அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 18

மகா பபிலோன் விழுந்துபோகும்படி தீர்ப்பிடப்பட்டதும், அதற்கு வந்த தேவ கோபாக்கினையைக் கண்டு இராஜாக்களும் வியாபாரிகளும் துயரப்பட்டதும்.

1. இவைகளுக்குப் பின்பு மிகுந்த வல்லமையுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவருடைய மகிமையால் பூமி பிரகாசமாயிற்று.

2. அவர் பலத்த சத்தமிட்டு: விழுந் தது, மகா பபிலோன் விழுந்தது. அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த அரூபிகளுடைய கிடங்கும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகல பறவைகளும்அடைகிற பொந்துமா யிற்று. (காட்சி. 14:8; இசை. 21:9; எரே. 51:8.)

3. ஏனெனில் அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமமான மதுவைச் சகல ஜாதி ஜனங்களும் குடித்தார்கள். பூமியின் இராஜாக்கள் அவளோடே சோரம்போனார்கள். பூமியின் வர்த்த கர்கள் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியால் ஐசுவரியரானார்கள் என்றார்.

4. பின்பு பரலோகத்திலிருந்து வே றொரு சத்தம் புறப்படக் கேட்டேன். அது சொன்னதாவது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய அக்கிரமங்களுக் குப் பங்காளிகளாகாதபடிக்கும், அவ ளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாத படிக்கும் அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

5. ஏனெனில் அவளுடைய பாவங்கள் வானலோகமட்டும் ஏறிற்று; ஆண்டவர் அவளுடைய அக்கிரமங்களை நினைவுகூர்ந்தார்.

6. அவள் உங்களுக்குச் செய்ததுபோல் நீங்களும் அவளுக்குப் பதில் செய்யுங்கள். அவளுடைய கிரியைகளுக்குத் தக்கபடி அவளுக்கு இரட்டிப்புக்கு இரட்டிப்பாய்க் கொடுங்கள். அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்தில் இரட்டிப்பாய் அவளுக்குக் கலந்துகொடுங்கள்.

7. எவ்வளவுக்கு அவள் தன்னை மகிமைப்படுத்தி: நான் இராக்கினியாய் வீற்றிருக்கிறேன், நான் விதவையல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லை என்று சொல்லி, செல்வச் செருக்கிலிருந்தாளோ அவ்வளவுக்கு வேதனையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். (இசை. 47:8.)

8. ஆகையால், அவளுக்குரிய வாதைகளாகிய சாவு, துக்கம், பஞ்சம் இவைகள் ஒருநாளிலே அவளுக்கு வரும். அக்கினியினாலே அவள் சுட்டெரிக்கப்படுவாள். ஏனெனில் அவளுக்கு நியாயந்தீர்க்கச் சர்வேசுரன் வல்லபமுள்ளவராயிருக்கிறார்.

9. அவளோடே வேசித்தனஞ் செய்து, சுகபோகமாய் வாழ்ந்த பூமியின் இராஜாக்களோவெனில், அவள் வேகிறதினால் எழும்பும் புகையைக் காணும் போது, அவளைப்பற்றி அழுது புலம்பி,

10. அவளுக்கு உண்டான வாதைக்குப் பயந்து தூரத்திலே நின்று: ஐயோ! ஐயோ! பபிலோன் மகா நகரே, பேர்போன பராக்கிரம பட்டணமே, ஒரே நாழிகையில் உனக்குத் தீர்ப்பு வந்ததே என்பார்கள்.

11. அப்படியே பூமியின் வர்த்தகர்களும் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், விலையேறப்பெற்ற இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாப் புடவைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,

12. சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தால் செய்யப்பட்ட சகல வஸ்துக்களையும், விலையுயர்ந்த கற்களினாலும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும், சலவைக்கற்களினாலும் செய்யப்பட்ட சகல பாத்திரங்களையும்,

13. இலவங்கைப் பட்டையையும், சுகந்த வர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சை ரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷ உயிர்களையும் இனிக் கொள்வார் இல்லாதபடியால், அதன் மேல் அழுது புலம்புவார்கள்.

* 13. அக்காலத்தில் அடிமைகளை மிருகங்களெனப் பாவித்து அவர்களை விற்றதினாலே அந்த அடிமைகளுக்கு மெய்யான ஞான ஆத்துமம் உண்டென்றும், அப்படிப்பட்ட ஆத்துமத்தை விற்பது மகா அக்கிரமமென்றும் காட்டும்படி மனுஷருடைய ஆத்துமத்தையும் விற்றதாகச் சொல்லியிருக்கிறது.

14. உன் ஆத்துமம் இச்சித்த கனிவர்க்கங்களும் உன்னைவிட்டு நீங்கிப் போயின; செழிப்பும், சம்பிரம சிறப்புமானவைகளெல்லாம் உன்னைவிட்டு அழிந்துபோயிற்று; இனி நீ அவைகளைக் காணமாட்டாய் என்று சொல்லி,

15. இவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி ஐசுவரியரானவர்கள் அவளுக்கு உண்டான வாதைகளுக்குப் பயந்து, தூரத்திலே நின்று அழுது பிரலாபித்து:

16. ஐயோ! ஐயோ! இந்த மகா நகரம் தூமிரமும், இரத்தாம்பிரமும், சிவப்பாடையும தரித்து, பொன்னினாலும், விலையேறப்பெற்ற இரத்தினங்களாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததே!

17. ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியங்களும் அழிந்துபோயிற்றே என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். மாலுமிகள் யாவரும், கடலிலே யாத் திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே வேலை செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,

18. அது வெந்துபோகிற இடத்தைக் கண்டு, இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,

19. தங்கள் தலையின்மேல் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டு, அழுது பிரலாபித்து: ஐயோ! ஐயோ! அந்த மகா நகரம் சமுத்திரத்திலே கப்பல்களையுடைய யாவரையும் தான் கொடுத்த கிரயங்களினால் ஐசுவரியர்களாக்கினதே; ஒரு நாழிகைக்குள்ளே அது பாழாய்ப்போயிற்றே என்பார்கள்.

20. பரலோகமே, பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே, தீர்க்கதரிசிகளே, அதைப் பார்த்துக் களிகூருங்கள். ஏனெனில் இதோ, உங்கள் நிமித்தம் சர்வேசுரன் அதற்குத் தீர்வை யிட்டார் என்று சொல்லக் கேட்டேன்.

21. பின்பு பலமுள்ள வேறொரு தூதன் பெரிய திரிகைக் கல்லை யொத்த ஒரு கல்லைத் தூக்கிக் கடலிலே எறிந்து: இப்படியே வேகமாய்ப் பபிலோன் மாநகரம் தள்ளுண்டு இனி ஒருபோதும் காணப்படாமற்போம்.

22. சுரமண்டலக்காரர்கள், கீத வாத் தியக்காரர்களுடைய வாத்தியங்களும், நாகசுரக்காரர்களுடைய குரலொலியும், எக்காளச் சத்தமும் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தெந்தத் தொழில் செய்யும் தொழிலாளி எவனும் உன்னிடத்தில் இனிக் காணப்படுவது மில்லை; வேலை ஏந்திரச் சத்தமும் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

23. விளக்கு வெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய குரலும், இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; ஏனெனில் உன் வர்த்தகர்கள் பூலோகத்திலே பெரியோர்களாயிருந்தார்கள்; உன் மாய சூனியத்தால் எல்லாத் தேசத்தாரும் மோசம்போனார்கள்.

24. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும், பரிசுத்தவான்களுடைய இரத்தமும், பூமியிலே கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்திலே காணப்பட்டது என்று உரைத்தார்.