தேவ இரகசியங்கள்.

மூவகை தேவ இரகசியங்கள் உண்டென யாவருக்கும் தெரியும் . சந்தோஷ தேவ இரகசியங்கள் ; துக்க தேவ இரகசியங்கள் ; மகிமையின் தேவ இரகசியங்கள் . செபமாலையில் தியானிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு வகையையும் பொதுவில் எடுத்துக் கொண்டு தான் தியானித்து வந்தனர். 2003 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 'ஒளியின் தேவ இரகசியம் ' என்ற நான்காவது வகை தேவ இரகசியத்தைத் தந்தார்.

எத்தகைய வாழ்க்கை நடை மனிதனுக்குப் பொருந்தியது என்று சந்தோஷ தேவ இரகசியங்கள் காட்டுகின்றன. சேசுநாதர் தெரிந்து கொண்ட வாழ்க்கை என்ன ? எளிய வாழ்க்கை, உழைப்பு மிகுந்த வாழ்க்கை. தொழிலாளியின் வாழ்க்கையும் அத்தோடு சம்பந்தப்பட்ட புண்ணியங்களும் நமக்கேற்றவை . தரித்திரம் என்னும் புண்ணியம், வருந்தி உழைக்கும் புண்ணியம். உழைத்தால் போதாது; திறம்பட உழைக்க வேண்டும் .சுத்தமான வேலை, நல்ல வேலையாய் இருக்க வேண்டும் . ஏனோ தானோ என்ற வேலையை நமதாண்டவர் ஒரு பொழுதாவது செய்திருப்பார் என்று நாம் கனவிலும் கருதக் கூடுமா ? அடுப்பெரிக்கும் சமயம் உட்காரும் முக்காலியாயிருந்தாலும், எவ்வளவு திறமையோடு யேசு அதைச் செய்து முடித்தார் ! எப்பொழுதும் எந்நாளும் எவ்விடத்திலும் அவர் செய்வன திருந்தச் செய்தார் . சேசுவின் வாழ்க்கையை நாம் மறைந்த வாழ்க்கை என்கிறோம் . தாழ்ச்சியும் , நேர்மையும் , பகட்டையும் படாடோபத்தையும் தேடாத் தன்மையும் பெருங்குணங்களாக  விளங்கின . இந்த இரகசியங்களைச் சந்தோஷ தேவ இரகசியங்கள் என்கிறோம். நாம் அவைகளைக் கண்டு பாவிப்போமாகில் இவ்வுலகிலேயே, இவ்வாழ்நாளிலேயே நாம் சந்தோசத்தைக் கண்டடைவோம் .

தற்கால சமூக பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டுமேயாகில் நாசரேத்தூர் வாழ்க்கையை கவனிக்க வேண்டும் என்றார் 13 ஆம் சிங்கராயர் . திருக்குடும்பம் வருவாயைப் பெருக்கத் தேடவில்லை . ஏனெனில் அவர்கள் தங்கள் தங்கள் தேவையைப் பெருக்கத் தேடவில்லை . தங்கள் தேவையைக் குறைத்துக் கொண்டனர். காலை முதல் மாலை வரை கஷ்டப்பட்டு உழைத்தனர் . நசரேத்தூரை கவனித்துப் பார்த்தால், இத்தொழில் அத்தொழில் நலமென்று சிந்தித்து கைகட்டி வேலையில்லாத திண்டாட்டத்தை மனிதர் பெருக்க மாட்டார்கள் . எத்தகைய வாழ்க்கை எனக்கு ஏற்றது என்று அலையாமல் கடவுள் எனக்கு வகுத்த வழி என்ன என்று அறிய ஆசிப்பார்கள் . உணவு, உடை , உறைவிடம் முதலானவைகளில்  'போதுமென்ற மனதே பொன் செய்யும் மருந்து " என்று எண்ணி திருப்திப்பட்டுக் கொள்வார்கள் . நாசரேத்தை நாடிப் போக வேண்டும் .

இயேசுவின் பகிரங்க வாழ்க்கையை விட்டுவிட்டு அவரது மறைந்த வாழ்க்கையிலிருந்து பாடுகளின் வாழ்க்கையை காண செபமாலை நம்மை அழைத்துச் செல்கிறது . எனினும் பகிரங்க வாழ்க்கையின் முதலும் முடிவும் தானே பாடுகள் . பகிரங்க வாழ்க்கையின் சுருக்கம் " அவர் நன்மை செய்து கொண்டே போனார் " . நமக்காக உயிரைக் கொடுத்த அவரது மரணம் , அவரது நன்மைத் தனத்தின் மணிமுடி அன்றோ ? இவ்வுலகில் நாம் முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவைகள் துக்க தேவ இரகசியங்கள் . ஆண்டவர் நமக்கு அனுப்பும் துன்பங்களையும் ஆண்டவருடைய சம்மதத்தால் நமக்கு வரும் சிறுமை , சில்லறை வருத்தம் , வாதனைகளையும் பொறுமையாய் ஏற்றுக் கொண்டு அவருடைய வாதனைகளோடு அவைகளை ஒன்றித்து மனுக்குலத்தின் ஈடேற்றத்துக்காக ஒப்புக் கொடுப்போமாக . இதில் நமக்கு எவ்வளவு மகிமை ! துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிப்பதால் இவைகளைத் தாங்க நமக்குத் தைரியம் வரும்

துக்கத் தேவ இரகசியங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் மேலான பாடம் நமக்கு ஒன்று உண்டு . ஏசுநாதர் வேதனையைத் தெரிந்து கொண்டவர் . ஆதலால் வாதனைப்படுவோர் , துக்கப்படுவோர்களில் நாம் அவரைக் கனப்படுத்த வேண்டும் . அவரது ஞான சரீரத்தில் அவர் இன்னும் வாதனைப்படுகிறார் . நாம் ஞான சரீரத்தின் அங்கமானபடியால் நாம் வாதனைப்பட வேண்டும் . " சவுலே , சவுலே , ஏன் என்னை வதைக்கிறாய் ?" " ஆண்டவரே , நீர் யார் ?" " நீ வதைக்கும் இயேசு நான் தான் "  நாள் கணக்காய் ஆண்டுக்கணக்காய் இதை அலசி ஆராய்ந்து பார்த்து , சேசுவின் ஞான சரீரத்தின் சத்தியத்தின் நன்மையைக் கோருகிறவன் நாசரேத்தில் துவங்கி கல்வாரியிலே ஏற வேண்டும் . சமூக சேவை தேவ அன்பை ஊட்டி வளர்க்கும் . இது கை மேல் கண்ட பலன் . மறு உலகத்திற்குக் காத்திருக்க வேண்டியதில்லை.

இவ்வுலகிலேயே நம் மேல் வெற்றி கொள்ள வேண்டுமென்று மகிமைத் தேவ இரகசியங்கள் நமக்கு கற்பிக்கின்றன . " கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்திருந்தால் மேலுள்ள காரியங்களைத் தேடுங்கள்  அங்கு இறைவனின் வலது பக்கத்தில் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார் "

இயேசுவின் உத்தானத்தின் மகிமையை உலகில் பரப்ப நாம் பிரயாசைப்பட வேண்டும் . மற்ற மக்களும் இதில் பங்கடைய உழைக்க வேண்டும் . நாம் இயேசுவைத் தேட வேண்டும் . மோட்ச பாதை அவர் . மோட்ச பாதையை நாம் தேட வேண்டும் . ஆகிலும் தினந்தோறும் இவ்வுலக பாதையில் நாம் நடக்க வேண்டியவர்கள் . இப்பாதையில் அருளும் , அயரா ஊக்கமும் நமக்குத் தேவை . செபமாலை சொல்வதனால் தேவ தாய் நடந்த பாதையில் நாமும் நடந்து சந்தோஷிப்போம், துக்கிப்போம் , வெற்றி கண்டு மகிழ்வோம் .

இயேசு போதித்தார் , புதுமைகளைச் செய்தார் , நற்கருணையை ஸ்தாபித்தார் என்ற இயேசுவின் மறைப்பணியை எடுத்தியம்புகின்றன இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் . இப்பணிக்கு இயேசு தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள அருளப்பரிடம் யோர்தானில் திருமுழுக்குப் பெற்று , தனது முதற் புதுமையைக் கானாவூரில் செய்து மலைப்பொழிவின் மூலம் தன் போதனையின் சுருக்கத்தை தந்து , தனது தெய்வீகத்தை தாபோர் மலையில் வெளிப்படுத்தி , நற்கருணையின் மூலம் உலகம் முடிவு மட்டும் நம்மோடும் இருப்பதாக நமக்கு இந்த ஒளியின் தேவ இரகசியங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.