இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 11-ம் தேதி.

மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயம்.

பூங்காவனத்தில் நமது மீட்புக்காகத் தமது பிதாவுக்குத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்த இரட்சகரை இயேசுவின் திருஇருதய அன்பர்கள் தாங்கள் அவர்பேரில் வைத்த அன்பால் ஏவப்பட்டு நினைவின் வழியாய் பூங்காவனத்தில் நுழைந்து, அவருக்கு ஆறுதல் வருவிக்க ஆசைப்படுவார்கள். இந்த ஒலிவேத்மலைத் தோட்டத்தில் விசேஷமாய் இயேசுவின் திருஇருதயமானது தாம் மனிதர்கள் பேரில் வைத்த அணைகடந்த அன்பைக் காண்பிக்கிறது.

இயேசு மனிதர்களுடைய பாவங்களையெல்லாம் தமது மேல் சுமந்து கொண்டு தமது பிதாவின் கோபத்தை குறைத்து மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ண அவருக்கு முன்பாக முழங்காலிலிருந்து வணங்குகிறார். அச்சமயம் அவருடைய திருஇருதயமானது சகிக்க முடியாத துக்கத்தில் மூழ்கியது. அகோரமான கோபத்தோடும், தளராத நீதியோடும், பயம் வருவிக்கக்கூடிய தோற்றத்தோடும், தமது பிதாவை தமக்கு முன்னால் இருப்பதாக பார்க்கிறார். துரோகியான யூதாஸென்பவன் தம்மை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறதையும், கொடிய யூதர்கள் தமது மாமிசத்தைக் கிழித்துத் தம்மைச் சிலுவையில் அறைகிறதையும், தம்முடைய அப்போஸ்தலர்களும் சீடர்களும் தமது விரோதிகளின் கையில் தம்மை விட்டுவிட்டு ஓடிப்போகிறதையும், கடைசியாய் இலட்சக்கணக்கான ஆத்துமங்கள் தமது பாடுகளால் யாதொரு பலனடையாமல் தாம் காண்பிக்கும் அன்பை சற்றும் உணராதவர்களாய் என்றென்றைக்கும் தண்டனைக்குள்ளாகப் போகிறதையும் கண்டார். இந்தக் காட்சிகளானது அவருடைய அன்பு நிறைந்த திரு இருதயத்துக்குப் பொறுக்க முடியவில்லை . அதனால் உடல் முழுவதும் இரத்த வியர்வையினால் நிரம்ப தரையில் முகங்குப்புற விழுகிறார்.

திவ்விய இயேசுவை இந்த நிலையில் காண்கிற நம்முடைய இருதயமானது பாவத்தை முழுவதும் அவருவருத்துத் தள்ள வேண்டும். பாவியின் வடிவில் மனிதர் பாவங்களைத் தமது பேரில் சுமந்துகொண்ட தமது பரிசுத்த குமாரனை பிதாவானவர் இவ்வளவு கொடுமையாய் நடப்பித்திருக்க பல பாவங்களைக் கட்டிக்கொண்டிருக்கிற நாம் அந்தப் பாவங்களுக்கு இவ்வுலகத்தையே பரிகாரம் பண்ணாவிட்டால் தேவநீதி நம்மைக் கொடூரமாய் நடத்தும்!

சோதனை நேரத்திலும் துன்பவேளையிலும் நாம் நம்பிக்கையோடும் தேவ விருப்பத்திற்கு அமைந்த மனதோடும், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தின் மாதிரியாக அவைகளை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று திவ்விய இயேசு மரண வேதனைப்படுகிற சமயத்தில் தமது பிதாவை நோக்கி : அப்பா தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் என்று கூறினார். புனித மாற்கு 1436)
நமது சோதனை வேளையில் திவ்விய இயேசுவின் மாதிரிகையைப் பின்பற்றி, நம்முடைய துன்பங்களை அவருடைய பாடுகளோடு ஒன்றித்து, நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவைகளை ஒப்புக்கொடுக்க வேண்டும். நம்முடைய சிலுவைகளிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவரை நோக்கிக் கேட்கும்போது, திவ்விய இயேசுவைப்போல், (பிதாவே! உமது விருப்பப்படி நிகழட்டும், என் விருப்பப்படி நிகழவேண்டாம். உமது சித்தப்படியே ஆகக்கடவது. என் மனதின் படி ஆகவேண்டாம்.) என்று நாமும் சொல்லவேண்டும். திருச்சபைத் துவக்கத்தில் முன்னூறு வருடமௗவாய் மறைசாட்சிகள் தங்கள் இரத்தத்தைச் சிந்தும்படி இயேசுக்கிறிஸ்துநாதர் விரும்பினார் அவ்வளவு வேதனையை திவ்விய இயேசு நம்மிடம் இப்போது கேட்கிறதில்லை. நம்முடைய பாவங்களுக்கு நாம் செய்கிற பரிகாரத்தாலும், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றித்து நம்மை முழுவதும் ஆத்தும் மீட்புக்கு கையளிப்பதினாலும் நாம் வேதசாட்சிகளாகும்படி ஆசிக்கிறார்.

கசப்பான கிண்ணக் கடைசித்துளிவரை குடிக்கத் தீர்வையிட்டார்" என்று திருவுளம் பற்றிய பின்னர், புனித மார்க்கரீத் மரியம்மாள் ஒருநாள் தியானம் செய்துகொண்டிருந்து போது இயேசு அவருக்குத் தோன்றி, புனிதையை நோக்கி : "மகளே, நாம் பூங்காவனத்தில் முழுமனதோடு அனுபவித்த மரண வேதனையை நீயும் வியாழக்கிழமை இரவுதோறும் அனுபவிக்கும்படி செய்வோம். ஆதலால் நமது பிதாவுக்கு நாம் ஒப்புக் கொடுத்த அந்தத் தாழ்ச்சி நிறைந்த ஜெபத்தில் நீயும் நம்மோடு ஒன்றிக்கும்படியாக நள்ளிரவு பதினோரு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் இடையில் எழுந்திருந்து மனிதருடைய பாவங்களை ஆண்டவர் மன்னித்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், தேவகோபத்தை குறைக்கும்படியாகவும் நீ தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவாயாக! நமது திருத்தூதர்கள் நம்மைவிட்டு ஓடிப்போனது நமக்கிருந்த தவிப்பை நீ சிறிதளவாவது தணியச் செய்வாய்.

இதனாலேதான் நம்மோடுகூட ஒரு மணி நேரமுதலாய் விழித்திராதினிமித்தம் அவர்களைக் கண்டிக்கும்படி நேரிட்டது" என்று சொல்லி மறைந்தருளினார்.

சுமார் 120 வருடங்களுக்கு முன் புனித தன்மையிலும் இயேசுவின் திருஇருதயப்பக்தியிலும் மிகவும் சிறந்து விளங்கின லியோனார்து என்னும் ஒரு இயேசுசபைக் குரு இருந்தார். இவர் பிரான்ஸ் நாட்டினர். தமது திவ்விய இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை மீட்க தேவநற்கருணையில் வீற்றிருக்கும் திவ்விய இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி இந்தப் பரிசுத்த குருவானவர் மிகுந்த பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டிருந்தார். அப்போது, திவ்விய இயேசு தமது திரு இருதயத்திற்கு மிக்க மகிழ்ச்சியும், ஆத்துமாக்களுக்கு மிக்க பிரயோசனமுமான ஒரு பையை ஏற்படுத்தும்படியும், அச்சபை கீழே கூறப்படும் இரண்டு கருத்துக்களுக்காக ஏற்படுத்தப்படவேண்டுமென்றும் தெரிவித்தார். முதலாவது, வாழ்நாள் முழுவதும் விசேஷமாய்ப் பூங்காவனத்தில் மனித மீட்புக்காக மரண அவஸ்தைப்பட்ட தமது திவ்விய இருதயத்துக்கு வணக்கம் வருவித்தல். இரண்டாவது இலட்சக்கணக்காய் உலகமுழுவதிலும் சாகிற சகலருக்கும் நன்மரண வரம், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயம் கொடுக்க இரந்து மன்றாடுதல்.

