தேவத் திரவிய அநுமானங்கள்

பாவசங்கீர்த்தனம், தேவநற்கருணை ஆகிய தேவத்திரவிய அநுமானங்களை அடிக்கடியும், அவஸ்தைப் பூசுதலை அவசர நேரத்திலும் தவறாமல் பெறுவது ஆத்துமத்தை எப்போதும் உயிரோடு வைத்திருக்கும் உபாயமாக இருக்கிறது. 

அர்ச்சியசிஷ்டவர்களில் சிலர் அநுதினமும் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள். சாவான பாவங்களின் மன்னிப்புக்காக அல்ல, அபூர்வமாக எப்போதாவது தங்கள் ஆத்துமங்களில் அற்பப் பாவம் என்னும் தூசி படிந்தால், அதை சுத்திகரித்துக் கொள்ளும்படி அப்படிச் செய்தார்கள். 

பாவசங்கீர்த்தனம் அவர்களுக்கு பரிசுத்ததனத்தின் கருவியாகவும், தேவ வரப்பிரசாதத்தின் அற்புத வாய்க்காலாகவும் இருந்தது.

ஆனால் இன்று, கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர் இந்த அற்புதமான அனுமானத்தை, தேவ திரு இரத்தம் நிறைந்து, செந்தூரம் போன்ற பாவத்தால் சிவந்திருக்கும் ஆத்துமத்தை வெண்பனி போல சுத்தமுள்ள தாக்கும் அதிசயத் தடாகத்தை, ஒருபோதும் நினையாமல், பாவத்திலேயே நிரந்தரமாக ஜீவித்து வரும் அவலநிலையே எங்கும் காணப்படுகிறது. இந்த உத்தமமான சாதனத்தை குருக்கள் முதலாய் பரிகசிக்கும் பரிதாப நிலை கூட இன்று நிலவுகிறது.

இதற்கு மாறாக, இதுவரை நாம் விவரித்துள்ள கொடிய நரகத்திலிருந்து மெய்யாகவே உன்னைக் காத்துக் கொள்ள விரும்புவாயென்றால், உடனே பாவசங்கீர்த்தனத் தொட்டிக்கு வந்து, உன்னுடைய திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் உன் ஆத்துமத்தைக் கழுவும்படி அதை அவரிடம் கையளிப்பாயாக. 

முடிந்த வரை சாவான பாவத்தை விலக்குவதில் விழிப்பாயிருந்து போராடு. ஒருவேளை அதில் விழும் நிர்ப்பாக்கியம் நேரிடுமானால், தாமதமின்றி உத்தம மனஸ்தாபத்தோடும், இனி பாவம் செய்வதில்லை என்ற உறுதியான பிரதிக்கினையோடும் குருவிடம் வந்து உன்னைத் தூய்மையாக்கிக் கொள். அப்போது நீ பத்திரமாயிருப்பாய். 

மரணம் எப்போது நேரிட்டாலும் அது உன் நித்திய பேரின்பத்தின் தொடக்கமாயிருக்கும்.