அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-9

“ அருளப்பர் அவரிடம், "போதகரே, நம்மைச் சாராத ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு, அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்றார்.” மாற்கு 9: 38

புனித மாற்கு நற்செய்தியாளருக்கு ஒரு கோவிலே கட்ட வேண்டும்.. ஒரு  மிகப்பெரிய நன்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்தான் நம் புனித சந்தியாகப்பரைப் பற்றி அதிகமாக குறிப்பிட்டிருக்கிறார்..

இப்போது இப்பகுதியைப் பற்றி தியானித்தால் அதன் பின்னால் இருக்கும் ஒரு சில உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்..

அவர் “ தடுக்கப்பார்த்தோம் “ என்று பன்மையில் சொல்லியிருப்பதால் அவர்கள் இருவராக இருந்தால் அதிலும் யாகப்பர் இருப்பார். அவர்கள் நால்வராக இருந்திருந்தால் அதிலும் யாகப்பர் இருப்பார். நால்வர் என்றால் கண்டிப்பாக நால்வர் பெயர்களை சொல்லியிருக்க அல்லது எண்ணிக்கையை சொல்லியிருக்க வாய்ப்பு அதிகம்.

மேலும் அவன் நம்மைச் சாராதவன் என்று சொல்லியிருக்கிறார்.. ஏற்கனவே அவர் அருகில் 12 பேர்கள் இருக்கும்போதே எங்களுள் ஒருவர் உம் வலப்பக்கமும், ஒருவர் இடப்பக்கமும் அமர வேண்டும் என்று இயேசு ஆண்டவரிடம் சீட்டு கேட்டவர்கள் இவர்கள். இப்படி இருக்கும்போது ஆண்டவர் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒருவன் பேய் ஓட்டினால் இவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன?

இவர்கள்தான் இடியின் மக்களாச்சே! ஏற்கனவே ஆண்டவர் இயேசுவை ஏற்காத சமாரியர்களுக்கு எதிராக பொங்கி எழுந்தவர்களாச்சே..

சரி இப்போது தியானத்திற்கு வருவோம்..

அதாவது நாம்தான் ஆண்டவருடைய சீடர்கள்… நாம்தான் பேய்கள் ஓட்ட வேண்டும்.. நாம்தான் நற்செய்திப் பணி செய்ய வேண்டும் நமக்குத்தான் முதல் உரிமை ஆண்டவர் பெயரைச் சொல்லி பேய் ஓட்ட இவர்கள் யார் என்ற எண்ணம். மற்றொன்று வேறுயாரும் நம் ஆண்டவருக்கு அவர்கள் போட்டியாக வந்துவிடக் கூடாது.. ஆண்டவருடைய பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்ற நியாயமான எண்ணமும் இருந்திருக்கலாம்..

முதல் பகுதியையே நாம் இப்போது தியானிக்க எடுப்போம்..

நாம் நிறைய விசயத்தில் இவர்களைப்போல நாம் நடந்து கொண்டுதான் இருக்கிறோம்..

1. ஜாதி ரீதியாக எங்களுக்குத்தான் முன்னுரிமை என்பது..

2. பரம்பரை அல்லது ஊர்க்காரர்கள்.. இத்தனை வருஷமாக இருக்கிறோம் என்று முன்னுரிமைக்காக போராடுவது..மற்றும் அடுத்தவரை ஏளனமாக பார்ப்பது..

இதில் முதலாவது மிக மிக கேவலமானது.. ஆண்டவருக்கு முன் மிக அருவருப்பானது.. ஜாதியை யாராலும் ஒழிக்க முடியாது.. சமூகமாக வாழ்வது.. திருமன பந்தங்கள்.. சொந்தபந்தமாக குழுவாக .. குடும்பங்களாக வாழ்வதில் தவறில்லை..

ஆனால் அந்த எல்லைக்கோட்டைத் தாண்டி வந்து எங்கள் ஜாதிதான் உசத்தி.. என்று சொல்லி ஜாதி ரீதியாக சண்டைபோடுவது.. அதில் உயிர் இழப்புகள் நேரிடுவது கடவுள் முன் மிக மிக அருவருப்பானது..

அப்படிப்பட்டவர்கள் கடவுள் முன்னால் அதிகமான கேள்விகளையும்..மிகப்பெரிய நெருக்கடியையும் சந்திக்க வேண்டியிருக்கும்..

ஆண்டவர் முதலில் இஸ்ராயேல் மக்களுக்குத்தான் நற்செய்தி என்று சொன்னாலும் பின் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தி அறிவித்தார்.. எல்லாரையும் அரவணைத்தார்.. புற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்க புனித சின்னப்பரைத் தேர்ந்தெடுத்தார்.. இன்று நாமெல்லாம் கிறிஸ்தவர்கள்..

ஆண்டவர் பிரிவினை பார்த்திருந்தால் நமக்கு மீட்பே கிடைத்திருக்காது..

ஜெபம் : எங்கள் பாசமிகு பாதுகாவலரே ! நீர் முதலில் ‘எங்களுக்குத்தான் எல்லாம் உரிமை ‘ என்று குரல் கொடுத்திருந்தாலும். இயேசு தெய்வத்தின் சிலுவை மரணம் உயிர்ப்பிற்கு பின்.. உம்மை முற்றும் முழுவதும் மாற்றி..

“ உரிமை என்பது ஆண்டவர் இயேசுவின் சாட்சியாக வாழ்வதுதான் முதல் உரிமையாக இருக்க வேண்டும் “ என்று அவருக்காக மட்டுமே உழைத்து ஆன்மாக்களை சொந்தமாக்கிக் கொண்டீர்..

நாங்கள் எத்தகைய குறுகிய வட்டத்திற்குளும் சிக்கிவிடாமல் உம்முடையை உள்ளத்தைப் போல கள்ளம் கபடமில்லாமல் பரந்து விரிந்து எல்லாரையும் நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளும் வரத்தையும் பெற்றுத்தாரும்.. என்/எங்கள் உள்ளத்தில் ஜாதிவெறி இருந்தால் அதை உடனே தூக்கி எரியும் வரத்தைத்தாரும்..

“ கடவுள் முன் எல்லாரும் சரிசமம் “ என்று எண்ணும் மனதினைப் பெற்றுத்தாரும்.. எங்கள் அருமைப் புனிதரே.. ஆமென்..

கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் வருவேன் படைமிரட்டியின் துணையோடு..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !