அன்னை மரியாள் அருள் நிறைந்தவளா? அருள் மிகப்பெற்றவளா?

அருள் நிறைந்தவள் என்பதற்கும் அருள் மிக பெற்றவள் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. அருள் நிறைந்தவள் என்றால் அருள் மட்டுமே நிறைந்தவள் அருளால் நிறைந்தவள் என்று பொருள். அருள் மிகப்பெற்றவளே என்றால் மற்றவரைவிட கொஞ்சம் அதிகமாக அருள் பெற்றவள். இதில் வெற்றடம் இருக்க வாய்ப்புள்ளது.

அப்படியென்றால் பிதாவாகிய கடவுள் சொன்னது பொய்யா? கபரியேல் தூதரிடம் மரியாளைப்பார்த்து “ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே என்று சொல்லச்சொன்னது கடவுள் சொன்ன வார்த்தைதானே? அப்படியென்றால் கடவுள் குடிகொள்ளும் இடம் அருள் நிறைந்த்தாக இருக்குமா ? அல்ல அருள் கொஞ்சம் அதிகமான அருள் உள்ள இடமாக இருக்குமா?

அடுத்து பரிசுத்த ஆவியானவரின் வாழ்த்தான “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! என்றால் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீர் ஒருவரே என்று பொருள்.

“ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே !” அப்படியானால். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு எலிசபெத்தம்மாள் சொன்னதற்கு அர்த்தம் அன்னைக்கு மற்ற எல்லாரையும்விட கொஞ்சம் அருள் ஜாஸ்தி என்றா அர்த்தம்.

நாம் எப்படி இப்படி சொல்ல துணிகிறோம்? யார் சொல்லச்சொன்னால்தான் என்ன ? நாம் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும். அன்னையின் மகிமையை குறைக்கலாமா? அந்த ஆண்டவரின் மகிமையை குறைக்கும் செயல் அல்லவா?

எங்கெல்லாம் அன்னையின் மரியாதையும், மகிமையும் குறைக்கப்படுகிறதோ அங்கே நம் பிதாவாகிய ஆண்டவர், சுதனாகிய ஆண்டவரின் மகிமையும் குறைக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

யார் எதைச் சொன்னாலும் சொல்லிவிடுகிறோம். யார் எதை செய்யச்சொன்னாலும் செய்து விடுகிறோம். நாமே நம் அன்னையின் பெருமையைக் குறைக்கலாமா? அப்படிச் சொல்லும்போது நம் நாவு கூசவில்லையா?

தயவு செய்து அன்னையின் மகிமையை யாரும் குறைக்காதீர்கள்.

சாத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நம் கத்தொலிக்கத்தை அழிக்கப்பார்க்கிறான். ஆனால் அன்னை விட மாட்டார்கள். நாம் அன்னையின் கரத்தை வலுப்படுத்த ஜெபமாலை சொல்லுவோம். தூய தமிழ் என்ற போர்வையில் வந்தாலும் பொருள் மாறினால் அந்த வார்த்தை நமக்குத் தேவையில்லை.

ஆகவே நண்பர்களே தயவு செய்து போராடுங்கள்.

ஒவ்வொரு முறை அருள் நிறைந்த மந்திரம் சொல்லும்போது சாத்தான் தலை சுத்தியலால் அடிக்கப்படுகிறது ஆகவே அவ்வளவு சக்திவாய்ந்த மந்திரத்தின் சக்தியை குறைக்காதீர்கள்.குறைக்கவும் விடாதீர்கள்.

ஜெபமாலை சொல்வோம். சாத்தானை வெல்வோம்.

இயேசுவுக்கே புகழ் !! இயேசுவுக்கே நன்றி !! மரியே வாழ்க !!