சிந்தனை******

உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் தங்களுக்காக செபிக்க இயலாத நிலையில் இருக்கின்றார்கள். நாம் நமது செபங்களில், புண்ணியங்களின் பேறுபலன்களின் வாயிலாக அவர்களுக்கு உதவும் பொழுது, அவ்வான்மாக்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களை கடவுளின் தரிசனத்தில் சேர்க்கும் பொழுது அவர்கள் நமக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.

அவ்வான்மாக்கள் நமது உதவியினால் கடவுளை முகமுகமாக தரிசிக்கின்ற பொழுது நம்மைக் குறித்து மறந்து போகமாட்டர்கள். நமக்காக கடவுளிடம் எப்பொழுதும் பரிந்து பேசுவார்கள். இவ்வுலக வாழ்விலும் நமக்கு தேவையான வேளையில் உதவிக்கு வருவார்கள்.

அவர்களுக்காக நமது செபங்களின் வாயிலாக உதவ தயாரா???

சேசுவுக்கே புகழ்!!!! மரியாயே வாழ்க!!!!