தவக்கால சிந்தனைகள் : 15 இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம் : நம் தெய்வத்தின் ஆடைகளை களைந்து அவரை அவமானப்படுத்துகிறார்கள். ***

பாவிகளுக்காக பாவமில்லாத பரிசுத்த ஜீவன் அவமானத்தை ஏற்கிறது..

நம் இயேசு சுவாமி ஏன் அவமானப்படுத்தப்பட்டார்? யார் குற்றத்திற்காக ? யார் பாவத்திற்காக ? எல்லாம் நம் குற்றத்திற்காக; நம் பாவங்களுக்காக..

இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நம் நெஞ்சில் கை வைத்துப்பார்த்து நாம் இதுவரை செய்த பாவங்களை நினைத்துப்பார்க்க வேண்டும். என்னெ என் பாவம்! எத்தனை கொடியது ! எத்தனை அசிங்கம் ! எத்தனை பேரை நோகச்செய்திருக்கிறது. எத்தனை பேரை என்னுடைய வார்த்தைகள் கொலை செய்திருக்கிறது. இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லியிருக்கிறது. மேலும் நான் எத்தனை முறை பொறாமை பட்டிருப்பேன், எத்தனை தீய சிந்தனை நினைத்திருப்பேன், யார் யாரை எல்லாம் தவறாக நினைத்திருப்பேன், என் சுயநலத்திற்காக எத்தனை பேரை கஷ்ட்டப்படுத்தியிருப்பேன். யார் யார் மேலாமோ சந்தேகப்பட்டிருப்பேன். எத்தனை பேரை பகைத்திருப்பேன். எத்தனை முறை பொய் சொல்லியிருப்பேன். எத்தனைமுறை உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசியிருப்பேன். எத்தனை தீய செயல்கள் செய்திருக்கிறேன்..இன்னும்.. இன்னும்.. மோகப்பாவங்கள் எத்தனையோ பாவங்கள். அதை என் ஆன்மாவும், என் இறைவன் மட்டுமே அறிவார்கள். மொத்தத்தில் எத்தனை முறை பாவங்களால் என் கடவுளை நோகச்செய்திருக்கிறேன்.  என் ஆன்மாவை பாவத்தால் கறைபடுத்திருப்பேன்...

இயேசு : “ தன்னைத்தானே நேசிப்பதுபோல பிறரையும் நேசி “

நான் : நான் பிறரை நேசிக்கவில்லை

இயேசு : “ உண்மைக்கு சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே உலகிற்கு வந்தேன் “ 

நான் :  பொய்யைத்தானே அதிகமாக உபயோகித்தேன். உண்மை பேச பயந்தேன்...

இயேசு: :“ உன் பகைவரையும் நேசி “

நான் : என் பகைவரை பகைத்தேன்

இயேசு : “ உங்களுள் பாவம் இல்லாதவன் அவள் மீது முதல் கல் எரியட்டும்”

நான் : என் மீது அவ்வளவு அழுக்கை வைத்துக்கொண்டு பிறரை தீர்ப்பிட்டேன்.

இயேசு : பரலோக செல்வங்களை தேடுங்கள், கடவுளின் அரசையே முதலில் தேடுங்கள்.

நான் : உலக செல்வங்கள், பணம், பொருள், நகை, சொத்து, கேளிக்கை இவைகளையே தேடி பாவத்தில் உழல்கின்றேன்.

இயேசு : “ நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேர மாட்டீர்கள் “

நான் : கோபம், வன்மம், பகை, இச்சை, பேராசை, பொறாமை, பாவ நாட்டம் எல்லாம் இருக்க நான் எங்கே தூய குழந்தைகளாக மாறுவது..

மேலே நான் சொல்லிய வார்த்தைகளை உன்னால் நிறைவேற்ற முடியாவிட்டால் நான் உனக்காக திரும்ப திரும்ம ஆடைகள் உரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பேன்.. உனக்கு இதுதான் விருப்பமோ?

என் ஆடைகள் என் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தன.. அதை என் உடலில் இருந்து பிரித்து எடுக்கவில்லை..
பிய்த்து எடுத்தார்கள்..
அப்போது உடல் அதிகமாக வலித்தாலும் நான் உனக்காக அனுபவிக்கிறேன் என்ற எண்ணத்தால் அந்த வலியை நான் தாங்கிக்கொண்டேன்...

ஆனால் உன் பாவங்களால் நான் அனுபவிக்கும் வலியைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.. ஆனால் நீ என்னை தொடர்ந்து தாங்கச்சொல்லி வற்புறுத்துகிறாயே...

நீ என்மேல் அன்பு வைத்துள்ளது உண்மையானால்.. தயவு செய்து பாவம் செய்வதை நிறுத்தி விடு..
நீ மகிழ்சியாக இரு தவறில்லை..ஆனால் பாவம் செய்யாதே...பாவம் செய்வதுதான் உனக்கு மகிழ்ச்சி என்றால்..

நான் மீண்டும்..மீண்டும் சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டே இருப்பேன்...

எங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி... எங்கள் பெயரில் தயவாயிரும்...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !