ஜெபமாலை சங்கீத மாலை.. ஏன்?

அர்ச். சாமிநாதர் (1214-ம் ஆண்டு) ஜெபமாலைப் பக்தியை ஏற்படுத்தியதிலிருந்து 1460 - ம் ஆண்டில் முத். ஆலன் ரோச் அதைப் புதுப்பித்த நாள் வரையிலும், ஜெபமாலை சேசு மரியாயின் சங்கீத மாலை என்றே அழைக்கப்பட்டது.

இதன் காரணம், தாவீது அரசனின் சங்கீதங்கள் 150 இருப்பது போலவே ஜெபமாலையிலும் 150 அருள்நிறை மந்திரங்கள் உள்ளன. எழுத்தறிவில்லா பாமர மக்கள் தாவீதின் சங்கீதங்களைச் சொல்ல முடியாததால் அவர்களுக்கு அதே பலனைத் தரக்கூடியது ஜெபமாலை என்று கொள்ளப்பட்டது.

ஆனால் தாவீதின் சங்கீதங்களை விட ஜெபமாலை அதிக பலனை விளைவிக்கும் என்று கீழ்வரும் மூன்று காரணங்களால் கூற முடியும்:

1. சம்மனசு சொன்ன மங்கள வார்த்தை ஜெபம். மனுவுருவான தேவ வார்த்தையாகிய சேசுவையே நமக்குத் தந்தது. தாவீதின் சங்கீதங்கள் சேசு இரட்சகரைப் பற்றி முன்னறிவிப்புத்தான் செய்தன.

2. உண்மைப் பொருள் ஒன்று அதன் முன்னடையாளத்தை விட சிறந்திருப்பது போலும், ஒரு பொருள் அதன் நிழலை விட மேம்பட்டதாயிருப்பது போலவும் தேவ அன்னையின் ஜெபமாலை தாவீதின் சங்கீதங்களை விட மேலானது. சங்கீதங்கள் இதன் முன்னடையாளமே.

3. ஜெபமாலையில் வரும் ஜெபங்கள் (பரலோக மந்திரமும், அருள் நிறை மந்திரமும் மனிதனால் அல்ல, பரிசுத்த தமதிரித்துவத்தாலேயே இயற்றப்பட்டவை.

நமது அன்னையின் ஜெபமாலை 5 பத்து மணிகளை கொண்ட மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம்:

1. மகா பரிசுத்த திரித்துவத்தின் மூன்று ஆட்களையும் மகிமைப்படுத்துவதற்காக.

2. சேசுவின் வாழ்வு, மரணம், மகிமை ஆகிய இம்மூன்றையும் சிறப்பிப்பதற்காக.

3. மகிமையடைந்துள்ள பரலோக திருச்சபையை மாதிரிகையாகக் கொள்ளவும், போராடும் பூலோக திருச்சபைக்கு உதவியளிக்கவும், பரிகரிக்கும் உத்தரிக்கிற திருச்சபையின் வேதனைகளைக் குறைக்கவும்.

4. தாவீதின் சங்கீதங்கள் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துதல், இறைவனின் ஒளி பெறுதல், இறைவனுடன் ஐக்கியமாதல் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல், ஜெபமாலையிலும் இந்த ஒப்புமையை காட்டுவதற்காக.

5. இறுதியாய், நம் வாழ்நாளில் ஏராளமான வரங்களை நமக்குப் பொழிந்து, மரண நேரத்தில் சமாதானம் தந்து நித்தியத்தில் மகிமையளிக்கும்படியாக.

நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்..

“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “

ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !