உத்தரியம் - பாகம் 08 - புனித சைமன் ஸ்டாக்கிற்கு அன்னையின் காட்சி.

1241 ஆம் ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபுவான தே கிரே பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த சிலுவைப் போரில் பங்கெடுத்து தாய் நாட்டிற்கு திரும்பி வந்த பொழுது, தன்னுடன் பரிசுத்த கார்மல் மலையிலிருந்த துறவிகள் குழுவினரை அழைத்து வந்தார். இங்கிலாந்தை அடைந்தவுடன் அய்ல்ஸ்போர்ட் (Aylesford) நகரத்தில் இருந்த தனது பண்ணை வீட்டினை அத்துறவிகளுக்கு பெருந்தன்மையுடன் பரிசாக அளித்தார்.

இது நிகழ்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வீட்டில் தான், அன்னை இவ்வுலக மாந்தரின் உதவிக்காக அளித்த உத்தரியாமானது புனித சைமன் ஸ்டாக்கிற்கு அருளப்பட்டது. பரிசுத்த கன்னி மாமரி பழுப்பு நிற கம்பளியாலான மேலாடையினை புனித சைமன் ஸ்டாக்கின் கரங்களில் கொடுத்தவாறு,

”மகனே, இது உனக்கும், அனைத்து கார்மல் சபையின் துறவிகளுக்கும் நான் வழங்கும் சிறப்பான சலுகை. இதனை அணிந்து கொண்டு இறக்கும் எவரும் நித்திய நெருப்பினில் துன்புற மாட்டார்கள்”

என்று உறுதியளித்தார்கள். பிற்காலத்தில் அன்னையின் உன்னதமான இச்சலுகையினை, கார்மல் சபையின் பழுப்பு நிற உத்தரியத்தினை எப்பொழுதும் பக்தியோடு அணிந்து கொண்டு, பரிசுத்த தேவதாயாருக்கு தங்களை அர்ப்பணிக்க விரும்பும் அனைத்து பொதுநிலையினருக்கும் ( அதுவும் மாதா வழங்கியதே ) வழங்கி மகிழ்வுற்றது.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள், தங்களது புதுநன்மை நாளில் பழுப்பு நிற உத்தரியத்தினை அணிந்து கொள்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் அதன் சிறப்பினை அறியாமல் மிக விரைவில் அன்னையின் மிகச் சிறந்த இப்பக்தி முயற்சியினை கைவிட்டு விடுகின்றனர். புதிதாக கத்தோலிக்க திருச்சபையில் சேரும் அன்பர்கள், தங்களது விசுவாசத்தினை அறிக்கையிடும் பொழுது (திருமுழுக்கு பெறும் பொழுது) உத்தரியத்தினை அணிந்து கொள்கின்றனர்.

தேவ தாயாரின் இந்த பழுப்பு நிற கம்பளியாலான இரக்கத்தின் ஆடையின் மகத்துவத்தை உணர்ந்து, குருவானவர்

“பரிசுத்தமான இந்த மேலாடையினை அணிந்து கொண்டு, மிகவும் பரிசுத்தமான கன்னி மாமரியின் பேறுபலன்களினால், இதனை எவ்வித பாவ மாசுபடாமல் அணிந்திருக்கவும், உம்மை எல்லாவித கேட்டினின்றும் பாதுகாத்து, அன்னையே உம்மை நித்திய வாழ்விற்கு வழிநடத்தவும் மன்றாடுவீராக.”  என கூறியபடியே அதனை அவர்களுக்கு அணிவிக்கின்றார்.