திவ்ய நற்கருணை ஆண்டவர் சிந்தனைகள் 4 : இரண்டு நாளைக்கு முந்தைய பதிவின் விடை இதில் இருக்கிறது...

1916-ம் ஆண்டு, செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபர் முற்பகுதியாக இருக்கலாம். அன்று குழந்தைகள் மூவரும் கபேசா மலைச்சரிவின் குகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடுகள் அங்குமிங்கும் சிதறி மேய்ந்தன.

வழக்கம்போல் ஜெபமாலை சொல்லி முடிந்ததும் மூவரும் தலை தரையில் பட கவிழ்ந்து, சேர்ந்த குரலில்,

“ என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்க்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன் “ என்று ஜெபித்தார்கள்.

இப்படி சில தடவைகள் சொல்வதற்குள் திடீரென ஓர் ஒளி அவர்களை சூழ்ந்தது. அவர்கள் நிமிர்ந்து பார்க்கையில் அதே வானதூதன் அங்கு நின்றார் ! அவரது இடது கரத்தில் பூசைப் பாத்திரத்தைப் பிடித்திருந்தார். அப்பாத்திரத்தின் மேலே திரு அப்பத்தை வலது கையில் ஏந்தியிருந்தார். திரு அப்பத்திலிருந்து இரத்தம் துளிர்த்து, துளித் துளியாக பாத்திரத்தினுள் வடிந்தது.

வானவன் அப்பாத்திரத்தையும், நற்கருணை அப்பத்தையும் அப்படியே ஆகாயத்தில் நிற்க விட்டு விட்டு குழந்தைகளுடன் முழந்தாழிட்டு சாஷ்ட்டாங்கமாக விழுந்து,

“ மகா பரிசுத்த தமத்திருத்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரீத்து சாந்துவே ! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெங்குமுள்ள திவ்ய நற்கருணைப் பேழையில் இருக்கும் சேசுக்கிறிஸ்துநாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்கு செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திருஇருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து, நிர்பாக்கியப் பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன் “ என்று மும்முறை கூறி ஜெபித்தார்.

பின் எழுந்து ஆகாயத்தில் நின்ற பாத்திரத்தையும், திவ்விய நற்கருணை அப்பத்தையும் கரங்களில் முன்போல் ஏந்திக் கொண்டு, தட்டையான பாறையில் முழந்தாழிட்டு..

“ நன்றியற்ற மனிதரால் சகிக்கக் கூடாத விதமாய் அவசங்கைப் படுத்தப்படுகிற சேசுக்கிறிஸ்துநாதருடைய திருச்சரீரத்தையும், திருஇரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்காகப் பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்.” என்றார்.

லூசியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரும் திருஅப்பத்திலிருந்து துளிர்த்த இரத்தம் பாத்திரத்தில் விழுவதைப் பார்த்தார்கள். வானதூதர் திவ்விய நற்கருணை அப்பத்தை லூசியாவின் நாவில் வைக்க அவள் அதை உட்கொண்டாள். பிரான்சிஸுக்கும், ஜஸிந்தாவுக்கும் பாத்திரத்தில் இருந்த திருரத்தத்தை பானம் பண்ணக்கொடுத்தார். இவ்விருவருக்கும் இதுவே புது நன்மையாயிருந்தது.

பின்னர் மீண்டும் தூதன் சாஷ்ட்டாங்கமாக விழுந்து அதே ஜெபத்தை மும்முறை சொல்லி ஜெபித்தார். இப்போது குழந்தைகளும் அவருடன் சேர்ந்து ஜெபத்தை சொன்னார்கள். இதன்பின் வானவர் சூரிய ஒளியில் கலந்து மறைந்து விட்டார்.

வானவர் போனபின் குழந்தைகள் மூவரும் அவர் கற்றுக் கொடுத்த இரண்டு ஜெபங்களையும் ஒன்றாக்கி அதைப் பல தடவைகள் சொல்லி மன்றாடினார்கள். இந்தக் காட்சியில் சர்வேசுவரன் அவர்களுடன் இருந்த உணர்வு எவ்வளவு அதிகமாயிருந்தது என்றால் தங்கள் உடலை உதறிவிட்டது போல் தோன்றியதாக லூசியா கூறியுள்ளாள்.

அந்தி நேரம் மங்கியது. பிரான்சிஸ்தான் அத்தெய்வீக மயக்கத்திலிருந்து முதலில் தெளிந்து எழுந்து மற்ற இருவரையும் அழைத்தான். மூவரும் மிகவும் களைத்துப் போயிருந்தனர். ஒரு இனிமை நிறைந்த பலவீனத்தில் காணப்பட்டனர். ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

பல நாட்களாக, வாரங்களாக, இந்த மதுரமான சோர்வு அவர்களை ஆட்கொண்டிருந்தது.

“ தூதனைப் பார்க்க எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் அதில் அதிக கஷ்ட்டமானது என்னவென்றால், அதற்குப் பிறகு நம்மால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. என்னால் நடக்கக் கூட முடிவதில்லை. எனக்கு என்ன நேர்ந்தது என்றே தெறியவில்லை “ என்றான் பிரான்சிஸ்.

பிரான்சிஸ் பலம் தேறியபின் லூசியாவிடம்:

“சம்மனசானவர் உனக்கு திவ்ய நற்கருணைத் தந்தார். ஆனால் எனக்கும், ஜஸிந்தாவுக்கும் அவர் தந்தது என்ன? “ என்று கேட்டான்.

லூசியா பதில் கூறும் முன் ஜஸிந்தா குறிக்கிட்டு, “ அதுவும் நற்கருணைதான். ஏன் நீ பார்க்கவில்லையா? திரு அப்பத்திலிருந்து வடிந்த இரத்தம்தானே அது? “ என்றாள்.

“ ஆம் ! கடவுள் என்னில் இருந்தார் என்று நான் உணர்ந்தேன். ஆனால் அது எப்படி என்றுதான் எனக்குத் தெறியவில்லை.” என்றான் பிரான்சிஸ்.

இதைச் சொன்னவன் தரையில் சாஷ்ட்டாங்கமாய் விழுந்து வானவன் சொன்ன இரண்டாம் ஜெபத்தை (மகா பரிசுத்த தமத்திருத்துவமே..) நெடு நேரம் சொல்லி ஜெபித்துக்கொண்டிருந்தான்.

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல்..

சிந்தனை : சிறுமி ஜஸிந்தாவின் ஞானத்தைப் பார்த்தீர்களா..? எப்படி கண்டு பிடிக்கிறாள்.. திருரத்தமும் திவ்விய நற்கருணைதான் என்று. இந்த 6 வயசு சிறுமிக்கு இந்த ஞானம் எங்கிருந்து வந்தது..? கடவுள் மேல் கொண்டுள்ள அளவற்ற நேசமே இதற்குக் காரணம்.. ( நாம் எங்கே..?)

சரி இப்போது வானதூதருக்கு வருவோம்..

நற்கருணை ஆண்டவரை அந்தரத்தில் நிறுத்தி விட்டு கடவுளுக்கு அருகில் இருக்கும் இந்த தூதர் எத்துனை சாஷ்ட்டாங்கமாக விழுந்து நம் கடவுளை வணங்குகிறார்.. ஆராதிக்கிறார்..

வானதூதர் கற்றுக்கொடுத்த இரண்டாம் ஜெபத்தில்..( மகா பரிசுத்த தமத்திருத்துவமே.. ) இதிலிருந்து என்ன தெறிகிறது திவ்ய நற்கருணையில் இருப்பது யார்? மூவொரு கடவுள்... பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர்.. இந்த இரகசியம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது..

அடுத்ததாக வானதூதர் உச்சரித்த வார்த்தைகளை கவனித்தீர்களா?

“ நன்றியற்ற மனிதரால் சகிக்கக் கூடாத விதமாய் அவசங்கைப் படுத்தப்படுகிற சேசுக்கிறிஸ்துநாதருடைய திருச்சரீரத்தையும், திருஇரத்தத்தையும்...

சகிக்க கூடாத விதமாக அவசங்கை.. சொல்லப்பட்ட ஆண்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக.. அப்படியானால் இன்றைய நிலையைப் பற்றி மீண்டும்... மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

ஆனால் நாம் நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்...

மூவொரு கடவுளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்...

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!