கடுங்குளிர், காரிருள்!

கடுங்குளிர்

நரகத்தில் நெருப்பின் வேதனை மட்டுமல்ல, கடுங்குளிரும் ஆன்மாக்களை வாதிக்கிறது என்பது பெரும்பாலான கத்தோலிக்கர்கள் கூட அறியாத விஷயம்.

அர்ச். பீட் என்பவர் பின்வரும் சரித்திரத்தைக் கூறுகிறார்:

த்ரிதெல்முஸ் என்னும் பேருள்ள ஒரு மனிதன் இருந்தான். இவன் ஒருமுறை கடும் நோயுற்று இறந்து போனதாக எண்ணப்பட்டான். ஆனால் சகலரும் வியக்கும் வண்ணம் மறுநாள் காலையில் அவன் தன் நோய்ப் படுக்கையினின்று எழுந்து நின்று, தான் முன்பு நடத்தின ஜீவியத்திலிருந்து வேறுபட்ட ஒரு ஜீவியத்தை நடத்தும்படி கடவுள் தன் வாழ்நாளை அதிகரித்துத் தந்தருளினார் என்று அறிவித்தான்.

அதன்பின் தன் சொத்து முழுவதையும் தன் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தான். இவ்வாறு தன்னையே வெறுமையாக்கிக் கொண்டான். அதன்பின் முற்றிலும் வேறான ஒரு ஜீவியத்தைத் தொடங்கினான். 

ஓர் ஆற்றங்கரையில் ஒரு சிறு கூடாரத்தில் தன்னை வைத்து அடைத்துக் கொண்டான். குளிர்காலத்தில் ஆற்றின் பனிக்குளிர்ச்சியுள்ள தண்ணீரில் கழுத்தளவு ஆழத்தில் இரவு முழுவதும் நிற்பான். உடல் நடுங்கி, முழுவதும் மரத்துப் போகும். உடனே கொதிக்கிற நீரில் தன்னை அமிழ்த்திக் கொண்டு, அது தரும் வேதனையால் கதறித்துடிப்பான்.

ஏன் இப்படிச் செய்கிறான் என்று மற்றவர்கள் கேட்ட போது அவன் பதிலளித்தான்: "மறு உலகத்தில் ஆத்துமங்கள் உக்கிரமாய் எரிகிற அக்கினியிலிருந்து எடுக்கப்பட்டு, பனிக் குளிருக்குள் வீசியெறியப் படுகிறார்கள், அதன்பின் அவர்கள் மீண்டும் அங்கிருந்து சுட்டெரிக்கும் சுவாலைகளுக்குள் வீசப்படுவதை நான் பார்த்தேன். 

மனித கற்பனைக்குள் அடங்காத பயங்கரம் இது. அவர்கள் தாங்க வேண்டியிருந்த வேதனையோடு ஒப்பிடும்போது என் வேதனை ஒன்றுமேயில்லை!"

காரிருள்

"இவனுடைய கால்களைக் கட்டி இவனை வெளியே இருளில் தள்ளுங்கள் " (மத். 22:13; 25:30). என்று அரச மகனின் திருமண உவமையில் ஆண்டவர் கூறுகிறார். 

நரக நெருப்பு சுடராமல் எரிவதாகும். அங்கு தொட்டுணரக்கூடிய இருட்டு நிலவுகிறது. பாரவோன் அரசனின் கடினப்பட்ட இருதயத் திற்குத் தண்டனையாக தொட்டு உணரத் தக்க இருளை ஒரு வாதையாக சர்வேசுரன் எகிப்தின்மீது சுமத்தினார். இந்த அகோரமான காரிருளால் எகிப்தியர்கள் ஒருவரை ஒருவர் காண முடியாமலும், ஒருவனும் தான் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமலும் போயிற்று (யாத்.10:22,23). ஆனால் இந்த இருள் மூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது.

முழுமையான இருளுக்குள் அடைந்து கிடப்பது, மனிதனைப் பைத்தியமாக்கி விடக்கூடிய பயங்கரமான வாதையாகும். நரக இருளோ நித்தியத்திற்கும் நீடிப்பது. மூச்சைத் திணறடிப்பதும், ஒவ்வொரு விநாடியும் கடும் திகிலை உண்டாக்குவதுமான இருட்டு அது.

அர்ச். பெரிய தெரேசம்மாள் ஒரு காட்சியில் தான் நரக நெருப்பில் மூழ்கியிருந்ததாகக் கண்டாள். “அந்தக் கொள்ளை நோய் பரவியிருந்த இடத்தில் என்னால் உட்காரவோ, படுக்கவோ முடியவில்லை, அதற்குப் போதிய இடமில்லை. சுவரிலுள்ள ஒரு துளையில் நான் திணிக்கப்பட்டிருந்ததாக உணர்ந்தேன். அதன் சுவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை நெருக்கி, என்னை மூச்சுத் திணறச் செய்தன. 

அங்கே வெளிச்சமும் இல்லை. எல்லாமே அடர்த்தியான, தொட்டு உணரக்கூடிய இருளாக இருந்தது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை: அங்கே வெளிச்சமே இல்லை என்றாலும் வேதனை தரக்கூடிய எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது” என்று எழுதி வைத்திருக்கிறாள்.

"கன்னங்கரேறென்று மரண இருளுள்ளதும், சாவின் நிழல் சூழ்ந்ததும், அலங்கோலம் நிறைந்ததும், நித்திய பயங்கரம் குடிகொண்டிருக்கிறதுமான தேசம்..." (யோபு. 10:21).

ஆண்டவரின் நாள்... இருளும் அந்தகாரமும் அடர்ந்த நாள்; கார்முகிலும், கடும்புயலும் சூழ்ந்த நாள்... அவர்கள் அழிந்து போக, அவர்களது துர்நாற்றம் எழும்பும்; அவர்களது அழுகல் மேலெழும்பும் (யோவேல்.2:2,20).

"இராச்சியத்தின் மக்களோ புறம்பான இருளிலே தள்ளப் படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்" (மத். 8:12).