அக்டோபர் 31

செபமாலை செயமாலை.

பொதுச் செபமாலையின் இலாபம் : 

குடும்பச் செபமாலையைப் பற்றியும் , கோவிலில் செய்வதைப் பற்றியும் சொன்னோம் . செபமாலையை பற்றிய இரண்டொரு வார்த்தை : பொதுவில் சொல்லும் போது நம் கவனம் அதிகரிக்கிறது . பொதுவில் சொல்லும்போது ஒருவர் கவனக்குறைவாய் இருந்தாலும் மற்றவர்களுடைய பக்தி உருக்கம் அவனுக்கு ஈடு செய்வதோடு கூட அவனுடைய பக்தியை எழுப்புகிறது . தனித்து ஒருவன் ஒரு செபமாலை சொன்னால் ,அவனுக்கு ஒரு செபமாலையின் பலன் . முப்பது பேரோடு கூடி செபமாலை சொல்லுவானேயாகில் முப்பது செபமாலையின் பலன் அவனுக்குக் கிடைக்கிறது என்பது (திருச்சபையின் துணிந்த போதனையல்ல ) பக்திமான்களின் அபிப்பிராயம். தனிப்பட்ட செபத்தை விட பொது செபம் இறைவனுடைய கோபத்தை அமர்த்தவும் ,அவருடைய இரக்கத்தை உலகிற்குக் கொண்டு வரவும் அதிகம் உதவும் . பகைவர்களுக்கு விரோதமாய் ஒருவன் தனித்து நிற்பது எப்படி ? நூறு பேர் சேர்ந்து எதிர்ப்பது எப்படி? அதே போல பொதுவில் செபமாலை செய்யும்போது ஒரு சேனையே சாத்தானைத் தாக்குவது போலாம் . பேய் பயந்து அரண்டு அலறிக் கொண்டு ஓடுகிறது

ஆட்சேபனைகள் : 

செபமாலை சொல்லுவதில் நிலைத்திருப்பது கஷ்டமான காரியம் . பலர் பலவற்றைச் சொல்லி ஏமாற்றத் தேடுவார்கள் . "இவனுக்கு வேறு வேலை இல்லையா ? ஓயாமல் செபமாலை செய்து கொண்டிருக்கிறானே  சோம்பேறி " . " உனக்கு என்ன எண்ணம் தம்பி ? நாம் செய்ய வேண்டியதெல்லாம் செபமாலை மணியை உருட்டுவது ; மோட்சத்திலிருந்து பெரிய நதி ஆகாய கங்கையைப் போல உன் மடியில் வந்து விழப்போகிறது என்று நினைத்தாயா ? தன் கையே தனக்குதவி என்பதை நீ அறியாயோ ? வேலை மினக்கிட்டவனே , ஒரு சிறு செபத்தைச் சொல்லிவிட்டு உன் வேலையைப் போய்ப் பார் " . " விவிலியத்தில் ஆண்டவர் எந்த இடத்தில் செபமாலை செய்யச் சொல்லி இருக்கிறார் ?" " செபமாலை செய்வது நல்ல வழக்கம் தான் . யாருக்கு ? வேலையற்ற கிழவிக்கு . ...வசிக்கத் தெரியாத பாட்டிக்கு " என்று ஏளனம் செய்வார்கள் . இந்த மதிகெட்டவருக்கு எவ்விதம் பதில் சொல்லுவது என்று இந்நூலை வாசித்தவருக்குத் தெரியும் .

சூழ்நிலை :

