மாதாப்புனிதர் : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்

மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 11 : சிறு வயதிலேயெ ஆன்மீகம் கற்றுத்தரப்படுவது குழந்தைகளுக்கு முக்கியம்..

பிறந்த அடுத்த நாளே ஞானஸ்நானம் பெற்றார். பிற்காலத்தில் உறுதி பூசுதல் பெற்ற சமையத்தில் ‘ மரி ’ என்ற பெயரை, மாதாவின்பால் தமக்கிருந்த விசேஷ பக்தியின் அறிகுறியாக, தாமே தமக்கு சூட்டிக்கொண்டார்.

மாதாவின் மீது மிகுந்த பற்றுதலும் பக்தியும் சிறு வயதிலிருந்தே காணப்பட்டது. தாய்ப்பாலிலிருந்தே இந்தப் பக்தியைப் பருகினான் என்று சொல்லலாம். மரியாயின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சொல்லக்கேட்டபோது பையன் பரவசமடைவான். தெருக்கள் ஊடே ( அக்காலத்து அருமையான வழக்கப்படி) நிறுவப்பட்டிருந்த மாதாவின் சுரூபங்களைக் காணும்போதெல்லாம் மரியாதை செலுத்தாமல் தாண்டிப்போனதில்லை. ஆலயங்களில் மாதாவின் சுரூபத்தின் முன் முழந்தாலிட்டு ஜெபிப்பதில் விசேச இன்பம் காண்பான்.

தவறானது, பாவத்திற்கு ஏதுவானது, அசுத்தமானது எதுவும் தன்னை அனுகலாகாது தன் ஆன்மாவை மாசுபடாமல் காக்க வேண்டும். புனிதத்தின் நிறைவை அடைய வேண்டும் – இக்கருத்துக்களே அவனுடைய ஜெபத்தின் நோக்கம். இதையே அவன் ஓயாமல் கேட்டு வந்தான். இங்கனம் மாதாவின் மீது ஆழ்ந்த பக்தியும், பற்றுதலும் காட்டியது பிற்காலத்தின் அவனை மாதாவின் விசேச அப்போஸ்தலனாக மாற்றியதில் வியப்பில்லை.

தன் தம்பி தங்கைமாரிடமும் முதலில் இந்த மாதா பக்தியைத் தூண்டிக் கொண்டேயிருந்தான். தன் இருதயத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த அந்த பக்தியை அவர்களும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதிலிருந்தே லூயி த மரி மான்போர்ட் மாதாவின் தூதன் எனப்பெயர் பெற தகுந்தவனானான்.

அவர் மிகவும் நேசித்த தங்கையான லூயிஸ் கியோனனை தனியாக அழைத்துக் கொண்டுபோய் ஜெபமாலை சொல்வது வழக்கம். தங்கையின் கவனம் சில சமையங்களில் விளையாட்டில் இருந்தால், அண்ணண் சிறு சிறு நன்கொடைகள் கொடுத்து பிரியப்படுத்துவதுண்டு.. அதோடு, 

“ என் அருமைத் தங்காய், இப்படி ஜெபம் செய்தால் நீ மிகவும் அழகாயிருப்பாய். நம் ஆண்டவரை அதிகமாக நேசித்தால் எல்லாரும் உன்னை நேசிப்பார்கள் “ என்று மனம் கவரப்பேசுவான்..

இவ்விரு குழந்தைகளின் மழலைச் செபங்களையும் இப்படி உறையாடுவதையும் கேட்ட இறைவனின் உள்ளம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா ! மாசற்ற நெஞ்சங்களை நேசிக்கும் இறைவன் திருமுன் இந்த மாசற்ற குழந்தைகள் எவ்வளவுக்கு அன்பிற்குரியவர்களாயிருப்பார்கள் !

லூயி மரியின் நெஞ்சம் விசேசமாகவே இறையன்பால் விரைவாகவே நிரப்பப்பட்டதைக் காண்கின்றோம்…