இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்ய இருதயம் வருவாராக!

பெத்தானியா காட்சியின் கடைசி நான்கு உறுப்புகள்.

முந்தின அதிகாரத்தில் சொன்னதைக் குறித்துச் சில விபரங்களைச் சேர்த்து, சில காரியங்களை அழுத்தமாய் எடுத்துக்கூறுவோம். இதன் பயனாக சர்வேசுரனுக்கு நமது போதகத்தால் செலுத்தக் கூடிய மகிமையெல்லாம் முழுவதும் உண்டாகும் என்று நம்புகிறோம். நமது ஆண்டவர் தமது கருத்து நிறைவேற அவசியமானபோது, அவர் அற்புதங்களைச் செய்யக்கூடும், நிச்சயமாய்ச் செய்வார். அரசாட்சி ஸ்தாபக அலுவலின் ஆரம்பத்திலேயே, அது தேவ பராமரிப்பால் உண்டானதென்று காட்டும்படி அவர் அநேக அற்புதங்களைச் செய்திருக் கிறார். ஆனால், சர்வ ஞானமுள்ள சர்வேசுரன் அவசியமின்றி அற்புதங்கள் செய்ய மாட்டார். இந்த அலுவல், இப்போது ஸ்தாபிக்கப்பெற் றிருக்கிற விதத்தில் தகுந்த விதமாய் ஒழுங்குடன் நடைபெறுமாகில், தானாக ஆயிரம் மடங்கு பலனளித்து, வரப்பிரசாத அற்புதங்களைச் செய்ய வேண்டுமென்று நாம் சர்வேசுரனை வற்புறுத்திக் கேட்காமலே அவைகளைப் பெற்றுத் தரும்; ஆனால் நம் கண்காணிப்பில் ஒப்படைக் கப்பட்ட இந்த வாழ்வின் மரத்தைப் பராமரித்து வர வேண்டும்.

அரசாட்சி ஸ்தாபகத்தால், நாம் மேலே குறிப்பிட்ட அதிசயத் திற்குரிய பலன் கிடைக்க வேண்டுமானால், அதன் சடங்குக்குத் தகுந்த ஆயத்தம் செய்ய வேண்டும். எந்த வீட்டிலாவது அன்பின் அரசரை அழைத்துச் செல்ல வேண்டியபோது, முன்னதாகவே ஓர் ஆள் அனுப்பி அந்தக் குடும்பத்தினர் தாங்கள் செய்யப் போவது எவ்வளவு முக்கியமான காரியம் என்பதைக் கண்டுணர்கிறார்களா என்றும், அதற்கு அவசியமான பக்திப்பற்றுதலோடு அதைச் செய்யத் தயாராயிருக்கிறார்களா என்றும் அறிந்துகொள்ள வேண்டும். ஓர் அரசன் தனது குடிமக்களில் ஒருவனைச் சந்திக்கப் போகுமுன், ஒழுங்கில் குறித்திருக்கிறபடி மரியாதை வணக்கம் செய்யப்படுமா என்று முன்னாடியே அறிந்து கொள்வது வழக்கம். இல்லாவிடில் பதவியில் சிறந்த விருந்தாளிக்குத் தகுந்த வரவேற்பு இல்லாமல் போகக்கூடும். இவ்வாறே, அரசாட்சி ஸ்தாபகம் இன்னதென்று கண்டுகொள்ளாமலும், குடும்பத்திலுள்ளவர்கள் அதனால் ஏற்படு கிற கடமைகளை அறியாமலும் இருந்தால், அன்பின் அரசருக்கு ஒரு வகையான சங்கை வணக்கக் குறைவு ஏற்படக் கூடும். இந்தச் சடங்கை திவ்ய நற்கருணை அருந்துதலுக்கு ஒருவாறு ஒப்பிட்டுச் சொல்ல லாம். பக்தியுள்ள கத்தோலிக்கன் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருந்தால் போதுமென்று எண்ண மாட்டான்; பரம நற்கருணை உட்கொள் வதால் அடையக்கூடிய பயன் முழுவதும் பெறும்படி, ஜெபத்தாலும், தியானத் தாலும் கவனமாய் ஆயத்தம் செய்கிறான். இப்படியே திரு இருதய அரசாட்சியை ஸ்தாபிக்கப் போகிற குடும்பம் பக்தியுள்ள நல்ல குடும்பமாயிருப்பது போதாது; இராஜாதிராஜனுக்குச் செய்த ஆராதனையின் பயனாக, தங்கள் அநுதின வாழ்வில் சேசுநாதருக்கு இரு வகைகளில் அவருக்குரிய மகிமையான இடம் கொடுக்க வேண்டு மென்று சகலரும் அறிந்திருக்க வேண்டும். படம் ஸ்தாபிக்கப்பெற் றிருக்கிற அறையில் மலர்கள் வைத்து அலங்கரிப்பதும், மெழுகு வர்த்திகள் எரிவதும், இவை போன்ற வெளி மரியாதைகள் போற்றத் தக்கதே; ஆனால், மெய்யான வர்த்திகளும், மலர்களும் பெற்றோர் பிள்ளைகளின் இருதயங்களேயாகும்.

