நற்கருணை ஆண்டவரை வாங்க நம்முடைய உள்ளம் தகுதியாக இருக்கிறதா?

இன்று நாம் ஆலயம் சென்று திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்க இருக்கிறோம். அவரைப் பெற நம்முடைய உள்ளம் தகுதியாக இருக்கிறதா? இந்த அகில உலகத்தையும் படைத்த நம் கடவுள், நம்மை உருவாக்கி காத்து வழி நடத்தி வரும் கடவுளை நம் உள்ளத்தில் பெற இருக்கின்றோம். அவரை வரவேற்க நம் உள்ளம் தகுதியாக இருக்கிறதா? நம் மேல் கொண்ட நேசத்திற்காக ஆதாம் ஏவாளால் நாம் இழந்த மோட்சத்தை நமக்கு திருப்பித் தர தன்னையே பலிப்பொருளாக்கி சொல்லோன்னாப் பாடுகள் பட்டு தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டு நமக்கு மோட்சத்தைத் தர காத்திருக்கும் தேவனிடம் மோட்சத்தை நம் சொந்தமாக்க அதற்குண்டான வழியில் நம்மை நடத்த தேவையான வலிமையை அவரிடம் கேட்டுப் பெற நாம் தகுதியாக இருக்கிறோமா?  நம் பாவங்களைக் களைந்து நம்மை பரிசுத்தமாக்க அந்த பரிசுத்தரிடம் நம்மையே ஒப்படைக்க தகுதியாக இருக்கிறோமா?

நன்மையே உருவான நம் தேவனைத் தவிர நமக்கு யார் நன்மை தர முடியும்… நற்கருணை ஆண்டவரைப் பெற முதல் தகுதி நம்முடைய பாவங்களையும், நம்முடைய தீய குணங்களையும் அவருக்காக விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்வதே… பின் அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்தல்…அதன் பின் உறுதியான உள்ளத்தோடு கடைப்பிடித்தல்…

நாம் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்..அவர் நம்மை நோக்கி இரண்டு அடி எடுத்து வைப்பார்…. நாம் தயாரா… அவருக்காக அவரைப் பெற நாம் தகுதியாக நாம் தயாரா?

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !