பாத்திமா காட்சிகள் - அன்னையின் முதல் காட்சி

அன்று மே மாதம் 13-ம் நாள், 1917, ஞாயிறு. பூசைப்பலி முடிந்து லூஸியா (10), பிரான்சிஸ் (9), ஜஸிந்தா (7) மூவரும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு கோவா தா ஈரியாவை அடைந்தனர். நேரம் நடுப்பகலாகிக் கொண்டிருந்தது. ஆடுகள் சந்தடியில்லாமல் மேய்ந்து கொண்டிருந்தன. வானத்தில் ஒரு சிறு மேகம் கூட இல்லாமல் அழகிய நீல நிறமாயிருந்தது. பாத்திமா கோவிலில் மத்தியானம் திரிகால் மணி அடித்த சத்தம் தெளிவாகக் கேட்டது. சிறுவர் மூவரும் முழந்தாளிட்டு திரிகால ஜெபம் சொன்னார்கள்.

மலைப்பாங்கான அவ்விடத்தில் ஒரு சிறு குகை போல் காணப்பட்ட புதர் அடர்ந்த இடம் ஒன்று இருந்தது. மூன்று பக்கமும் அடைப்பு. ஒரு பக்கம் மட்டும் திறப்பாயிருந்தது. திறந்த பக்கத்தில் கற்களை அடுக்கி சுவர் மாதிரி எழுப்பி அடைத்து விட்டால், மழைக்குத் தங்குவதற்கு வீடு போல் இருக்கும் என்று அதைக் கட்டும் வேலையில் அவர்கள் ஈடுபட்டார்கள். கற்களை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கினார்கள்....

திடீரென ஒரு பெரும் ஒளி வீசியது! மின்னல் என அவர்கள் எண்ணினார்கள். மேகமில்லாமல் எப்படி மின்னல் வரும் என்று நினைக்க அவர்களுக்குத் தோன்றவில்லை. வீடுகட்டும் வேலையை விட்டு விட்டு அச்சத்துடன் தாங்கள் இருந்த மேட்டிலிருந்து கீழிறங்கும் சரிவில், ஏறக்குறைய நூறு மீட்டர் தூரத்திலிருந்த ஹோம் ஓக் என்ற மரத்தடிக்கு ஓடினார்கள். அங்கு வரவும் மீண்டும் ஒளி வீசியது. 

பயந்து விட்ட சிறுவர் மூவரும் ஹோம் ஓக் மரத்தை விட்டு இன்னும் ஒரு நூறு மீட்டர் தூரம் கிழக்கு நோக்கி ஓடினார்கள். அஸின் ஹேரா என்ற தாழ்வான ஒரு மரத்தருகே வரவும் அப்படியே நின்று விட்டார்கள். மரத்திற்கும் அவர்களுக்கும் இரண்டு எட்டுத் தான் இருக்கும். அம்மரம் ஒரு மீட்டர் உயரமே. அம்மரத்தின் உச்சியில் ஓர் ஒளியுருண்டை! அதன் நடுவில் ஒரு பெண்!! 

லூஸியா எழுதுகிறபடி, ''யாவும் வெண்மையான ஒரு பெண்; ஒளிவீசும் சூரியனை விட அதிக ஒளியுடனும், அதிகத் தெளிவுடனும், மிகப் பிரகாசமான சூரியக் கதிர் பாயும் ஒளிக்கட்டி போல்" காணப்பட்டார்கள். அவர்களது முகம் விவரித்துச் சொல்ல முடியாத அழகுடன் விளங்கியது. அம் முகத்தில் "துயரமில்லை, மகிழ்வுமில்லை. ஆனால் ஆழ்ந்த தோற்றமாயிருந்தது." கனிவுடன் கூடிய கண்டிப்பு காணப்பட்டது. 