இயேசுவின் திரு இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அந்த இயேசுசபைக் குருவானவர் சில ஞானவேகமுள்ள மனிதர்களைக் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர்களெல்லோரும் ஒரு சபையாகச் சேர்ந்து பின்வரும் ஜெபத்தை ஜெபித்து வருகிறார்கள்.
"கருணாம்பர இயேசுவே! ஆத்துமங்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய ஆராதனைக்குரிய இருதயமானது பூங்காவனத்திலும் சிலுவையிலும் பட்ட மரண துன்பதுயரங்களையும், உம்முடைய மாசில்லாத திருத்தாயார் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து இன்றுதானே பூமியில் எங்காவது அவஸ்தைப்பட்டு மரிக்கப்போகிற ஆத்துமங்களை உமது திவ்விய இரத்தத்தால் சுத்திகரித்தருளும். மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயமே! இன்று மரிக்கிற பாவிகளின் பேரில் இரக்கமாயிரும். ஆமென்."

விசேஷமாய் மரண அவஸ்தைப்படுகிற பாவிகள் மனந்திரும்படியாக, நாமும் மேற்சொன்ன செபத்தை வேண்டிக்கொள்வோமாக.

வரலாறு:

இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் பக்தியுள்ள ஒரு மனிதன் ஒரு நாள் ஒரு சோதனைக்குட்பட்டு கனமான பாவத்தில் விழுந்துவிட்டான். ஆனால் இயேசுவின் திரு இருதயமானது அப்பாவியின்மேல் இரங்கி, தமது அருட்கொடையால் அவனுடைய இருதயத்தை எவ்வளவு இளகச் செய்தாரென்றால், அப்பாவி உடனே ஒரு குருவானவரைத் தேடிப்போய் அவர் பாதத்தில் விழுந்து அழுது, மிக்க துக்க மனஸ்தாபத்தோடு ஒப்புரவு செய்து, தன் பாவத்தைப் பரிகரிக்கக்கூடிய ஒரு பெரிய தவமும் கொடுக்கும்படி கேட்டான். பாவியானவன் ஏழு வருடம் தவம் செய்யும்படி குருவானவர் கட்டளையிட்டார். சுவாமி, ஏழு வருடங்கள் நான் செய்த பாவங்களுக்கு என் வாழ்நாளெல்லாம் பரிகாரம் செய்தாலும் போதாதே என்று சொல்லி அழுதான். குருவானர் அப்பாவியிடம் விளங்கிய மிகுந்த உத்தமமனஸ்தாபத்தைக் கண்டு, மகனே, மூன்று நாளைக்கு மட்டும் ஒரு சந்தி உபவாசம் செய் என்றார். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத அந்த மனிதன் முன்னிலும் அதிகமாய் அழுது மிகக் கடினமான தவமுயற்சி தனக்குக் கட்டளையிடும்படி கெஞ்சிக் கேட்டான். குருவானவர் மனந்திரும்பிய பாவியை நோக்கிச் சொல்வார். "இனி என்னிடம் அதிகமாய்க் கேட்காதே. இதுதான் கடைசித் தீர்மானம்; உன் பாவத்துக்கு அபராதமாக ஒரு கர்த்தர் கற்பித்த ஜெபம் சொல்" என்று கற்பித்தார். அத்தருணத்தில் பாவியானவனுடைய இருதயம் பொறுக்க முடியாத துக்க மனஸ்தாபத்தாலும், இயேசுவின் திரு இருதய அன்பினாலும் எவ்வளவு நிறையப் பெற்ற தென்றால், அதைத் தாங்கமாட்டாமல் உடனே இறந்துபோனான். இவ்வகையாய் இயேசுவின் திரு இருதயத்தை என்றென்றைக்கும் புகழ்ந்து பாட மோட்ச இராட்சியத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்.

