சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 03

இஸ்ராயேலருக்குத் தங்கள் அபத்த போதகங்களை போதித்துக்கொண்டு வந்த வேதபாரகரைக் கண்டித்து ஆண்டவர் சொல்கிறார் 

“கள்ள ஞானிகளாகிய வேத பாரகரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் நீங்கள் மனிதர்களுக்கு மோட்ச இராச்சியத்தை அடைத்துப் போகிறீர்கள்; நீங்களும் அதில் பிரவேசிக்கிறதில்லை, பிரவேசிக்கிறவர்களையும் பிரவேசிக்க விடுகிறதில்லை ” என்றார் (மத். 23:13). 

பசாசு பிடித்திருந்த குருடும் ஊமையுமாகிய ஒருவனை குணமாக்கி, அவன் பார்வையடையவும், பேசவும் சேசுநாதர் செய்தபோது, பரிசேயர் இவன் பசாசுகளின் தலைவனாகிய பேயல்செபூபைக் கொண்டு பசாசுக்களைத் துரத்துகிறானொழிய மற்றப்படியல்ல என்றார்கள். சேசுநாதர் அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, அவர்களுக்குச் சொன்ன தாவது: ...ஆனால் நான் சர்வேசுரனுடைய இஸ்பிரீத்துவினால் பேய்களை ஓட்டுகிறேனாகில், சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களிடத்தில் வந்துவிட்டது” என்றார் (மத். 12:22, 28) 

இவ்விதமாக கிறீஸ்து இராஜாவானவர் தமது இராச்சி யத்தைப்பற்றிப் பேசும்போதும், போதிக்கும்போதும், மோட்ச இராச்சியம், சர்வேசுரனுடைய இராச்சியம், பரமண்டலங்களி லிருக்கிற பிதாவின் இராச்சியம் என்று வெளிப்படையாக எப்போதும் சொல்லுகிறாரொழிய இஸ்ராயேல் இராச்சியம், யூதர் இராச்சியம், உரோமையர் இராச்சியம் அல்லது வேறெந்த பூலோக இராச்சியத்தைப்பற்றியும் மறைவாகவேனும் வெளிப் படையாகவேனும் என்றும் கூறவேயில்லை. ஆகையால் கிறீஸ்து இராஜாவின் இராச்சியம் பரலோக இராச்சியம் என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது. 

இந்த இராச்சியமோ சகல நன்மையும் நிறைந்து மனிதனுக்குக் கிட்டக்கூடிய சகல பாக்கியங்களின் சம்பூரணமாய்த் துலங்குகிறது. மற்றவை ஒன்றும் இதற்கு நிகரல்ல என்று தமது சீஷர்களுக்கும் மற்றவர்களுக்கும் பல உவமைகளால் இவ்விராச்சியத்தின் மாட்சிமையை நமதாண்டவர் எடுத்துக் காட்டியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை மாத்திரம் இங்கு எடுத்துரைப்பது போதும் 

மோட்ச இராச்சியம் ஆனது தன் வயலில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. நல்ல விதை பரலோகத்தின் புத்திரராம். தகரைகளோ தீயோனுடைய மக்களாம்” (மத்.13;24,38). 

பரலோக இராச்சியம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வர்த்தகனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையேறப்பெற்ற ஒரு முத்தைக் கண்ட மாத்திரத்தில் போய், தனக்குண்டான யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறான். 

பரலோக இராச்சியம் ஓர் நிலத்தில் புதைந்திருக்கிற புதையலுக்கு ஒப்பாயிருக்கின்றது. அதைக் கண்ட மனிதன் அதை மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினால் போய் தனக்குள்ள யாவையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறான்.” “அல்லாமலும் பரலோக இராச்சியம் கடலில் வீசப்பட்டு எவ்வகை மச்சங்களையும்( மீன்களையும்) சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபின் வெளியில் இழுத்து கரையில் உட்கார்ந்து நல்லவைகளைத் தெரிந்தெடுத்து, பாத்திரங்களில் வைத்துக்கொண்டு, ஆகாதவைகளைப் புறம்பே எறிந்து விட்டார்கள்'' (மத். 13:44-48). 

மேற்கூறியவையன்றி, இன்னும் பல உவமைகளாலும் நமதாண்டவர் தாம் பிரசங்கிக்க வந்த தமது பிதாவின் பரலோக இராச்சியத்தின் இயல்பைத் தமது சீடர்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அறிவிக்கச் சித்தமானார். 

தொடரும்...