ஜனவரி 17

அர்ச். பெரிய அந்தோணியார் - மடாதிபதி (கி.பி. 356).

இவர் எஜிப்தில் தேசத்தில் செல்வந்தரான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து புண்ணியவாளராய் வாழ்ந்து வந்தார். 

இவருடைய பெற்றோர் இறந்த பின் “நீ உத்தமனாக வேண்டுமானால் உனக்குள்ளதை விற்று கேட்பவருக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்னும் சுவிசேஷ வாக்கியத்தைக் கேட்டு, தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு, வனாந்தரத்துக்குச் சென்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்தார். 

துர்மனப் பசாசோவெனில் இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்டு காய்மகாரப்பட்டு பலவிதத்திலும் அவரைத் துன்பப்படுத்தியது. பயங்கரமும் அவலட்சணமுமுள்ள ரூபங்கள் எடுத்து அவரைப் பயமுறுத்தும். பெண்போல் வடிவமெடுத்து அவரைப் பாவத்தில் விழத்தாட்ட முயலும். 

அந்தோணியார் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும், விசேஷமாக சிலுவை அடையாளத்தாலும் துஷ்டப் பேயைத் துரத்துவார். இந்த சோதனைகளுக்கு அவர் உட்படாததைக் கண்ட பசாசு அவரை ஒரு நாள் கடுமையாக அடித்துவிட்டு ஓடிப்போனது. 

அப்போது நமது கர்த்தர் அவருக்குத் தரிசனையாகி, அவருக்கு சந்தோஷ ஆறுதல் வருவித்தார். அந்தோணியார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு விசை கொஞ்சம் அப்பமும் தண்ணீரும் புசிப்பார். ஆட்டுத் தோலை ஆடையாகத் தரிப்பார். வெகு நேரம் ஜெபம் செய்வார். பலமுறை அஸ்தமன காலம் தொடங்கி உதயம் வரைக்கும் முழந்தாளிலிருந்து ஜெபிப்பார். 

இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட அநேக மக்கள் அவரது ஆசீர்வாதத்தைப் பெறும்படி அவரிடம் போவார்கள். அர்ச். அந்தோணியார் சகல புண்ணியங்களையும் ஒழுங்காய் அநுசரித்து 105-ம் வயதில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.

யோசனை

பசாசால் நமக்கு உண்டாகும் சோதனைகளை ஜெபத்தாலும் ஒருத்தலாலும் ஜெயிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஸ்பெயுசிபஸும், துணை.,வே. 
அர்ச். சுல்பீசியுஸ், ம.மே. 
அர்ச். சுல்பீசியுஸ், மே. 
அர்ச். மில்ஜிதே, க. 
அர்ச். நென்னியுஸ், ம.