இயேசுவின் திருஇருதய இரக்கமானது நமது பேரிலும், உலகிலுள்ள சகல பாவிகள் பேரிலும், விசேஷமாய் இச்சமயம் மரிக்கப்போகிற பாவிகள் பேரிலும் இறங்கிவரும்படி நாமும் மன்றாடுவோமாக. ஆத்தும் மீட்புக்காக மரண அவஸ்தைப்பட்ட திரு இருதயமானது, மரண அவஸ்தைப்படுகிற சகல பாவிகளுக்காக நீங்கள் மன்றாடவும், உங்கள் அன்றாட செயல்களை ஒப்புக்கொடுக்கவும், கேட்கின்றது.

நித்திய நரகாக்கினையிலிருந்து பாவியானவன் தப்பிக்க தேவையானது ஒப்புரவு அருட்சாதனம். இது இல்லாவிட்டால் உத்தம் மனஸ்தாபம். இந்த இரண்டு வாரங்களில் ஒன்றை மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தை நோக்கிக் கேட்போமாக. ஆதலால் கால தாமதமின்றி உடனே திருஇருதயத்தைப் பார்த்து வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் நாளை என்பது பல ஆத்துமங்களுக்குக் கிடைக்காது. ஆதலால் வேண்டிக்கொள்ளுங்கள். அந்த ஆத்துமங்களை அன்பு செய்கிற திவ்விய இயேசு உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு பலனை அளிப்பார். உங்களுடைய வேண்டுதலால் நாள்தோறும் ஒரு ஆத்துமத்தை மீட்பீர்களேயாகில், ஒரு வருடத்தில் 365 ஆத்துமங்களை மீட்பீர்களே! இது உங்களுக்கு மோட்சத்தில் எவ்வளவு பெரிய பலன் ! இந்த ஆத்துமங்களெல்லாம் நித்தியத்துக்கும் உங்களுடைய மகிழ்ச்சியாகவும், மகிமையாகவுமிருக்கும். உங்களால் மீட்கப்பட்ட இந்த ஆத்துமங்கள் உங்களுடைய மீட்புக்கு அஸ்திவாரமாயிருக்கும். இந்த விஷயத்தில் அப்போஸ்தலராகிய புனித யாகப்பர் சொல்லுவது என்னவென்றால் துன்மார்க்கத்திலிருந்து ஒரு பாவி மனந்திரும்பக் காரணமாயிருக்கிறவன் சாவிலிருந்து தன் ஆத்துமத்தை மீட்டு அநேக பாவங்களுக்குப் பொறுத்தலடைவான் என்பதாம்.

நீயும் ஒருநாள் மரண அவஸ்தைப்படுவாய் பயங்கரமான இந்தக் கடைசி யுத்தத்தில் உன் வாழ்க்கையில் நீ செய்ததுபோல் அநேக பக்தியுள்ள ஆத்துமாக்கள் உனக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறார்கள் என்று நீ நினைக்கிறது உனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும்! ஆதலால் நாள்தோறும் துன்பப்படுகிறவர்களுக்காக வேண்டிக்கொள். தினமும் தவறாமல் "கருணாம்பா இயேசுவே" என்கிற ஜெபத்தைச் சொல்.

சிந்தனை :

ஆத்தும் மீட்புக்காக நம்மாலான சகலமும் செய்யவேண்டும். எல்லாவற்றையும் பொறுமையோடு அனுபவிக்க வேண்டும். பரித்தியாகமும் செய்ய வேண்டும். மிதமிஞ்சிய எல்லாப்பற்றுதல்களையும் தூர அகற்றிவிட வேண்டும். பாவிகள் மனந்திரும்பவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் வேதனை குறைந்து மோட்சபாக்கியம் சேரவும் நாள்தோறும் வேண்டிக்கொள்வோமாக.

செபம் :

மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயமே! இன்று மரிக்கிறவர்கள் பேரில் இரக்கமாயிரும்.


சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.