பாத்திமா காட்சிகள் பகுதி- 4

புனித சிறுமி லூசியா - தொடர்ச்சி

லூசியாவின் தந்தை அந்தோணி சாந்தோஸ் வயது முதிர முதிர வேண்டாத குடிப்பழக்கத்தில் விழுந்தார். இதனால் லூசியாவின் தாய் மரிய ரோஸா குடும்பத்தை நடத்த மிக கஷ்ட்டப்பட்டு உழைக்க வேண்டியதாயிற்று. பக்கத்து வீடுகளில் போய் வேலை செய்ய நேர்ந்தது. ஆதலால் வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பும், வயல் வேலை செய்த லூசியாவின் தமையன் மனுவேலுக்கு உதவி செய்யும் பொறுப்பும் குடும்பத்திலிலுள்ள மூத்த பெண்மக்கள் மீது விழுந்தன.

லூசியாவுக்கு மூத்தவளான கரோலின் இதுவரையிலும் பத்து பன்னிரெண்டு செம்மறி ஆடுகளையும், ஒன்றிரண்டு வெள்ளாடுகளையும் மேய்த்து வந்தாள். லூசியாவுக்கு வயது ஏழுதான். ஆயினும் வயதை விட அதிகமாக வளர்ந்திருந்ததால் மரிய ரோசா அவளுக்கு வேலை கொடுக்க தீர்மானித்தாள். கரோலின் தையல், நெசவு போன்ற வருமானம் தரும் வேலைகளைச் செய்யவும், லூசியா ஆடுகளை மேய்க்கவும் என்று முடிவாயிற்று.

லூசியாவுக்கு ஒரே மகிழ்ச்சி ! ஆனால் பிரான்சிஸும், ஜஸிந்தாவும் அவள் தங்களை விட்டு பகல் முழுவதும் காட்டில் ஆடு மேய்க்கச் செல்வதை சற்றும் விரும்பவில்லை. விளையாடவும், கதைகள் சொல்லவும் இனி யார் இருக்கிறார்கள் என்று கவலைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் தாய் ஒலிம்பியாவிடம் சென்று லூசியாவுடன் தாங்களும் ஆடு மேய்த்து வர உத்தரவு கேட்டார்கள். பிரான்சிஸ் வயது 6. ஜஸிந்தா வயது 4. “ இந்தச் சிறு வயதில் நீங்கள் எங்கும் போகக்கூடாது “ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.

லூசியா ஒரு நீளக் கோலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடுகளுடன் புறப்பட்டாள். ஊரைத் தாண்டி மலைச் சரிவுகளிலும், பரந்த வெளிகளிலும் ஆடுகளை மேய்த்து வந்தாள். அங்கு அவளைப் போல் வேறு சிறுமிகளும் ஆடு மேய்க்க வந்ததால் லூசியா தனிமையாக அலைய வேண்டியிருக்கவில்லை. ஆடுகள் கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு மொத்தமாக மர நிழலில் படுத்து அசை போட ஆரம்பிக்கும். அப்போது இந்த இடைச் சிறுமிகள் கூடி விளையாட நல்ல நேரம் கிடைக்கும்.

லூசியா தன் தந்தைக்குச் சொந்தமான புன்செய் நிலங்கள் உள்ள கோவா தா ஈரியா ( இங்குதான் மாதா காட்சி கொடுத்தார்கள்)  என்னும் இடத்திற்கு ஆடுகளை அடிக்கடி இட்டுச் செல்வாள். ஆடு மேய்க்கும் சிறுமிகள் இந்த இடத்தை ஏனோ விரும்பினார்கள். கோவா தா ஈரியா ஒரு திறந்தவெளி நிலம். நிறைய ஒலிவ மரங்கள் அங்கு உண்டு. இவற்றினூடே ஆங்காங்கே கரும்பச்சை நிறமான ஹோம் ஓக் இனத்தைச் சேர்ந்த அடர்ந்த குட்டையான மரங்களும் உண்டு. இதில் அஸின்ஹெரா ( இந்த மரத்தின் மேல்தான் மாதா காட்சி கொடுத்தார்கள்) என்ற வகை மூன்று முதல் ஆறடி உயரம் வரை வளரும். அந்த இடம் முழுவதும்செம்மண் களிநிலம். அதில் ஈரச்சத்து உண்டு..

இந்த இடங்களில் ஆடுகளை மேய்த்து, அமைதியில் உலவி சுதந்திரமாக நடனமாடினர் இவ்விடைச் சிறுமியர். அவர்களுக்கே உரிய மகிழ்ச்சியுடன் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவார்கள்.. சிலர் ஆடுவார்கள்.. பொழுது போவதே தெறியாது.. பாடுவதிலும், ஆடுவதிலும் லூசியாதான் முன்னிற்பாள் என்று அவளுடன் ஆடுகளை மேய்த்த தெரசாள் தன் பிந்தைய காலங்களில் ஒன்பது குழந்தைகளுடன் தாயாயிருக்கையில் கூறியுள்ளார்...

அவர்கள் பெரும்பாலும் என்ன மாதிரி பாடல்கள் பாடினார்கள்.. உதாரணம்..

மரியெனும் நாமம்
அழகிய நாமம் !
என்னை மீட்பாய்
யான் உன் சொந்தம்...

கார்மேல் அன்னாய்
தா உன் அருளை !
ஊன்னை வாழ்த்திட
மூன்று வேளை...

வாழ்த்திப் போற்றி
நானும் ஜெபிப்பேன்
கார்மேல் அன்னாய்
தா உன் அருளை..

மோட்சத்திற்கு மூன்று வணக்கங்கள்,

சிலுவையின் பாரத்தை நினைத்தபடி!

மும்முறை வேண்டுங்கள்: சேசு காப்பாற்றும்!

சேசு காப்பாற்றும் !! சேசு காப்பாற்றும் !!!

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !