மறையுரை சிந்தனைகள் - தனிமையாக இருந்தபோது ***

மாற்கு நற்செய்தியாளர், இயேசுவின் சீடர்களை அறிமுகம் செய்யும்போதெல்லாம், அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பவர்களாகவும், அல்லது தவறாகப் புரிந்துகொள்பவர்களாகவும், அல்லது இயேசுவுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவுமே முன்வைக்கின்றார்.

அதே நேரத்தில், இயேசுவின் பக்கத்திலிருந்து இன்னொரு முக்கியமான விடயத்தையும் கூறுகின்றார். இயேசு அவர்களை ஒருபோதும் தள்ளிவிடவே இல்லை.

தான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல் உரிமை கொண்டாடுகிறார் இயேசு. அல்லது அவர் ஒருபோதும் தன்னுடையவர்களைத் தள்ளிவிடவே இல்லை.

'தெரிவு என்னும் முரண்' (The Paradox of Choice: Why More is Less, by Barry Schwartz) என்ற புத்தக மதிப்புரை கேட்டேன்.

நம் வாழ்க்கையில் நம் முன் நிறைய தெரிவுகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் நாம் கடைக்குச் சென்று, 'கலர்' என்று கேட்டால், 'காளி மார்க் கலர்' ஒன்றைக் கொடுப்பார்கள். நாம் உடனே வாங்கிக் கொண்டு வந்தோம். கொஞ்ச நாள்கள் கழித்து, ஃப்ரிட்ஜ் வந்தவுடன், 'கூலிங்கா வேணுமா? கூலிங் இல்லாம வேணுமா?' என்று கேட்டார் கடைக்காரார். பின் 'பெப்ஸியா? கோக்-கா? காளி மார்க்கா?' என்று மூன்று தெரிவுகள் வந்தன. இன்று நாம் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்றால் நம் முன் ஏறக்குறைய 300 வகையான கலர்கள் உள்ளன. இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து, நாம் குடிப்பதற்கு நேரம் விரயமாகிறது. குடித்தபின், 'வேறு ஏதாவது தெரிவு செய்திருக்கலாமே!' என்ற கவலை தொற்றிக்கொள்கிறது. 

குறைவான தெரிவுகள் நிறைவான மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்றால் இரண்டு விடயங்கள் அவசியம்:

ஒன்று, எனக்கு எது தேவை என்ன என்பதை உணர வேண்டும். ஒரு ஃபோன் வாங்கக் கடைக்குப் போகிறேன் என்றால், அங்கு சென்று, அங்குள்ள ஃபோன்களை அடுக்கி நான் ஒப்பீடு செய்துகொண்டிருக்கக் கூடாது. மாறாக, எனக்கு என்ன தேவைகள் இருக்கின்றன என்பதை முதலில் வரையறுத்து, நெறிப்படுத்தி நான் செல்ல வேண்டும்.

இரண்டு, நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு குறை இருக்கும். அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல தேர்ந்தெடுக்காமல் விட்ட எதுவும் குறையில்லாதது என நான் எண்ணுதல் கூடாது. அதை வாங்கினாலும் அதிலும் ஏதோ ஒரு குறை இருக்கும்.

இயேசு தன் பணிக்கு யார் தேவை என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்.

தான் தேர்ந்தெடுத்தவர்களில் குறை இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டார். 

'இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?' என்று அவர் சலித்துக்கொள்ளவே இல்லை.

இது வாழ்க்கைக்கும், மனித வள மேலாண்மைக்கும் நல்ல பாடம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு செய்யும் ஒரு செயல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது: 'உவமைகள் இன்றி அவர் மக்களிடம் பேசவில்லை. தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.'

தனிமையில் இயேசு தன் சீடர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தாலே வியப்பாக இருக்கிறது.

இயேசு பேசிக்கொண்டிருக்க, ஒருவர் காய்கறி வெட்டிக்கொண்டிருப்பார். யூதாசு பணம் எண்ணி வரவு-செலவு பார்த்துக்கொண்டிருப்பார். பேதுரு வெளியில் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பார். ஒருவர் விறகுகள் தறித்துக்கொண்டிருப்பார். ஒருவர் ரொட்டிக்கு மாவு பிசைந்துகொண்டிருப்பார். ஒருவர் வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருப்பார். ஒருவர் தன் துணிகளைத் தண்ணீரில் ஊற வைத்துக்கொண்டிருப்பார். 

இப்படியாக, எதார்த்தமாக நடந்தேறுகிறது இயேசுவின் போதனை.

இயேசுவுக்குத் தன் சீடர்கள்தாம் உலகம் என்றானது. அவர்களுக்கு இயேசுவே உலகம் என்றானது.

இயேசுவின் போதனை போலவே எதார்த்தமாக, எளிமையாக, யாரும் அறியாமல் நடந்தேறுகிறது விதையின் வளர்ச்சி, கடுகுவிதையின் உயர்வு.

இரண்டு கேள்விகள்:

இன்று, 'குறைவில்தான் நிறைவு' என என்பதை உணர்ந்து, நான் தெரிந்துகொண்ட வாழ்க்கையில், வேலையில், உறவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?

இரண்டு, வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது, அவற்றை விளக்கிச் சொல்லுமாறு நான் எதார்த்தமாக இயேசுவிடம் வருகிறேனா?

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)