நம் அகத்துப் பேய் தான் பெரிய பேய் . பராக்குகள் , நிலையற்ற குணம் , அசதி , இதய அசமந்தம் , உடல் களைப்பு முதலியன . ஞான சீவியத்தில் எங்கும் இவைகளோடு போராட வேண்டும் . செபமாலை சொல்லும் விஷயத்திலும் இவைகளோடு போராட வேண்டியது தான் .நாம் சம்மனசுக்கள் அல்ல . பராக்குகள் வரத்தான் செய்யும் .. சிறிது பிரயாசைப்பட்டு அவைகளை உதறிவிட்டு செபமாலை சொல்வோமேயாகில் தாய்க்கு நம் மேல் அதிக பிரியம் இருக்கும். இரண்டொருவருக்குப் பெரிய சோதனை ஒன்று உள்ளது . " நான் செபமாலை சொல்லத்  தொடங்கினால் பராக்கின் மேல் பராக்கு , சோதனையின் மேல் சோதனை . என்னால் செபமாலை சொல்ல முடிவதில்லை" என்று செபமாலை சொல்லுவதை நிறுத்தி விடுகின்றனர் . என்ன பராக்கு வந்தாலும் செபமாலையைச் செய்து முடியுங்கள் . தேவ இரகசியங்களின் படங்களைக் கண் முன்னே நிறுத்துவோமேயாகில் பராக்கு குறையும் . 153 மணிச் செபமாலையை ஒரே நேரத்தில் சொல்லி முடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம் . மூன்றாய் பிரித்து வெவ்வேறு நேரத்தில் சொல்லி வரலாம் . அவசியமாகில் பத்து பத்து மணியாய்ப் பிரித்து சொல்லி வரலாம்

நம்மாலான கவனத்தோடு சொல்லி வர வேண்டும் . அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .சந்தடியில்லாத இடத்தில் அமரிக்கையாய் இருந்து சொல்லவேண்டும் . அவசியமானால் கண்களை மூடிக் கொள்ளலாம். கூடுமானால் முழந்தாளில் நிற்கலாம் . வாயோடு வாய் சொல்லாமல் சில சமயங்களில் வாய் விட்டுச் சொன்னால் கவனத்தை அது அதிகரிக்கும்

சுத்தக் கருத்தோடு சொல்ல வேண்டும் . எக்கருத்துக்கென்று திட்டமிட்டு ஏதேனும் ஒரு வரப்பிரசாதத்தையோ , கிருவையையோ கேட்கலாம் . நாம் ஒரு கிருபையை அடைய ஆர்வமுற்றோமேயாகில் பராக்கு குறையும் கவனம் அதிகரிக்கும்

பெருங் கிருபை :

இப்பக்தியைப் பரப்ப அதிகமாகப் பிரயாசைப்பட்டவர் கர்த்தூசியர் சபையைச் சேர்ந்த முத். டொமினிக் என்று வாசித்தோம் .1481ம்  ஆண்டில் நமதாண்டவள் அவருக்கு தரிசனமாகிச் சொன்னது :" தேவ அருள் நிலையிலுள்ள ஒரு கிறிஸ்தவன் இயேசுவின் வாழ்க்கையையும் பாடுகளையும் சிந்தித்துக் கொண்டு செபமாலை செய்வானேயாகில் அவன் கட்டிக் கொண்ட எல்லாப் பாவத்திற்கும் முழு மன்னிப்பு அடைகிறான் "

செபமாலை சொல்வதினால் சாவான பாவம் மன்னிக்கப்படுகிறதென்பது அர்த்தமல்ல . சொல்லுகிறவன் தேவ அருள் நிலையில் இருக்கிறானே , அவன், உத்தரிக்க வேண்டிய அநித்திய ஆக்கினைஎல்லாம் முற்றிலும் நீங்கப் போகிறது என்பது சில அர்ச்சிஷ்டவர்களின் அபிப்பிராயம்
இதையே தான் செபமாலை இராக்கினி முத். ஆலன் ரோச்சுக்கு சொல்லிப் போனார் : " முழந்தாளில் இருந்து தேவ அருள் நிலையில் பக்தியாய் 53 மணிச் செபம் சொல்லுகிறவர்களுக்கு அளிக்கப்படிருக்கிற பலன்கள் அநேகம் என்று உனக்குத் தெரியும் அல்லவா ? செபமாலைப் பக்தியில் நிலைத்திருக்கிறவர்களுக்கு , தேவ இரகசியங்களைச் சிந்தித்து செபமாலை சொல்லுகிறவர்களுக்கு அவர்களுடைய கடைசி நாளில் அவர்கள் பாவங்களின் தோஷத்தையும் அபராதத்தையும் ஆக்கினையையும் எல்லாவற்றையும் மன்னிக்கும்படி செய்வேன் .அதாவது உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் நேரே மோட்சம் . இது அரசரின் தாய் நான் ஆனபடியால் இதைச் செய்வது எனக்கு சுலபம் . நான் தேவ அருள் நிறைந்தவளாய் இருக்கிறபடியால் என் நேச மக்களுக்கு அவைகளை வழங்குவது என்னால் இயலும்"

தப்பித் தவறி சாவான பாவ நிலையில் இருந்தாலும் செபமாலை சொல்லத் தவறாதீர்கள் . நாம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய , மனதிரும்ப அது உதவும் . விசேஷமாய் பாவத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடும் ஆசையோடும் செபமாலை செய்வோமானால் சீக்கிரம் மனந்திரும்புவோம் . ஆனால் பாவத்தை விட்டு விட மனம் இல்லாமல் பாவ ஆசையிலும் , இச்சையிலும் , மகிழ்ச்சியிலும் மிதந்து கொண்டு செபமாலை செய்வது தேவ தாய்க்கு அவசங்கை செய்வதாம் . பெரிய பாவாக்கிராமி ஒருவன் பாவ இச்சையில் வேண்டுமென்று நீந்திக் கொண்டிருந்தவன்  ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லிவந்தான் .ஒருநாள் தேவ தாய் அவனுக்குத் தோன்றி ஒரு நேர்த்தியான பழத்தை அழுக்கு நிறைந்த தட்டில் வைத்திருப்பதைக் காட்டினார்  . அவனுக்கு அதிசயமும் ஆத்திரமும் ." இவ்விதம் தான் நீ எனக்கு மரியாதை செய்கிறாய் . அழுக்கு மலிந்த களத்தில் அழகிய ரோஜா மலர்களை எனக்கு அளிக்கிறாய் . இத்தகைய கொடைகளை நான் ஏற்றுக் கொள்ளுவேனா " என்கிறார் ஆண்டவள்

உலகம் பாவ பிரமாண்ட நதி , அக்கிரமங்களின் ஆழ்ந்து அகன்ற ஆறு .அதில் எத்தனையோ ஆத்துமங்கள் அகப்பட்டு அழிந்தன . நாம் தப்பிக்க வேண்டும் அல்லவா ? அடர்ந்த இருள் மத்தியில் நாம் நிற்கிறோம் . எத்தனையோ ஞானிகளை இது குருடாக்கி இருக்கிறது . நாம் குருடாகாமல் இருக்க வேண்டும் அல்லவா ? மகா சாமர்த்தியமும் அனுபவமும் உள்ள பேய்க் கணங்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன . நம்மைச் சோதிக்கின்றன . உலகம் , பேய் , உடல் என்ற பகைவர்களின் பிடிக்குத் தப்பிக்க வேண்டுமேயாகில் செபமாலையைத் தினம் சொல்வோம் . வணக்கத்தோடு முழங்காலில் இருந்து ஆத்தும சுத்தத்தோடு சொல்லுவோம்

சரிதை.

நாகப்பட்டினத்தில் இருந்த புனித சூசையப்பர் கல்லூரியில் அமிர்தசாமி என்ற மாணவன் ஒருவன் இருந்தான் .அவன் நல்ல பையன் தான் .அதனால் தான் துறவற சபையில் சேர்ந்தான் . சில ஆண்டுகள் சென்று பேயின் சோதனைக்கு உள்ளாகி சந்நியாசத்தை உதறிவிட்டு உலகிற்குத் திரும்பினான் . தன் பெயரை அமிர்தலிங்கம் என்று மாற்றிக் கொண்டான் . மணமுடித்தான் . கோயிலுக்குப் போவதை நிறுத்தினான் . பக்தி முயற்சிகளை விட்டுவிட்டான் . அவனுக்கு இரவும் பகலும் ஒரே வேலை .குருக்களுக்கு விரோதமாய் சகல அக்கிரமங்களையும் கக்குவான் . அவன் உற்றாரும் உறவினரும் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் . கிறிஸ்தவ ஒழுக்கத்திற்கு வருமாறு அவனுக்கு புத்தி சொல்லிப் பார்த்தார்கள் . கெஞ்சினார்கள் . அவன் அவர்களை ஏளனம் செய்தான்  . அசட்டு சிரிப்பு தான் அவனது பதில்

