திவ்ய நன்மை

"சேசு தினமும் பரலோகத்திலிருந்து இறங்கி வருவது ஒரு பொற்பாத்திரத்தில் தங்கியிருப்பதற்காக அல்ல, நம் ஆத்துமமாகிய மற்றொரு மோட்சத்தைக் கண்டடையும்படியாகவே. அதில் தங்கி யிருப்பதில்தான் அவர் இன்பம் காண்கிறார்" என்று அர்ச். குழந்தைசேசுவின் தெரேசம்மாள் கூறுகிறாள்.

திவ்ய நற்கருணையோடு சேர்த்து, சர்வேசுரன் நமக்கு அனைத்தையும் தந்திருக்கிறார். ''சர்வேசுரன் சர்வ வல்லபராக இருந்தாலும், அவர் திவ்ய நற்கருணைக்கு மேலான எதையும் நமக்குத் தர இயலாதவராக இருக்கிறார்; அவர் உன்னத ஞானமுள்ளவராக இருந்தும் இதற்கு மேல் எப்படித் தருவது என்று அறியாதிருக்கிறார், அவர் அளவற்ற செல்வமுள்ளவராயிருந்தும், இதற்கு மேல் நமக்குத் தர எதுவுமில்லாதவராக இருக்கிறார்" என்று அர்ச். அகுஸ்தீனார் அதிசயித்தபடி கூறுகிறார்.

ஆகவே நாம் திவ்ய நற்கருணையிடம் போக வேண்டும். அதன் வழியாக மட்டும்தான் நாம் நம் மணவாளரோடு உருகிக் கலந்து, அவரது அளவற்ற அன்பை அவருக்குத் திரும்பத் தந்து அவரை மகிழ்விக்கவும், அப்போஸ்தலரோடு இணைந்து, "நான் ஜீவிக்கிறேன்; ஆனால் நானல்ல, கிறீஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்'' என்று உரிமையோடு சொல்லவும் முடியும்.

அவர் வழியாகவே ஆத்துமம் நித்திய ஜீவியத்தைப் பெற்றுக்கொள்கிறது. ஏனெனில், ''என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணாவிடில் உங்களுக்குள் ஜீவன் இராது" என்று அவரே மொழிந்திருக்கிறார் (அரு. 6).