இன்றைய புனிதர் - ஜனவரி 7 - பெனஃபோர்ட் நகர் புனிதர் ரேமண்ட் ***


பெனஃபோர்ட் நகர் புனிதர் ரேமண்ட்

(St. Raymond of Peñafort)

மறை பரப்புவோர் சபை தலைவர்:

(Master of the Order of Preachers)

பிறப்பு: கி.பி. 1175 

விலாஃப்ரான்கா டெல் பெநேடேஸ், கடலோனியா, அரகன்

(Vilafranca del Penedès, Catalonia, Crown of Aragon)

இறப்பு: ஜனவரி 6, 1275 (வயது 100)

பார்சிலோனா, அரகன்

(Barcelona, Crown of Aragon)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1542

திருத்தந்தை மூன்றாம் பவுல்

(Pope Paul III)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 29, 1601

திருத்தந்தை எட்டாம் கிளமென்ட்

(Pope Clement VIII)

முக்கிய திருத்தலங்கள்:

புனித திருச்சிலுவை பேராலயம், புனித யூலேலியா பேராலயம், பார்சிலோனா, கடலோனியா, ஸ்பெயின்

(Cathedral of the Holy Cross and Saint Eulalia, Barcelona, Catalonia, Spain)

நினைவுத் திருநாள்: ஜனவரி 7

பாதுகாவல்: 

நியதி - சமய வழக்கறிஞர்கள்; ஸ்பெயின்; அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள்

"பென்யஃபோர்ட் நகர புனிதர் ரேமண்ட்" (St. Raymond of Penyafort) பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஸ்பேனிஷ் டொமினிக்கன் துறவி (Spanish Dominican Friar) ஆவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இருபதாம் நூற்றாண்டு வரை அமலில் இருந்த, திருத்தந்தை ஒன்பதாம் கிரெகோரியின் (Pope Gregory IX) கத்தோலிக்க சமய சட்ட திட்டங்களை தொகுத்து எழுதியவர் இவர் ஆவார். இவர் வழக்கறிஞர்களின் - முக்கியமாக நியதி - சமய வழக்கறிஞர்களின் பாதுகாவலர் ஆவார்.

வாழ்க்கை:

புனிதர் ரேமண்ட், “கடலோனியாவின்” (Catalonia) “பார்சிலோனா” (Barcelona) அருகேயுள்ள "விலாஃப்ரான்கா டெல் பெநேடேஸ்" (Vilafranca del Penedès) என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். “அரகனின்” (Aragon) அரச வம்சாவழியின் உறவுகளை கொண்டு ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் இருந்து தோன்றியவர். பார்சிலோனாவில் ஆரம்ப கல்வி பயின்ற இவர், "போலாக்னா பல்கலையில்" (University of Bologna) உயர் கல்வி கற்று, சிவில் மற்றும் நியதி - சமய சட்டங்களில் (Civil and Canon Law) வல்லுநர் பட்டம் பெற்றார். கி.பி. 1195ம் ஆண்டு முதல் கி.பி. 1210ம் ஆண்டு வரை நியதி - சமய சட்டம் கற்பித்தார். கி.பி. 1210ம் ஆண்டு, போலோக்னா சென்ற அவர், கி.பி. 1222ம் ஆண்டு வரையான பன்னிரண்டு வருட காலம் அங்கேயே தங்கி இருந்தார். இதில் மூன்று வருடங்கள் "போலாக்னா பல்கலையின்" நியதி - சமய சட்ட பிரிவின் தலைமை ஏற்றார். அங்கே, அவர் புதிதாய் தோற்றுவிக்கப்பட்ட "டொமினிக்கன் சபையை" (Dominican Order) பற்றி கேள்வியுற்றார். போலோனாவிலுள்ள டொமினிக்கன் சபையின் முன்னவர் அருளாளர் “ரெஜினால்டின்” (Blessed Reginald) மறையுரைகளால் கவரப்பட்டார். தமது 47ம் வயதில் பார்சிலோனாவிலுள்ள (Barcelona) “டொமினிக்கன்” பள்ளியில் (Dominican Convent) இணைந்தார்.

கருணையின் அன்னை அர்ச்சிஷ்ட மரியாள் சபை:

(Order of the Blessed Virgin Mary of Mercy)

கி.பி. 1218ம் ஆண்டு, இச்சபை நிறுவப்பட புனிதர் ரேமண்டும் ஒரு கருவியாக செயல்பட்டார். "பீட்டர் நொலாஸ்கோ" (Peter Nolasco) இவரை சபை நிறுவுதல் சம்பந்தமாக அணுகியபோது, இவர் அவரை உற்சாகமாக ஊக்கப்படுத்தினார். சபை நிறுவும் ஒப்புதல் வேண்டி அரகனின் அரசன் “முதலாம் ஜேம்சை” (King James I of Aragon) அணுகி ஒப்புதல் பெற்றனர். "ஸ்டடியா லிங்குவரம்" (Studia Linguarum) என்ற முதல் பள்ளியை "டுனிஸ்" (Tunis) எனும் நகரில் ஆரம்பித்தார். இப்பள்ளிகளின் முக்கிய நோக்கம், இஸ்லாமிய நாடுகளில் கைதிகளாய் இருந்த கிறிஸ்தவர்களை விடுவிப்பதில் டொமினிக்கன் துறவியர்க்கு உதவுவதாம்.

இவர், ஒப்புரவாளர்களுக்காக (The Summa de casibus poenitentiae) எனப்படும் ஒரு வழக்குகள் புத்தகத்தை எழுதினர்.

இவர், கி.பி. 1229ம் ஆண்டு, “சபீனாவின் கர்தினால் பேராயரான” (Cardinal Archbishop of Sabina) “ஜான்” (John of Abbeville) என்பவரின் இறையியல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பின்னர், கி.பி. 1230ம் ஆண்டு, அவர் திருத்தந்தை “ஒன்பதாம் கிரகொரியால்” (Pope Gregory IX) ரோம் நகருக்கு வரவழைக்கப்பட்டு தனியார் சிற்றாலய குருவாகவும் பெரும் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார்.

ரேமண்ட், அரகனின் மன்னன் “முதலாம் ஜேம்ஸின்” (King James I of Aragon) ஒப்புரவாளராகவும் பணியாற்றினார். திருச்சபையின் விசுவாசமான மகனான மன்னன், சிற்றின்ப வேட்கைகள் நிறைந்தவனாகவும் இருந்தார். அவருடைய இவ்வேட்கைகள், அவரைக் குலைத்தன. ஒருமுறை, “மஜோர்க்கா” (Majorca) தீவில் நடந்த இஸ்லாமியர்களை மனம் மாற்றும் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வந்திருந்த அரசன், தம்முடன் தமது ஆசைநாயகியான பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். அரசனை கடிந்துகொண்ட ரேமண்ட், அவரது ஆசைநாயகியை விலக்கிவிடுமாறு பலமுறை வற்புறுத்தினார். ஆனால் அரசன் அதை மறுத்துவிட்டார். இறுதியில், தாம் இனிமேலும் அங்கே தங்கியிருக்க இயலாது என்றும் என்றும், பார்சிலோனாவுக்கு (Barcelona) செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் இவர் அரசனிடம் கூறினார். ஆனால், அவர் பார்சிலோனா செல்வதை தடை செய்த அரசன், அவரை யாராவது கப்பல் தலைவன் அழைத்துச் செல்ல முயன்றால் அக்கப்பல் தலைவனை தீவிரமாக தண்டிப்பதாகவும் எச்சரித்தார். ரேமண்ட் தமது டொமினிக்கன் துறவியர் நண்பர்களிடம், இந்த தொடக்க கால அரசனின் பொல்லாத செயல்களை விண்ணக அரசர் எவ்வாறு குழப்பப் போகிறார் என்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள் என்றும், அவரே தமக்கு ஒரு கப்பலையும் தருவார் என்றும் கூறினார்.

பின்னர், டொமினிக்கன் துறவியர் கடற்கரைக்கு சென்றனர். அங்கே, ரேமண்ட் தமது கருப்பு நிற நீண்ட அங்கியின் ஒரு பாகத்தை கடல் நீரிலும் மறு பாகத்தை நிலத்திலுமாக விரித்தார். பின்னர், அவர் தமது டொமினிக்கன் நண்பர்களை அதில் தாவி வருமாறு அழைத்தார். ஆனால், விசுவாசமில்லாதிருந்த அவர்கள் அதற்கு மறுத்தனர். ரேமண்ட் தாம் மட்டும் தமது அங்கியின் மீது தாவி, விடை பெற்றார். காற்றில் சிலுவை அடையாளம் வரைந்தவுடன், பாய்மரக்கப்பலாக மாறிப்போன அங்கி, அதிசயிக்கும் விதமாக கடலில் பயணிக்க தொடங்கியது. அவரை மேலும் போகவிடாமல் தடுப்பதற்காக சுற்றிலும் படகுகள் வந்தன. அவற்றையெல்லாம் மீறி அவர் சென்றார். அவர் சாதாரண ஒரு மேலங்கியை படகைப் பாவித்து கடலில் பயணித்ததை பல கடல் பயண மாலுமிகள் கண்டனர். அவர்கள் மலைத்துப் போய் உற்சாகக் குரலெடுத்து கூக்குரலிட்டனர். 160 மைல் தூரத்தை சுமார் ஆறு மணி நேர கடல் பயணத்தில் நிறைவு செய்த ரேமண்ட், இறங்கும்போது, எண்ணற்ற மக்கள் நேரில் கண்டனர். அவர் செய்த இவ்வற்புதம், அரசன் முதலாம் ஜேம்சை (King James I) தொட்டது. அவர் தமது அவரது தீய வழிகளை கைவிட்டு, அதற்குப் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தார்.

60 வயதானதும் தனிமை வாழ்க்கை வேண்டி ஓய்வு பெற்றார். ஆனால், ஒரு வருடத்துக்குள்ளேயே அவர் "அரகன் அரசின்" (Kingdom of Aragon) "டர்ரகோனா" (Tarragona) மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அதை நிராகரித்துவிட்டார்.

கி.பி. 1236ம் ஆண்டு பார்சிலோனா திரும்பிய ரேமண்ட், நெடுநாட்கள் தனிமையில் வாழ இயலவில்லை. அவரை “மறை பரப்புவோர் சபை தலைவர்” (Master of the Order of Preachers) 1238ம் ஆண்டின் பொதுக்குழு நியமித்தது. அவர் உடனடியாக சபையின் துறவியர் மற்றும் அருட்சகோதரியரின் இல்லங்களுக்கு வருகை தந்தார். அவர் செல்லுமிடமெல்லாம் காலணிகள் இல்லாமலேயே பயணித்தார். இதற்கிடையில், சபையின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான உட்பிரிவு உள்ளிட்ட, சபைக்கான புதிய அமைப்பு விதிகளை எழுதினர். பின்னர், அந்த உட்பிரிவை பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கி.பி. 1275ம் ஆண்டு, தமது நூறு வயதில் மரணமடைந்த இவர், பார்சிலோனாவிலுள்ள "புனித யூலேலியா பேராலயத்தில்" (Cathedral of Santa Eulalia in Barcelona) அடக்கம் செய்யப்பட்டார்.