ஏழைகளும் எழுத்து வாசனை அறியாதவர்களும், விசுவாசத் தின் பரம இரகசியங்களை வெகு நன்றாய் அறிந்திருக்கிறார்கள் என்று அநேகம் தடவை காண்கிறோம். ராட்டர்டாம் நகரில் ஆத்தும இரட்சணிய ஆவல் கொண்ட பங்குக் குருவானவர் ஒருவர், ஒரு ஞாயிற்றுக்கிழமை பாட்டுப் பூசைக்குப் பிறகு கப்பல் தொழிலாளி களின் வீடுகளில் அரசாட்சியை ஸ்தாபிக்கும்படி என்னை அழைத்துச் சென்றார். இந்த வீடுகளில் ஒன்றில், சுமார் முப்பது வயதுள்ள வாலிபன் ஒருவன் குருவானவர் சொன்ன ஜெபங்களைக் கேட்டு அவனது உள்ளத்தில் மிகுந்த உருக்கம் உண்டாயிற்றென்று எனக்குத் தோன்றியது. சடங்கு முடிந்ததும், அவனுடைய உருக்கத்துக்குக் காரணம் யாதென்று வினவினேன். ""எனது அரசரும், கடவுளுமானவர் இந்த ஏழைக் குடிசைக்குள் வந்து, எங்களுடைய நண்பராகத் தங்கியிருந்து, அவர் விரும்புவது போல் நாங்கள் வாழ் வதற்கு எங்களுக்கு உதவி செய்யப் போகிறார் என்று அறிந்து என் இருதயம் இளகாமலிருக்க முடியுமா?'' என்று தொழிலாளி குரல் நடுங்கிப் பதிலளித்தான். இந்த மறுமொழி என் உள்ளத்தையும் ஊடுருவிற்று என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அரசாட்சி ஸ்தாபகப் போதகர் எட்டுப் பத்து நாட்களாக வீடுவீடாய்ப் புகுந்து, இந்த மக்கள் தங்கள் அரசரும், நண்பருமானவரை வரவேற்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தி வந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது கடினமான வேலையாகத் தோன்றலாம். ஆனால் ஆறுதலும், திருப்தியுமுள்ள பலனைக் கண்டடையவும், படம் மாத்திரம் இருப்பது போதாமல், அந்த அடையாளத்தினுள் உண்மைப் பொருளானவர் மறைந்திருக்கிறார் என்று உணரவும், இவ்விதம் வேலை செய்துதான் ஆக வேண்டும்.

இந்தக் காரியம் வெகு முக்கியமானதென்று அழுத்திச் சொல் கிறேன். அரசாட்சி ஸ்தாபகத்துக்குக் கரிசனையுடன் ஆயத்தம் செய்ய வேண்டும். சேசுநாதர் நடந்து போகவேண்டிய பாதையில் பூக்களைத் தெளிப்பது போலவும், அல்லது அந்த வீட்டு வாசற்படியில் கம்பளம் விரிப்பது போலவும், வழியில் அவரது வருகைக்காக கம்பீர வளைவுகள் அமைப்பது போலவும் இந்த ஆயத்தம் இருக்கிறதென்று எண்ணிச் செய். சேசுநாதர் எருசலேமில் பரலோக மகிமையுள்ளவ ராகப் பிரவேசித்ததை அரசாட்சி ஸ்தாபகம் ஞாபகப்படுத்த வேண்டும். ஸ்தாபகம் முடிந்ததும் முன்பை விட அந்த வீட்டில் கிறீஸ்தவ வாழ்வு அதிகம் பற்றுதல் கொண்டு, சிநேக வாழ்வாய் விளங்க வேண்டும்.

அரசாட்சி ஸ்தாபகம் செய்யப்பட்ட வீடுகளைக் கணக் கெடுத்துப் பார்த்து வந்த தொகையைக் கொண்டு, சேசுநாதருக்கு ஏற்படும் வெற்றியை அளவிடுவது சரியன்று. நமக்கு வேண்டியது, வெறும் வெளி ஆடம்பரத்திற்குரிய பொய்யான வெற்றியல்ல; ஆழ்ந்த, உறுதியான, நீடித்திருக்கிற வெற்றி நமக்கு வேண்டும். அரசாட்சி ஸ்தாபகத்தின் கருத்தை நன்குணர்ந்து, குடும்ப வாழ்விற்கு சேசு நாதரை அரசரும், அதிபதியுமாகத் தீர்மானித்திருக்கிற ஒரு வீட்டால் அவருக்கு வருகிற மகிமையும், ஆறுதலும், வெளிக்குப் பக்திப் பகட்டுடன் இருந்தும், சிநேகப் பற்றுதலின்றிச் சடங்கைச் செய்து முடித்த ஐந்தாறு வீடுகளால் வருகிற ஆறுதல் மகிமையை விட அதிகமாயிருக்கும்.

கருத்திலும், உண்மையிலும், ஒவ்வொரு வீடும் மெய்யான பெத்தானியாயிருக்கும்படி, குடும்பத்தில் கிறீஸ்தவ வாழ்வை உன்னத மாக்கப் பிரயாசைப்படு. பத்துத் தடவை, இன்னும் அவசியமானால், அதிலும் அநேக முறை அந்த வீட்டுக்குப் போய், இந்த அலுவலின் அர்த்தத்தை விளக்கிக் கூறு. சாந்த குணத்தாலும், பொறுமையாலும், அந்தக் குடும்பம் ஞான விதமாய் மறுரூபம் அடையச் செய்வாய். பரிசுத்த அக்கினியைத் தூண்டிவிட்டு, பக்தியை ஏவி, அடிக்கடி பற்று தலுடன் திவ்ய நன்மை வாங்கவும், அநுதினம் குடும்பத்தில் ஜெபம் சொல்லவும் ஏற்பாடு செய்; இது விஷயமாய்ச் சற்றும் சலிப்புக் கொள்ளாதே. சத்தியத்தின் தேவனும், நேச தேவனுமான சேசுநாத ருக்கு, நிலையான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்ட ஆசனம் கிடைக்கும்படி கவனித்துக்கொள். 

பெரிய யுத்தத்துக்கு முன், சமுதாயவாதியாயிருந்த ஒரு போர் வீரன் சண்டையில் காயப்பட்டு முடமானபின், கிறீஸ்தவ விரோதி யும், அதிகார விரோதியுமாக ஆனான். சேசுவின் நேச அப்போஸ் தலர்களில் ஒருவர் அவனது வீட்டை ஒளியின் இருப்பிடமாக உரு மாற்றத் தீர்மானித்தார். அவர் ஆத்தும ஆவலுள்ள ஒரு பெண்மணி. தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு, அந்தப் பெண்மணி அவனது வீட்டை நோக்கிச் சென்றாள். அவன் வீட்டுக்கு வெளியே குளிர்காய்ந்து கொண்டிருந்தான். அவள் அன்போடு அவனுக்குக் காலை வணக்கம் கூறி, சற்று நேரம் அவனோடு பேசினாள்; எந்த பதிலும் கிடைக்கவில்லை. கடைசியாய் அவன் மூர்க்கங் கொண்டு, ""அப்பாலே ஓடிப் போ; குருக்களும், செல்வந்தர்களும் நாசமாய்ப் போக வேண்டும்'' என்று அலறினான். தன்னையே அடக்கிக் கொண்டு, சாந்தமாய் அவனிடம் அவள் இன்னும் சற்றுப் பேசிப் பார்த்தாள். எந்தப் பயனும் இல்லை. போகாவிடில் கழுத்தைப் பிடித் துத் தள்ளுவேன் என்று அவன் அதட்டினான். ""சரி, நான் போகிறேன், ஆனால் நாளைக்கு இதே நேரத்தில் திரும்பி வருவேன்'' என்று சாந்தமாய்க் கூறிவிட்டுப் போனவள், சொன்னபடியே மறுநாள் திரும்பி வந்தாள். முந்தின நாள் கேட்ட பாட்டுத்தான் இன்றைக்கும். ஆயினும் சலிப்புக் கொள்ளாமல், தினந்தோறும் அந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள். கடைசியாய் ஒரு நாள் அவன் கோபம் அதிகரித்துத் தன் மனைவியைக் கூப்பிட்டு, ""இவள் என்னிடம் மீண்டும் வராதபடி பார்த்துக்கொள். பல நாட்களாக என்னைப் பார்க்க வந்து உபத்திரவப்படுத்துகிறாள்; இன்னும் வந்து கொண்டே இருப்பாள் போல் தோன்றுகிறது. நீயே அவளோடு பேசிக் கொள்'' என்றான்.

இதைக் கேட்ட மனைவி, அந்தப் பெண்ணின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவனும், என்ன பேசப் போகிறார்கள் என்று சந்தேகப்பட்டவனாய் அங்குதான் இருந்தான். பிள்ளைகளும் சிறிது நேரத்துக்குள் அவளைச் சூழ்ந்து வந்து தரையில் உட்கார்ந்து தங்கள் வாழ்நாளில் எல்லாம் முதல் தடவையாக வியப்புடன் ஞான உபதேசம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சேசுவின் நேச அப்போஸ் தலரான இந்த நமது பெண்மணி, நமது பிதாவாகிய சர்வேசுர னுடைய நேசத்தைப் பற்றி விவரித்துச் சொன்னாள். அது முடிந்ததும், சிறு பிள்ளைகளைப் பரிவுடன் தடவிக் கொடுத்து, அங்கிருந்து போகப் புறப்பட்டாள். ஆனால் ஆச்சரியம், இன்னும் சற்று நேரம் அங்கிருக்கும்படி போர்வீரன் அவளைக் கேட்டுக் கொண்டது மல்லாமல், கடைசியாய் அவள் அவர்களை விட்டுப் பிரிந்த போது, அவள் ஒவ்வொரு நாளும் திரும்பி வருவதாக வாக்குக் கொடுக் கும்படி எல்லோரும் சேர்ந்து மன்றாடினார்கள். அவள் தன்னோடு வேறொருவரையும் அழைத்துவந்து, பிள்ளைகளுக்குக் கற்றுத் தரச் சொல்லிவிட்டு, போர்வீரனுக்கும், அவனது மனைவிக்கும் அவளே கற்றுக் கொடுத்தாள். இடையிடையே இருவரும், ""ஓ! எவ்வளவு நேர்த்தியாயிருக்கிறது! இதற்கு முன் இதெல்லாம் எங்களுக்கு ஏன் ஒருவரும் சொல்லவில்லை! நாங்கள் வெகு பாக்கியமாய் இருந்திருக் கலாமே!'' என்று குறுக்கிட்டுச் சொன்னார்கள்.

ஆறு வாரம் கடந்த பின்னர், பங்குக் குருவானவர் வந்து பார்த் தார். அங்கிருந்த மாற்றத்தைக் கண்டு வியப்புற்று, இது கனவா, நிஜமா என்று எண்ணும்படியாயிற்று. சில நாட்கள் சென்று, பிள்ளைகள் பங்குக் கோவிலில் ஞானஸ்நானம் பெற்றார்கள்; குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும், அதே நாளில் முதல் தடவை யாக நற்கருணை உட்கொண்டார்கள். அன்று சாயந்திரம், அவர்கள் வீட்டில் அரசாட்சி ஸ்தாபகம் ஆடம்பரமாய் நிறைவேறிற்று. சேசுவின் திரு இருதயத்துக்கு இன்னுமொரு பெத்தானி சம்பாதிக்கப் பட்டது. போர்வீரன் கண்களில் நீர் ததும்பச் சொல்வான்: ""நான் இன்று நற்கருணையில் உட்கொண்ட நமது ஆண்டவரை அடையவே எப்போதும் ஆவலாயிருந்தேன். ஆனால் நான் அதை அறியவில்லை. இன்று சாயந்திரம் அவர் என் குடிசைக்குள் வந்து, நான் சாகும் வரைக்கும் இங்கேயே தங்கப் போகிறார். நான் சேசுவின் மட்டில் ஆவல் கொண்டு அவரை அடையாததால்தான் நிர்ப்பாக்கியமா யிருந்தேன். இப்போது அவர் என்னோடு இருப்பதால், எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை.'' 