"சாம்பலைப் பூசிக் கொள்ள பாப்பாண்டவர் உத்தரவு கொடுத்துள்ளார் . இந்த வஞ்சக நெஞ்சமுள்ள குருக்கள் தான் நம்மை ஏமாற்றி அலைகிறார்கள் " என்று பொய்யும் பித்தலாட்டமும் கலந்து பேசினான் . இவ்விதம் நாற்பது ஆண்டுகளாக அவன் பேய்க்கு அடிமையாக அலைந்தான்

வியாதியாய் விழுந்தான் .சாகக் கிடந்தான் . குருவானவரை அழைத்து வந்தனர் . குருவானவர் அவனை அண்டிப் பட்சமாய்ப் பேசினார் . " மகனே , இறைவனிடம் போகும் முன்னர் பாவசங்கீர்த்தனம் செய்வது நல்லது அல்லவா ? பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்கிறாயா ?" "முடியவே முடியாது " என்று சாதித்தான் . இறுதியில் "குருக்களை நம்பக் கூடாது . அவர்களிடமா பாவசங்கீர்த்தனம் செய்வது ?" என்றான் . குருவானவர் வீட்டை விட்டு வெளியே சென்றார் .அவருக்கு செபமாலை மேல் அதிக பக்தி . செபமாலையை எடுத்து செபித்தார் .சொல்லி முடித்தபின் நோயாளியண்டை சென்றார் . அவன் பிரியம் என்னவென்று கேட்டார் . " நீங்கள் சொன்னபடியெல்லாம் செய்யத் தயாராயிருக்கிறேன் " என்றான் . அவனைத் தயார் செய்து அவனுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டார் . கடைசித் தேவதிரவிய அனுமானங்களைக் கொடுத்தார் . அவனும் பாக்கியமான மரணம் அடைந்தான் . செபமாலை ஜெயமாலை!!!

செபம்.

ஒ செபமாலை இராக்கினியே , தேவனின் தாயே , மனிதர்களின் மாதாவே , பாவிகளாகிய நாங்கள் உம் பாதம் தேடி வந்தோம் . எங்கள் ஆத்துமம் மேலே எலும்பாதபடி எங்கள் உடல் அதை இழுப்பதைப் பாரும் . எங்கள் துன்பத்தின் மேலும் எங்கள் துக்கத்தின் மேலும் உமது இரக்கப் பார்வை பாய்வதாக . உமது வதனம் எங்கள் வெற்றியையும் சந்தோசத்தையும் கண்டு மகிழ்வதாக . முன்னொரு நாள் உமது மகன் அருளப்பரைக் காண்பித்து சொன்னது போல இன்று எங்கள் ஒவ்வொருவரையும் காட்டி " இதோ உம் மகன்/மகள் " என்று சொல்வது உமது காதில் ஒலிப்பதாக .

அன்னையே என்று உம்மை அழைக்கும் நாங்கள் உம்மை எங்கள் உலக வாழ்வில் ஆதரவாகவும் ஆறுதலாகவும் வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்

சூரியனை ஆடையாக அணிந்து விண்மீனை முடியாய்ச் சூடி இயேசுவுக்கு அடுத்தபடியில் சம்மனசுக்களுக்கும் மோட்சவாசிகளுக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் அரசியே , எங்கள் இதய நோயைப் போக்கி எங்களுடையவும் திருச்சபையுடையவும் துன்பங்களைத் துடைத்து அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுத்தருளும் . திருச்சபையைப் பாதுகாத்தருளும் . சாத்தானின் தலையை நசுக்கிய செல்வியே , விசுவாச விரோதிகளின் தலையையும் கொட்டத்தையும் அடக்கி , உலகிற்கு சமாதானத்தையும் பாக்கியத்தையும் கொடுத்தருளும் . செபமாலையைக் கொண்டாடும் நாங்கள் சோதனையை வென்று உலகின் மேலும் , உடலின் மேலும் அலகையின் மேலும் வெற்றி கண்டு உமது பாக்கியமான சுந்தர சோபனத்தையும் உம் திரு மகனின் முக தரிசனத்தையும் என்றென்றும் கண்டு களிக்க கிருபை கூர்ந்தருளும்.

ஆமென்.