பாத்திமா காட்சிகள் - லூஸியா குடும்பம்

அந்தோனி சாந்தோஸ் என்பவர் ஒரு விவசாயி. இவருக்கு கோவா தா ஈரியாவிலும், அதன் அருகாமையிலும் கொஞ்சம் நிலங்கள் உண்டு. மகிழ்ச்சியான சுபாவமுடையவர். தேவ காரியங் களில் அதிக ஆர்வமுள்ளவர் என்று கூற முடியாது. ஆனால் தெய்வப் பற்றும் நேர்மையும் உடையவர். 

இவருடைய மனைவி மரிய ரோசா. உறுதியான விசுவாசமுடையவள். தெய்வ பக்தியும் தேவ அன்னை மீது பற்றுதலும் அவளிடம் உண்டு. இந்தக் குடும்பத்தில் 1907ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் நாளன்று பிறந்தாள் லூஸியா. ஏழு பிள்ளைகளில் லூஸியாதான் இளையவள்.

லூஸியா தன் குழந்தைப் பருவத்தை நினைக்கையில், முதன் முதலில் அவளுக்கு நினைவுக்கு வருவது தன் தாய் அவளுக்கு அருள் நிறை மந்திரத்தைக் கற்றுக் கொடுத்த நிகழ்ச்சிதான். " அருள் நிறைந்த மரியாயே வாழ்க...'' என்று எந்த மொழியில் கூறினாலும் அதில் ஒரு தெய்வீக இனிமை உண்டு. போர்த்துக்கீசிய மொழியில் அது இன்னும் இனிமையுடன் ஒலிப்பதாகக் கூறப்படுகிறது.

முதல் பாடமாக லூஸியா தன் தாயிடம் தேவ அன்னையை வாழ்த்தக் கற்றுக் கொண்டாள். எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்புக் கிடைப்பது அரிது. மரிய ரோசா அன்பும் கண்டிப்பும் உள்ள தாயாக இருந்தாள் என்பது லூஸியாவின் கருத்து.

மரிய ரோசாவுக்கு எழுத வாசிக்கத் தெரியும். அல்யஸ்திரலில் அது எல்லோருக்கும் தெரியாத காலம் அது. "இந்த ஜனங்கள் ஏன்தான் வீட்டுக்கு வீடு போய்ப் பேசிக் கொண்டிருக்கிறார்களோ!

வீட்டிலிருந்து அமைதியாக இந்தப் புத்தகங்களை வாசிப்பதையே நான் விரும்புகிறேன்'' என்பாள் மரிய ரோசா. அவள் வாசித்தவை பக்தியுள்ள புத்தகங்கள்தான். மத்தியான ஓய்வு நேரங்களில் லூஸியா வுக்கும், அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கும் ஞானப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தாள். 

தபசு காலத்தில் ஆண்டவருடைய பாடுகளை விவரிக்கும் புத்தகங்களையும், செபம் தவம் இவற்றின் அவசியத்தை விவரிக்கும் நூல்களையும் வாசிப்பாள். தன் கணவனும், மூத்த பிள்ளைகளும் அரக்கர் கதைகளையும், இராஜா இராணி கதைகளையும் சொல்லும்போது நடுநடுவே நல்ல நீதிக்கதைகளைக் கூறி வழிதிருப்பி விடுவாள் மரிய ரோசா.