அரசாட்சி ஸ்தாபக அப்போஸ்தலர்களே, பார்த்தீர்களா, நமது வேலையைப் போதித்து, நமது அரசருக்கு முழுமையான வெற்றியை அடைந்து கொடுப்பதற்கு, இதுதான் தகுந்த வழி. சாதாரண காரியங்களில் கூட, செய்வன திருந்தச் செய் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நமது ஆண்டவரின் மகிமையைச் சார்ந்த விஷயமாய் இன்னும் எவ்வளவு தூரம் இதை அநுசரிக்க வேண்டும்!

இதில் ஒரு கேள்வி எழக் கூடும். பெரும் பாவியான ஒருவன் இருக்கிற வீட்டில் அரசாட்சி ஸ்தாபகம் செய்யலாமா? இதற்குப் பதில் சொல்லுமுன் நன்றாய் நிதானித்துப் பார்க்க வேண்டும். ஒரு குடும்பத்தில் நல்வழியை விட்டுத் தவறிப் போன ஆத்துமம் ஒன்று இருக்கலாம்; அவன் மற்ற விஷயங்களில் நல்லவன், யோக்கியன், ஆனால் நமது ஆண்டவரை அவன் சிநேகிக்கிறதில்லை. வேதக் கடமைகளில் அலட்சியமாயிருக்கிறான். அவனுடைய மனைவி மக்கள் பக்தியுள்ள கத்தோலிக்கராய் இருப்பார்களாகில், அரசாட்சி ஸ்தாபிக்கலாம்; மார்த்தாளுடைய விசுவாசமும், மரியம்மாளுடைய நேசமும் சேர்ந்து, மரித்த லாசரை உயிர்ப்பிக்கும்படி சேசுநாதரை ஏவிவிடும். நமது ஆண்டவர் அரசராக மட்டுமன்று, வைத்திய ராகவும் நமது வீட்டுக்கு வருவது நல்லதுதான்; ஆனால் குடும்பத் தலைவன் அவருக்குச் சிநேகம் காண்பிக்க மறுப்பதற்கு மாற்றாக, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அவருக்குத் தங்கள் நேசத்தால் ஈடு செய்வது அவசியம். ஒருவன் மனந்திரும்ப வேண்டுமானால், அதற்குச் சரியான விலை கொடுக்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். கல்வாரியில் நடந்தபடி, இரக்கத்தால் ஆக வேண்டிய காரியத்தை, தேவ நீதியை சாந்தப்படுத்தித்தான் பெற வேண்டும். 

அரசாட்சி ஸ்தாபகம் ஒரு சன்மானம் என்று எண்ணலாகாது. ஒரு காலத்தில், திவ்ய நற்கருணை உட்கொள்வதைப் பற்றியும் இத்தகைய தப்பறையான எண்ணம் இருந்து வந்தது. சேசுநாத ருடைய பெருந்தயவு அவசியமான அநேக இல்லங்களில் அவரைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு இது ஒரு சாதனம் என்று அறிந் திருக்க வேண்டும். ஆயினும், மெய்யாகவே துர்மாதிரிகையாய் நடந்து கொண்டு, அதைத் திருத்திக் கொள்ளச் சற்றேனும் பிரியப் படாத வீட்டில், அரசாட்சி ஸ்தாபகம் செய்யலாகாது. இத்தகைய வீட்டிற்கும், முன் சொன்னதற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உண்டு. பரிசேயனான சீமோனின் வீட்டுக்கும், ஆயக்காரரின் வீட்டுக்கும் சேசுநாதர் போனார். அப்பேர்ப்பட்டவர்களுக்காகத்தான் அவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார்.

அரசாட்சி ஸ்தாபகம் செய்திருந்த ஒரு வீட்டுக்கு ஒரு நாள் போனேன். அங்கே, தங்க ரேக்குச் சட்டம் கட்டின திரு இருதயப் படம் பெரிய சுரூபப் பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது. மனைவி மக்களின் விண்ணப்பத்திற்கு இணங்கி, ""சரி'' என்று மாத்திரம் சொல்லிச் சம்மதித்திருந்த வீட்டெஜமான் என்னருகில் நின்றான். அவன் நாற்பது வருட காலமாக வேதத்தின் கடமைகளை அலட் சியம் செய்தவன். நான் அவனை எப்படியாவது மனந்திருப்ப வேண்டுமென்று எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டு, யாதொரு காரணமும் சொல்லிக் கொள்ளாமல், அன்று சாயந்தரம் அவனை நான் பார்க்க விரும்பினேன் என்று மட்டும் தெரிவித்திருந்தேன். இப்போது நாங்கள் இரண்டு பேர் மாத்திரமல்ல, மூன்றுபேர் இருந் தோம். நான், அவன், எங்கள் மத்தியில் சேசுநாதர். பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென நான் அவனை நோக்கி, ""உனக்குப் பாவ மன்னிப்பு அளிக்காமல் இந்த வீட்டை விட்டு வெளியேற மாட் டேன். இதுவே என் உறுதியான தீர்மானம்'' என்று சொன்னேன். "என்ன சுவாமி, பாவ மன்னிப்பென்றா சொன்னீர்கள்?'' என்று வேடிக்கையாய்ச் சிரித்துக்கொண்டு கேட்டான். ""ஆம், பாவ மன்னிப்புத்தான், சந்தேகமில்லை. ஆனால் இந்த அறையிலேயே நீ உன் பாவங்களை சங்கீர்த்தனம் பண்ணின பிறகுதான்'' என்றேன். இன்னும் அவன் சிரித்துக்கொண்டே, ""நிஜந்தானா?'' என்று கேட்டான். ""நிச்சயம்; ஒரே தீர்மானம்; இதோ, இந்தப் படத்தைப் பார்; நமது அரசரின் படம். அது பொய் சொல்லாது. இந்த வீட்டின் ஏக எஜமானர் சேசுநாதர். அவரே இங்கே ஆளுகை செய்கிறார். உன்னைத் தவிர மற்றெல்லாரும் அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள் என்று அது குறித்துக் காட்டுகிறது. முழங்காலில் இரு; நான் உன் பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டு, உனக்குப் பாவ மன்னிப்பு அளிப் பேன்'' என்று தைரியமாய்த் தெரிவித்தேன்.

அவன் சிரிப்பதை நிறுத்திப் பேசும் தொனியில் மாற்றம் உண்டானது. எதிர் நியாயம் சொல்ல ஒன்றும் தென்படவில்லை. அதைப் பற்றி ஆலோசிக்க வேண்டும் -சில வேளை வேறொரு நாள் செய்யலாம் - இவ்வளவு பெரிய காரியத்துக்கு யோசனை செய்து தானே ஆக வேண்டும் என்றான்.

"மரண தூதன் இன்றிரவு வந்தால், ஒரு மாதம் கழித்து வா, தியானித்து யோசித்து, தயார் செய்து கொள்ள நேரம் வேண்டும் என்று சொல்வாயா? இப்போது மரணமல்ல, வாழ்வு உனக்கு வருகிறது. சேசுநாதரே வாழ்வு, அவரை விரட்டி விடாதே. முழங் காலில் இரு. நான் உனக்கு உதவி செய்கிறேன்'' என்று நான் சொல் லவே அவன் சற்றுத் தத்தளித்தான்; பின்னர் அன்பின் அரசரது கையில் அகப்பட்டுக் கொண்டான். முழங்காலில் இருந்தான். உடனே அவனுக்கு ஆத்தும சோதனை செய்யவும், உத்தம மனஸ்தாபப் படவும், உறுதியான பிரதிக்கினை செய்யவும் நான் உதவி புரிந்தேன். நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தான். சில நாட்கள் சென்று, மரித் தோரிடத்தினின்று உயிர்த்த இந்த லாசர், மனைவி மக்களோடு திவ்ய நற்கருணை அருந்தினான். ""தவறிப் போனதை இரட்சிக்க, மனுமகன் வந்திருக்கிறார்,''... ""சுகமுள்ளவர்களுக்கு வைத்தியன் வேண்டிய தில்லை, நோயாளிகளுக்கே வேண்டும்'' (மத்.9:12), ""தயாளத்தையே விரும்புகிறேன்'' (மத்.9:13). ""என் இருதயத்தில் மட்டற்ற இரக்கம் உண்டு, அதை உனக்குத் தருகிறேன். ஏற்றுக்கொள்.'' "இதோ நான் வாசற்படியில் நின்று தட்டுகிறேன்'' (காட்சி. 3:20) என்று நமது திவ்ய எஜமான் சொல்கிறார். விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகத்துடன் அவரை நீ ஏற்றுக்கொண்டு, யார் மனந்திரும்ப வேண்டுமென்று நீ கேட்கிறாயோ, அவனது கடனை நீ செலுத்தி விடுவாயாகில், சக்கேயுவை நோக்கி, "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சணியம் உண்டாயிற்று'' (லூக்.19:9) என்று ஆண்டவர் சொன்ன வாக்கியம் நிறைவேறுவதைக் காண்பாய்.

