இடைவிடா சகாயத்தாய்க்கு நன்றியறிதல்.

நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும். எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

திருச்சபையின் தேவதிரவிய அனுமானங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும் எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத்தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோமாக.

( சிறிது நேரம் மௌன நன்றியறிதல்)

நோயாளிகளை ஆசீர்வதித்தல்.

செபிப்போமாக.
ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து, உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் பெயராலே!
ஆமென்.

ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.

ஆமென்.