தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை!

தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
~ லூக்கா 1:37

இந்த வார்த்தைகள் காபிரியேல் தூதனால் மரியாளுக்கு சொல்லப்பட்டது. காபிரியேல் தூதன் மிகவும் முக்கியமான சமயங்களில் மாத்திரமே பரலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து மக்களுக்கு தேவனின் திட்டத்தை வெளிப்படுத்துவார். பழைய ஏற்ப்பாட்டில் தானியேலுக்கு வெளிப்பட்டார். பின்னர் இயேசு பிறக்க போகும் செய்தியை மரியாளுக்கு அறிவிக்கும் படியாய் வெளிப்பட்டார்.

திருமணம் ஆகாத கன்னிப் பெண் மரியாளிடம் காபிரியேல் தூதன் “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக” என்றார்.

ஒரு கன்னிப் பெண் குழந்தையைப் பெற முடியாது என்பது நாமனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் இதெப்படியாகும் என்ற கலக்கம் மரியளுக்குள் பிறந்தது.

அந்நேரத்தில் தூதன் அவளிடம், “உன் உறவினரான எலிசபெத் வயது சென்றவளாயிருந்தாலும் கூட குழந்தை பெறக் கூடும், மேலும் நீயும் ஒரு கன்னியாக இருந்தாலும் கூட “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் (இயேசு) என்னப்படும்” என்றார். முடிவில், “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்று சொல்லி தேவனின் வல்லமையை மரியாளுக்கு எடுத்துரைத்தார்.

இதே போன்றொதொரு சம்பவம் பழைய ஏற்ப்பாட்டிலும் நடந்துள்ளது. வயது முதிர்ந்த சாராள் ஏற்ற காலத்தில் பிள்ளை பெறப்போவதாக கர்த்தர் ஆபிரகாமிடம் தெரிவித்தார். இதை கேட்ட சாராள் நகைத்தாள்.

ஏனெனில் குழந்தை பெரும் பருவத்தை அவள் சரீரம் கடந்து விட்டது. இந்த முதுமைக் காலத்தில் குழந்தையுண்டாக முடியுமா?
சாராளுக்கு அதிர்ச்சி ! அழுகை வரவில்லை, அந்த நிலையை கடந்து விட்டாள். எனவே சிரிப்பு தான் வந்தது.

கர்த்தரோ ஆபிரகாமை நோக்கி, “சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” ( ஆதி: 18: 13, 14) என்று சொல்லி கர்த்தர் தமது வல்லமையை ஆபிரகாமுக்கு எடுத்துரைத்தார்.

மரியாளும், சாராளும் தேவன் சொல்லும் காரியங்கள் எப்பொழுது நம் வாழ்வில் நடக்கும் என்று சிந்திப்பதை விடுத்து, இந்த காரியம் எப்படி நடக்கும் என்று சிந்தித்தனர்.

ஆகவேதான், “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை”, “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” என்று தம்முடைய வல்லமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

அநேக வாக்குத்தங்களை நாம் பெற்றிருப்போம்.

அவைகள் எப்பொழுது நடக்கும் என்று சொல்லி விழிப்போடும் விசுவாசத்தோடும் இருக்க வேண்டும்.

எப்படி நடக்கும் என்ற அவிசுவாசத்தை களைந்தெறிந்து யோபுவைப்போல, “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு:42:2) என்ற விசுவாச அறிக்கை செய்ய வேண்டும்.
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.

ஜெபம் :
தேவனே, நீர் சர்வ வல்லவர்!
எனக்கு குறித்ததை நிச்சயமாக நிறைவேற்றுவீர்.
உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை! ஆமென்!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
ஆமென்!