ஜனவரி 31

அர்ச். ஜான் போஸ்கோ - துதியர். 

1815-ம் வருஷம், ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி இத்தாலியாவில் பெக்கி என்னும் சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் ஜான் போஸ்கோ பிறந்தார். அவருக்கு இரண்டு வயது ஆகுமுன்னே அவர் தமது தந்தையை இழந்தார். 

பிற்காலத்தில் லட்சக்கணக்கான அனாதைப் பிள்ளைகளுக்குத் தந்தையாக இருப்பதற்காக ஜான் போஸ்கோ தாமே இளம் வயதில் அனாதையாக வேண்டுமென்று கடவுள் சித்தங்கொண்டார். புண்ணியவதியான அவருடைய தாய் மார்கரீத் மரியம்மாள் அவரைத் தெய்வப் பக்தியிலும், கிறீஸ்தவ ஒழுக்கத் திலும் நன்றாய் வளர்த்தாள்.

ஜான் போஸ்கோ சிறுவயதிலே அன்பான வார்த்தைகளினாலும், இனிய பாடல்களினாலும், நல்ல விளையாட்டுகளினாலும் தனது தோழர்களைத் தன் வசப்படுத்தி அவர்கள் கெட்ட பேச்சுக்களையும் கெட்ட விளையாட்டுக்களையும் விலக்கும்படி செய்வார். திடீரென்று விளையாட்டை நிறுத்தி, எல்லோரும் தன்னோடு சேர்ந்து ஜெபமாலை ஜெபிக்கும்படி செய்வார். 

அவருடைய குடும்பத்தின் எளிமையினால் அவர் அநேக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தாலும், தான் ஓர் குருவானவர் ஆகவும், ஏழைப்பிள்ளைகளுக்காகவும் அனாதைகளுக்காகவும் உழைக்க வேண்டுமென்கிற ஒரே எண்ணம் அவர் மனதில் எப்போதும் குடிகொண்டிருந்தது.

குருப்பட்டம் பெற்ற பிறகு தூரின் பட்டணத்திற்குச் சென்று, அங்கு தேவ ஏவுதலால் கிறீஸ்தவ ஜீவியத்தின் அடிப்படையான சத்தியங்களையும் ஒழுங்குகளையும் வாலிபர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்து, “ஆரட்டரி” என்று சொல்லப்படும் சலேசியன் ஸ்தாபனத்திற்கு அஸ்திவாரமிட்டார். 

கொஞ்ச காலத்திற்குப்பின், வரப்போகிற காரியங்களை அவருக்குச் சிறு வயதிலே கனவுகளின் வழியாக முன்னறிவித்த பரிசுத்த கன்னிமரியின் சகாயத்தினால், ஆண்களுக்காக சலேசியன் சபையையும், பெண்களுக்காக கிறீஸ்தவர்களின் சகாயியான அர்ச். மரியாயின் கன்னியர் சபையையும் ஸ்தாபித்தார். 

சலேசியருடைய பற்பல பணிகளுக்கு ஜெபத்தினாலும் பொருளினாலும் உதவி புரிவதற்காகப் “பரோபகாரிகளின் சபை” ஒன்றையும் ஏற்படுத்தினார். ஜான் போஸ்கோ ஆத்துமங்களின் இரட்சண்யத்தின் மீது அடங்காத தாகங் கொண்டிருந்தார். ஏழைப் பிள்ளைகளுக்காக தரும மடங்களையும், பாடசாலை களையும், தொழிற்சாலைகளையும், தேவ வழிபாட்டிற்காக தேவாலயங் களையும் உலகமெத்திசையிலும் கட்டுவிக்க முயற்சி எடுத்துக்கொண்டார். 

விசுவாச ஜீவியம் ஓங்கி வளரவும், கிறீஸ்தவர்கள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நன்மை வாங்கவும் வருந்தி உழைத்தார். அஞ்ஞானிகளை மனந்திருப்பத் தமது சபை குருக்களைப் பலமுறை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார். அவர் எதார்த்தமும் நேர்மையுமுள்ள தேவ மனிதனாக விளங்கினார். கற்பு என்னும் புண்ணியத்தை அதிகமாய் நேசித்தார்.

இடைவிடாமல் கடவுளோடு மனதினால் ஒன்றித்திருந்தார். ஏராளமான தேவ வரங்களால் நிரப்பப் பெற்றார். அநேக புதுமைகளைச் செய்தார். தேவ பராமரிப்பில் மட்டற்ற நம்பிக்கை வைத்திருந்தார். தமது மக்களுக்கு மூன்று வித பக்தியை ஊட்டினார். 

அதாவது அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, தேவ நற்கருணை உட்கொள்ளவும், கிறீஸ்தவர்களின் சகாயியான அர்ச். மரியாயை அதிகமாய் நேசிக்கவும், பரிசுத்த பாப்பானவருக்குப் பிள்ளைக்குரிய பாசத்துடன் பணிந்து நடக்கவும் கற்றுக்கொடுத்தார். 

அர்ச். ஜான் போஸ்கோ “சிறுவரின் அப்போஸ்தலர், அனாதைகளின் தந்தை, பாவசங்கீர்த்தனத்தின் அப்போஸ்தலர், திருச்சபையின் காவலர்" என்ற அழியாத பெயர் பெற்று, கடின உழைப்பினால் பலம் குன்றி வியாதியுற்று, 1888-ம் வருஷம் பெப்ருவரி மாதம் 7-ம் தேதி தமது 73-வது வயதில் பாக்கியமாய் மரித்து மோட்ச சம்பாவனையைப் பெற்றார்.

யோசனை 

அர்ச்.ஜான் போஸ்கோவின் படிப்பினையையும் மாதிரியையும் பின்பற்றி, தேவ நற்கருணையையும், தேவதாயையும், பரிசுத்த தந்தையையும் உள்ளன்புடன் நேசிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். சொரப்பியன், வே. 
அர்ச். சீருஸும் துணை., வே. 
அர்ச். மார்ஸெல்லா, வி. 
அர்ச்.மயிதாக், மே.