கத்தோலிக்கர் மத்தியில் முதலாய், சேசுநாதரை நன்றாய் அறிவதில்லை. இதுவே எக்காலத்திலும் பெருங்குறை என்று நான் புலம்புவதை அநேக தடவைகளில் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவர் தமது அப்போஸ்தலர்களைப் பார்த்து, "இவ்வளவு காலமாய் நான் உங்களோடுகூட இருந்தும், நீங்கள் என்னை அறிந்து கொள்ளவில்லையா?'' என்று சொன்னதை, இந்தக் கத்தோலிக்கர்களைக் குறித்தும் சொல்லக்கூடும். இக்குறையைப் பரிகரிக்குமாறு, குடும்பங்களைச் சந்திக்கும்போது, அவர்கள் சுவிசேஷத்தை வாசித்து தியானிக்கும்படி புத்தி சொல்லுங்கள். அப்போது நமது போதகத்தால் பெரும் பயன் உண்டாகும் ஏனெனில் வேதக் கல்வி குறைவாயிருப்பவர்களுக்கு சுவிசேஷம் பெரிய உதவி. பக்தியில்லாதவர்கள் கூட அதன் பக்கங் களை வாசிப்பதால், புத்தித் தெளிவடைந்து, உள்ளத்தில் உருக்கம் அடைகிறார்கள். இருதயத்தை இளக்கி, உருக்குவதற்கு இதை விட மேலான புத்தகம் வேறு எதுவுமில்லை.

பக்திக்குரிய புத்தகங்கள் அறை நிறைய இருக்க வேண்டு மென்று அநேகருக்கு ஆவல் உண்டு. புகழ்ச்சிக்குரிய இந்த ஆசையை நாம் கண்டனம் செய்ய முடியாது. ஆனால் சில சமயங்களில் இத்தனை கத்தோலிக்க புத்தகங்களுக்குள் மிக மேலான புத்தகமான சுவிசேஷத்தின் பிரதி ஒன்று கூட இருக்காது. இது மிகவும் வருந்தத் தக்கது. ஏனெனில் நமது ஆண்டவர்தாமே திருவுளம்பற்றின வார்த்தை களால் தங்கள் மனதையும், இருதயத்தையும் போ´க்காதவர் களுக்கு ஒரு விசேஷ காரியம் குறைவுபடும், அதற்கு வேறெதுவும் ஈடாகாது.

அரசாட்சி ஸ்தாபகத்தின் வழியாய், கத்தோலிக்கக் குடும்ப வாழ்வின் பாரம்பரிய விதிமுறைகளைப் புதுப்பித்து, பெற்றோர் தங்கள் வீட்டில் சிறு பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தை உரத்த சத்தமாய் வாசித்துக் காட்டும்படி அவர்களை வற்புறுத்துவதில் வெற்றி பெறுவோமாகில், உலகத்தைச் சீர்திருத்தும் அலுவலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதென்று சொல்லலாம். குடும்பத்திலும் சமுதாயத்திலும் உள்ள சகல இக்கட்டுகளும் தகுந்த மருந்தாகிய நமது சேசுக்கிறீஸ்துநாதரின் உன்னத உருவம் சுவிசேஷத்தில் இருக் கிறது. அவரிடமே ஒளியும் சமாதானமும் உண்டு. அவர் தேவ வார்த்தையானவர். அவர் பேசினதுபோல் வேறெவரும் பேச வில்லை. அவர் இல்லாவிடில், வேறெவரும் நமக்கு நித்திய ஜீவியத்தின் வார்த்தைகளைத் தர முடியாது.