ஜெபிக்கும் பாவனையில் கரங்கள் நெஞ்சில் கூப்பியிருந்தன. வலது கரத்தின் விரல்களுக்கிடையே ஒரு ஜெபமாலை தொங்கியது. வெண்முத்தால் செய்து வெள்ளிச் சிலுவை இணைக்கப்பட்டதாகத் தோன்றியது; அதே வெண் ஒளியால் ஆக்கப்பெற்றது போலிருந்தது. ஒரு வெண்ணிற அங்கி கால் வரையிலும் மூடியிருந்தது. கழுத்தருகே அது ஒரு பொன் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. 

பாதங்களின் முன்பாகம் அம்மரத்தின் கிளையைத் தொட்டும் தொடாமலும் தெரிந்தது. தலையையும், தோள்களையும் மூடிய முக்காடு பாதம் வரையிலும் தொங்கியது. அதன் ஓரங்கள் அதிகப் பிரகாசமுடைய ஒளியால் தங்கச் சரிகை வேலை செய்தது போல் காட்சியளித்தன. தலைமுடியோ, காதுகளோ வெளியே காணப்படவில்லை. அவர்களிடமிருந்து ஏறக்குறைய ஒன்றரை மீட்டர் சுற்றுக்கு வீசிய ஒளி வெள்ளத்தினுள் குழந்தைகள் மூவரும் நின்றனர்.

என்றுமே மறக்க முடியாத இனிய குரலில் அப்பெண் கூறினார்கள்: "பயப்படாதீர்கள். உங்களுக்கு ஒரு தீமையும் செய்ய மாட்டேன்."

உடனே குழந்தைகள் திடமடைந்தார்கள். அம்மாதிடம் சில கேள்விகள் கேட்குமளவு லூஸியாவுக்குத் திடன் ஏற்பட்டது.

"நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" 

''நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்.'' 

''உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?''

"நீங்கள் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் 13-ம் தேதியில் இதே நேரம் இங்கே வர வேண்டும் என்று கேட்க வந்தேன். நான் என்ன விரும்புகிறேன் என்று பின்னால் கூறுவேன். ஏழாவது ஒரு முறை இங்கு திரும்பவும் வருவேன்.''

"நான் மோட்சத்திற்குப் போவேனா?'' 

''ஆம். போவாய்.'' 

''ஜஸிந்தா ?'' 

"அவளும் போவாள்.'' 

"பிரான்சிஸ்?''

"அவனும் அங்கு போவான். ஆனால் அதற்கு முன் அவன் அநேக ஜெபமாலைகள் சொல்ல வேண்டும்'' என்றார்கள்.

தன் பெயர் சொல்லக் கேட்டதும் பிரான்சிஸ் லூஸியாவிடம்,

"என்னால் அங்கே ஒருவரையும் பார்க்க முடியவில்லையே; ஒரு கல்லை எறி. அது ஒரு ஆள்தானா என்று பார்ப்போம்" என்றான். லூஸியா அதை மறுத்து ஆச்சரியத்துடன் :

''பிரான்சிஸ் உங்களை ஏன் பார்க்க முடியவில்லை?'' என்று கேட்டாள்.

''அவனை ஜெபமாலை சொல்லச் சொல். அப்போது என்னைக் காண்பான்.''

லூஸியா இதை பிரான்சிஸிடம் கூறினாள். அவன் உடனே தன் ஜெபமாலையை எடுத்து ஜெபிக்கத் தொடங்கினான். ஆறு ஏழு அருள்நிறை மந்திரம் சொல்லவும் திடீரென அவனும் காட்சியைக் தண்டான்.

ஆனால் பிரான்சிஸ் காட்சியைக் கண்டானேயன்றி, தேவ அன்னை கூறிய எதையும் அவன் ஒருபோதும் கேட்கவில்லை. லூஸியா பேசுவது கேட்கும். மாதா கூறியதை அவன் மற்ற இருவரிடம் மிருந்தே கேட்டு அறிந்து கொள்வான்.

இதற்கிடையில் லூஸியா மேலும் சில கேள்விகள் கேட்டாள். மோட்சத்தைப் பற்றிப் பேச்சு வந்ததால், லூஸியா வீட்டில் அவள் அக்காவிடம் நெசவு கற்று சமீபத்தில் இறந்து போன இரு பெண் களைப் பற்றி அவளுக்கு நினைவு வந்தது. எனவே,

''தஸ்நேவிஸ் மேரி மோட்சத்திலிருக்கிறாளா?'' ''ஆம். அவள் மோட்சத்தில் இருக்கிறாள்.'' ''அமெலியா?'' "அவள் உலக முடிவு வரை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்பாள்.''

அமெலியாவுக்கு வயது 18 முதல் 20க்குள் இருக்கும் என லூஸியா கூறுகிறாள். தஸ்நேவிஸ் மேரிக்கு வயது 16.

மீண்டும் நம் அன்னை பேசினார்கள்:

''கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவர் உங்களுக்கு அனுப்ப விரும்பும் எல்லாத் துன்பங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுக்க நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள்.
''ஆம். விரும்புகிறோம்'' என்று மூவர் சார்பிலும் லூஸியா பதிலளித்தாள்.

''அப்படியானால் நீங்கள் அதிகம் துன்பப்பட நேரிடும். ஆனால் கடவுளின் வரப்பிரசாதம் உங்களைத் தேற்றும்'' என்று கூறியபடியே தேவ அன்னை தன் கரங்களை விரித்து அக்குழந்தைகள் மீது ஒரு தெய்வீக ஒளியைப் பாயவிட்டார்கள். அந்த ஒளி எவ்வளவு பிரகாசமுடையதா யிருந்தது என்றால், அவர்களுடைய உள்ளத்தையும், ஆன்மாவையும் ஊடுருவிச் சென்று அவர்கள் தங்களையே கடவுளில் காணச் செய்தது. லூஸியா கூறுகிறாள்:

"அவ்வொளி எங்கள் இருதயத்தின் உள் ஆழங்களையும் ஊடுருவிச் சென்று, எங்களையே நாங்கள் அவ்வொளியாக இருந்த கடவுளில், கண்ணாடியில் காண்பதை விட அதிகத் தெளிவாகக் காணச் செய்தது. மேலும் ஒரு அந்தரங்க ஏவுதல் எங்களுக்குக் கொடுக்கப்பட, நாங்கள் முழங்காலில் விழுந்து, "ஓ மிகவும் பரிசுத்த தமத்திரித்துவமே, உம்மை ஆராதிக்கிறேன். என் தேவனே, என் தேவனே, மிகவும் பரிசுத்த திவ்விய நற்கருணையில் உம்மை நேசிக்கிறேன்" என்று எங்கள் இருதயத்தில் திரும்பவும் திரும்பவும் சொன்னோம்.''

குழந்தைகள் இவ்வாறு ஜெபித்து முடியும் வரை தேவ அன்னை சற்று நேரம் காத்திருந்த பின் அவர்களைப் பார்த்து : ''உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவும், யுத்தம் முடிவடையவும் ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லுங்கள்" என்று கூறி, கிழக்குத் திசையில் சூரிய ஒளியுடன் கலந்து, "எல்லையற்ற தொலைவில்" மறைந்தார்கள்.

குழந்தைகள் மூவரும் அத்திசையைப் பார்த்துக் கொண்டே நெடுநேரம் நின்றார்கள். ஓர் ஆழ்ந்த பரவசம் அவர்கள் மீது படிந் திருந்தது. மவுனமாக சிந்தனையின் வசப்பட்டே இருந்தார்கள். ஆயினும் தேவதூதனைக் கண்ட பின் அவர்கள் உணர்ந்த பலவீனம் இப்போது அவர்களிடம் காணப்படவில்லை. ஒருவித அமைதி யையும், விசாலமான மகிழ்வையும், பளுவற்ற தன்மையையும், அன்னையின் காட்சி அவர்களுக்குக் கொடுத்திருந்தது. 

"ஆ! அந்த அம்மா எவ்வளவு அழகு!" என்று ஜஸிந்தா இடைக்கிடையே கூறு வாள். அன்னையின் தோற்றம் ஒரு தாயின் அன்புடனும் சொல்லி விளக்க முடியாத அழகுடனும் இருந்ததை மூவரும் உணர்ந்தனர்.

"தேவ அன்னையின் அழகு என்னை ஏறக்குறைய பார்வை யிழக்கச் செய்தது. ஆயினும் அவர்களை நோக்கிக் கொண்டிருக்க நான் களைத்து விடவில்லை. நம் அன்னை இத்தனை அழகுள்ள வர்கள் என்று நான் ஒருபோதும் எண்ணியதேயில்லை" என்று கூறுகிறாள் லூஸியா.

ஏறக்குறைய பத்து நிமிடங்கள் காட்சி நீடித்திருந்தது. அதன் இனிமையால் நிறைந்திருந்த குழந்தைகள் விளையாட விரும்ப வில்லை. தங்களுக்குள் அதிகம் பேசவுமில்லை .

இக்காட்சியைப் பற்றிக் கேள்விப்பட்டால் யாருமே நம்ப மாட்டார்கள், ஆனால் திட்டுவார்கள் என்று லூஸியா நினைத்தாள். எனவே அதை யாரிடமுமே சொல்லக் கூடாது என்று மற்ற இருவரிடமும் எச்சரித்தாள். 

"அந்த அம்மா என்ன அழகு!" என்று இடைக்கிடையே ஜஸிந்தா தன்னையும் மீறி சொல்லிக் கொண்டிருந் ததைப் பார்த்த லூஸியா, "நீ எல்லாவற்றையுமே சொல்லி விடுவாய் போல!" என்றாள். "நீ ஒன்றும் பயப்பட வேண்டாம். நான் இந்த இரகசியத்தை வெளியிடவே மாட்டேன்'' என்றாள் ஜசிந்தா.

பிரான்சிஸ் மாதாவைக் கண்டான். ஆனால் அவர்கள் கூறிய எதையும் அவன் கேட்கவில்லையாதலால் தான் மோட்சத்துக்குப் போவதாக மாதா கூறினார்கள் என்று கேட்டவுடன் அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, "ஓ என் தாயே, நீங்கள் விரும்பும் ஜெபமாலைகள் அத்தனையும் நான் சொல்வேன்'' என்றான்.

ஜஸிந்தா அக்காட்சியின் இனிய மகிழ்ச்சியால் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தாள். ஆனால், மாலையில் வீடு சேர்ந்ததும் அவளால் அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் பெற்றோர் சந்தையிலிருந்து திரும்பி வர சற்று நேரமாயிற்று. ஜஸிந்தா துறுதுறுவென்று வந்தாள். சிறிது நேரத்துக்குள் மார்ட்டோவும் ஒலிம்பியாவும் திரும்பி வந்த சத்தம் வாசலில் கேட்டது. அவ்வளவு தான்! நேரே தன் தாயிடம் ஓடினாள் ஜஸிந்தா .

"அம்மா, நான் மாதாவைக் கண்டேன் கோவா தா ஈரியாவில்!'' என்று ஒரேயடியாக செய்தியைப் போட்டு உடைத்து விட்டாள்!

இவ்வளவிற்கும் அவள் பெற்றோர் வண்டியிலிருந்து சாமான்களைக் கூட இறக்கி முடியவில்லை .

"ஓகோ! இப்பொழுதே நீ அர்ச்சியசிஷ்டவள் ஆகிவிட்டாயோ மாதாவைப் பார்த்துவிட?" என்று கூறியபடியே ஒலிம்பியா தன் மகளை அணைத்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள்.

''நான் மாதாவைப் பார்த்தேனம்மா' என்று அழுத்திக் கூறிய ஜஸிந்தா ஒரே மூச்சில், மின்னல் மின்னியது, அவர்கள் பயந்து ஓடியது, அஸின் ஹேரா மரத்தின் மீது ஒளி உருண்டை காணப்பட்டது, அது ஆளா என்று பார்க்க கல் எறியும்படி பிரான்சிஸ் சொன்னது, லூஸியா மறுத்தது, தினமும் ஜெபமாலை சொல்ல வேண்டுமென்று மாதா கூறியது, தானும் அண்ணனும் மோட்சத்திற்குச் செல்ல விருப்பது... எல்லாவற்றையும் மளமளவென்று பொரிந்து கொட்டினாள்.

சந்தையிலிருந்து வாங்கி வந்திருந்த சாமான்களையும், சிறு பன்றிக்குட்டியையும் அவற்றிற்குரிய இடங்களில் ஒழுங்குபடுத்தி வைப்பதில் பெற்றோர் ஈடுபட்டனர்.

சற்று நேரத்தில் ஜஸிந்தா மீண்டும் வந்து.

''அம்மா, நானும் பிரான்சிஸம் ஜெபமாலை சொல்லப் போகிறோம். ஜெபமாலை சொல்ல வேண்டுமென்று மாதா சொன்னார்கள்'' என்று கூறி ஜெபமாலை சொல்லப் போய் விட்டார்கள் இருவரும்.

அதற்குள் இரவு சாப்பாடு தயாராயிற்று. மார்ட்டோ அலுப்பினால் சற்று களைத்து அமர்ந்திருந்தார். அவருடைய கவனத்தைத் திருப்புவதற்காக ஒலிம்பியா தன் இளைய மகளைக் கூப்பிட்டு :

"ஜஸிந்தா, இங்கே வா. கோவா தா ஈரியாவில் நீ கண்ட அம்மாவைப் பற்றி அப்பாவிடம் சொல்" என்றாள்.

உடனே ஜஸிந்தா சொல்ல ஆரம்பித்து விட்டாள். ஒளி வீசும் கண்களுடன், மகிழ்ச்சியால் பூரித்த முகத்துடன், தான் கண்ட காட்சியை ஒரு வித ஆர்வமுடன் கூறினாள். மார்ட்டோ ஆழ்ந்த கவனத்துடன் தன் சின்ன மகளின் விவரிப்பைக் கேட்டார். 

ஜஸிந்தா சொல்லி முடிந்ததும் அவர் பிரான்சிஸைக் கூப்பிட்டு அவன் அது பற்றி என்ன சொல்லுகிறான் என விசாரித்தான். பிரான்சிஸ் கூறியது அதைப் போல உயிரோட்டமுள்ளதா யில்லாவிட்டாலும், ஜஸிந்தா கூறியதெல்லாம் உண்மைதான் என்று காட்டப் போதுமாயிருந்தது.

ஒலிம்பியாவுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. "ஜஸிந்தா ஒரு சின்ன அர்ச்சியசிஷ்டவள் அல்லவா, அவளுக்கு மாதா தோன்றி காட்சி கொடுக்க'' என்று சற்று அலட்சியமாகக் கூறினாள் அவள். அன்று அங்கு வந்திருந்த ஒலிம்பியாவின் சகோதரன் அந்தோனி என்பவர் யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, "பிள்ளைகள் வெண்ணுடை அணிந்த ஒரு பெண்ணைப் பார்த்திருந்தால், அது மாதாவைத் தவிர வேறு யாராயிருக்கும்?" என்றார்.

மார்ட்டோ ஆழ்ந்து சிந்தித்தார். தம் பிள்ளைகள் தம்மை ஏமாற்ற நினைக்கவே முடியாது. பிரான்சிஸ் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டான். ஜஸிந்தாவால் பொய் சொல்லவே முடியாது. இது உறுதி. அப்படியானால்...?

மார்ட்டோ இவ்வாறு நிதானத்துடன் கூறினார்: "உலக ஆரம்பம் முதல் மாதா பல வகையாக, அநேக சந்தர்ப்பங்களில் தோன்றியுள்ளார்கள். உலகம் தீயதாக இருக்கிறது; மாதா இவ்வாறு தோன்றியிராவிட்டால் அது இதைவிட மிகத் தீயதாய்ப் போயிருக்கும். கடவுளின் வல்லமை மிகப் பெரிது. இந்நிகழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரியாது. ஆனால் இதில் ஏதோ ஒன்று நாளடைவில் வெளிப்படும். இவ்வாறு பாத்திமா காட்சிகளை முதலில் நம்பி ஏற்றுக்கொண்டவர் மார்ட்டோதான்.