ஜனவரி 24

அர்ச். திமோத்தி - மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி. 97).

திமோத்தியின் தந்தை அஞ்ஞானியும், தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர்களுமாயிருந்தார்கள். அர்ச். சின்னப்பர் காடு காடாய்ச் சென்று பிரசங்கித்தபோது திமோத்தியும் அவருடைய தாயும், பாட்டியும் அவ்விடத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். 

திமோத்தியின் பக்தி, புத்தியை அறிந்த அப்போஸ்தலர் அவருக்கு குருப்பட்டம் கொடுத்து தமது பிரயாணங்களில் அவரைத் தமது துணைவராகத் தெரிந்துகொண்டார். 

அர்ச். சின்னப்பர் அவரை துன்பப்படும் கிறீஸ்தவர்களிடம் அனுப்புவார். சில சமயங்களில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடம் அவரை அனுப்புவார். தமது குருவும் ஆசிரியருமானவருடைய புத்தி ஆலோசனைப்படி திமோத்தி நடந்துகொண்டபடியால் எபேசு நகருக்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். 

அர்ச். சின்னப்பர் வேதத்தினிமித்தம் சிறையிலிருந்த காலத்தில் தமது சீஷனாகிய திமோத்திக்கு வேத விஷயமாக இரு நிருபங்களை எழுதி அனுப்பினார். 

இவர் அநேக புண்ணியங்களையும் தவச் செயல்களையுஞ் செய்து, அஞ்ஞானிகளால் வேதத்திற்காக தடிகளால் அடிக்கப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை

அர்ச். திமோத்தியைப் போல நாமும் குருக்கள் முதலிய பெரியோர்களுடைய புத்திமதிகளைக் கேட்டு நடப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பபிலாஸ், மே.வே.
அர்ச். சுரானுஸ், ம. 
அர்ச். மஸெதோனியுஸ், அதிமே.
அர்ச். காடக், ம.