அக்டோபர் மாதம் வந்துவிட்டது.... இது ஜெபமாலை மாதம். அதிகமாக ஜெபமாலைகள் ஜெபிக்கப்பட வேண்டும்.

மாதா மிகவும் விரும்புவது திருப்பலிக்கு அடுத்தபடியாக ஜெபமாலையே. ஒவ்வொரு கத்தொலிக்கரும் தினமும் 53 மணியாவது கண்டிப்பாக ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நான் மாதாவை நேசிக்கிறேன் என்று சொல்வதில் அர்த்தம் உள்ளது.

ஜெபமாலை சொல்லாமல் மாதாவை நேசிக்கிறேன் என்று சொன்னால் அவர்கள் அன்னையிடம் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே ஜெபமாலை சொல்லும் பழக்கம் இல்லாதவர்கள் ஜெபமாலையை உடனே தொடங்குங்கள் (இன்றே). ஏற்கனவே 53 மணி சொல்பவர்கள் அதை 153 மணியாக உயர்த்துங்கள். அன்னையும் உங்களை உயர்த்துவார்கள். ஒரு முழு ஜெபமாலை என்பது 153 மணிகளே.

எப்படி ஜெபமாலையை அதிகப்படுத்துவது. நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஜெபிக்கலாம், பயணம் செய்யும்போது ஜெபிக்கலாம். ஏன் நடந்து செல்லும்போது, வேலையின் இடைவெளியில் கூட ஜெபிக்கலாம். ஒவ்வொரு பத்து பத்து மணிகளாக சொல்லினால் கூட தூங்கும்முன் குறைந்தது 153 மணிகள் ஜெபித்துவிடலாம். ஒரு ஜெபமாலை சொல்வதற்கு 20 நிமிடம், ஒரு பத்துமணிகள் சொல்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் ஆகும். இப்படியாக நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓய்வு நேரத்திலும் ஒரு மூன்று நிமிடத்தை ஒதுக்கினாலே பத்துமணிகள் ஜெபித்துவிடலாம். ஒரு பாடல் கேட்கும் நேரம். இது தவிர ரிலாக்சாக ஒன்று, இரண்டு, மூன்று என்று பரலோக மந்திரங்களும், அருள் நிறை மந்திரங்களும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஒரு அருள் நிறை மந்திரம் ஒரு பொற்காசுக்கு சமம்.

பக்தியாக ஜெபமாலை சொல்லி எண்ணற்ற அற்புத அனுபவங்களை புனிதர்கள் பெற்றுள்ளார்கள் நம் புனிதர்கள் புனித சுவாமி நாதர், புனித லூயிஸ் மரிய மோன்போர்ட், புனித தொன்போஸ்கோ, புனித ஜான் மரிய வியான்னி, புனித ஜெத்ரூத்தம்மாள்,

புனித குழந்தை இயேசுவின் தெரசம்மாள், புனித மெட்டில்டா, தந்தை பியோ இன்னும் பல புனிதர்கள்.

ஒரு முறை புனித ஜெத்ரூத்தம்மாள் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருக்கும்போது எதிரே நம் இயேசு சுவாமி காட்சி தருகிறார். புனிதை ஒரு அருள் நிறை மந்திரம் சொல்லியதும் இயேசுவின் கையில் ஒரு பொற்காசு. அவர் ஒவ்வொன்றாக அருள் மந்திரங்கள் சொல்லச்சொல்ல இயேசு சுவாமியின் கையில் பொற்காசுகள் கூடிக்கொண்டே இருக்கிறது. அதைக்கவனித்த புனித ஜெத்ரூத்தம்மாள்,

“ஆண்டவரே என்ன அது ? “ என்று கேட்டதற்கு, இயேசு சுவாமியே சொல்லிய பதில், நீ சொல்லும் அருள் நிறை மந்திரங்கள்தான் தங்கக்காசுகளாக மாறுகின்றன. நாளை நீ மரித்த பின்பு பரலோகத்திற்கு நீ சென்றடைய உனக்கு ஆகும் ஆன்மீகச்செலவுக்கு இவைகள் பயன்படும்” என்றார்.

பார்த்தீர்களா ஜெபமாலையின் பலனை. நாம் சொல்லும் ஒரு அருள் நிறை மந்திரம் கூட வீன்போகாது.

ஆகையினால் ஆன்மாவை சுத்தப்படுத்தும் ஜெபமாலை நமக்கு இன்றியமையாதது. ஆன்மீக செலவுக்கு பயன்படும் ஜெபமாலை மிக மிக இன்றியமையாதது.

ஆகவே, ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம். இந்த அக்டோபர் மாதத்தில் இன்னும் அதிகமாக ஜெபமாலை ஜெபித்து நம் தேவ அன்னையின் மலர்ப்பாதம் சமர்ப்பிப்போம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !