பனிமய மாதா - வரலாறு

பனி பெய்ய இயலாத ஆகஸ்ட் மாதத்தில் பனி பெய்திராத உரோமை நகரில், உறைபனி பொழிந்து மலை முகடு முழுதும் மூடிய அதிசயம் ஆகஸ்ட் 5, கி.பி 352ல் நிகழ்ந்துள்ளது. உரோமையில் பத்திரிஸ் அருளப்பர் என்னும் செல்வச் சீமான் தன் மனைவியுடன் வசித்து வந்தார். அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்ட இத்தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லாதால் தங்கள் ஆஸ்தி அனைத்தையும் அன்னை மரியாளுக்கென அர்ப்பணிக்க முடிவு செய்தனர். பாப்பரசர் திபெரியும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இதற்கென மாதாவிடம் இடையறாது மன்றாடி வந்தனர். இவர்களுக்குப் பதிலளிக்க திருவுளம் கொண்ட அன்னை, ஆகஸ்ட் 5 ஆம் தேதி இவர்கள் இருவரின் கனவிலும் தோன்றி, எஸ்கலின் மலையில் தனக்கென்று ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படிகூறினார். பனி பெய்திருக்கும் மலை முகட்டை அவர்களுக்கு அடையாளமாகத் தருவதாக உறுதியளித்தார். இருவரும் பாப்பரசரிடம் செல்ல, அவரும் அதே கனவைக் கண்டதாகக் கூறினார். உரோமையில் பனி பொழிவதில்லை. ஆனால் அந்த இரவு முழுவதும் உறை பனி பெய்து போர்வை போல் மலையை மூடியது. காலையில் செய்தி அறிந்து பனி பெய்த இடத்தைக் காண பெருங்கூட்டம் கூடியது. பனி பெய்த இடத்தின் வடிவத்திலேயே ஆலயம் எழுப்பப்பட்டது. இதுவே பனிமய மாதாவுக்கென்று அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம். அப்போஸ்தலரான புனித லூக்கா தீட்டியதாகக் கூறப்படும் மாதாவின் ஓவியம் ஒன்று இங்கு உள்ளது.

பழைய ஏற்பாட்டில் கிதியோன் தன் போர்வை மட்டும் பனியில் நனைய வேண்டும் என்று வேண்டிய போதும், தன் போர்வை மட்டும் பனியில் நனையக் கூடாது என்று வேண்டியபோதும் இறைவன் அந்த அடையாளத்தைக் கொடுத்தது போல் பனி பெய்யாத இடத்திலும், காலத்திலும் அன்னை செய்த இந்த அற்புதம் அவருக்கு பனிமய மாதா என்று பெயர் பெற்று தந்தது.

(போர்த்துகீசிய மொழியில்) "Signora Das Nevis" - "பனிமய அன்னை".

பனிமய மாதா திருநாள் - ஆகஸ்ட் 5.

முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.

1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவரே.

கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.                                   

இப் பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி "சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இப் பேராலயத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு தினமும் காலை, மாலையில் திருப்பலி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறும். இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகை தந்த மாமனிதர்களில் ஒரு சிலர்: தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். இது போன்று எண்ணற்ற மாமனிதர்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்த தனிப்பெரும் பேற்றினை பெற்றுள்ள தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் தற்போது தங்கத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்துக்குடிக்கு தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. மேலும், சென்னை, மைசூரில் இருந்து ரயில் வசதியும், செனையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையும் உள்ளது. தூத்துக்குடியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை பல உள்ளன.

கார்மேல் மாதா - வரலாறு!

அர்ச்சியசிஷ்ட கார்மேல் அன்னை அல்லது  கார்மேல் மலை அன்னை அல்லது அர்ச்சியசிஷ்ட உத்தரிய மாதா என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, சேசு கிறிஸ்துவின் தாயான அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயராகும்.

கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை அன்னையின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே அன்னைக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

15ம் நூற்றாண்டில், மாதாவின் உத்தரியம் என்னும் அருளிரக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. மாதாவே உத்தரியத்தை புனித சைமன் ஸ்டாக் என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக நம்பப்படுகின்றது. 16 ஜூலை கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் ஆகும்.

அர்ச்சியசிஷ்ட கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார்.

கார்மேல் மாதாவின் சபையானது தனது பெயரை, இஸ்ரயேல் தேசத்தில் உள்ள, கன்னி மரியாளுக்கென்று, அவர் விண்ணுக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக  முதன் முதலில் அர்பணிக்கப்பட்ட ஆலயம் இருக்கும் கார்மேல் மலையைப்  பின்பற்றி எடுத்துக் கொள்கிறது.

புனித சைமன் ஸ்டாக் என்பவர் தனது நாற்பதாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள கார்மேல் சபையில் இணைகிறார். இஸ்ரயேலில் இருக்கும் கர்மேல் சபைக்கு அனுப்பப்பட்ட அவர், கலகக்காரர்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வரை அங்கிருந்து தன் செப தப ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டார்.அதன் பின், தனது சபைச் சகோதரர்களுடன் இங்கிலாந்து திரும்பிய அவர், ஏகமனதாக கிபி 1245 ஆம் ஆண்டில் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மாதாவின் பேரில் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். இதுவே கார்மேல் சபை இவரது தலைமையின் கீழ் தழைத்தோங்கக் காரணமாய் அமைந்தது. இன்று ஏறத்தாழ 764 ஆண்டுகளுக்கு முன்னர், 1251ம் ஆண்டில் கார்மேல் துறவு சபை இடையூறுகளுக்கு உள்ளானது. அச்சமயத்தில் சைமன், தனது சபைக்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட சலுகையை வழங்குமாறு அன்னைமரியிடம் உருக்கமாகச் செபித்து வந்தார். இந்த நல்ல துறவியின் செபத்தைக் கேட்ட அன்னைமரியா, 1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கேம்பிரிட்ஜில் ஒரு கறுத்த ஆரஞ்சு வண்ண உத்தரியத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம் அவருக்குக் காட்சி கொடுத்துச் சொன்னார்:

"எனது அருமை மகனே, இந்த உத்தரியம் உங்கள் சபைக்குரியது. நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதனை உனக்காவும், உனது கார்மேல் மலைச் சிறாருக்காகவும் நான் பெற்றது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி" என்று கழுத்தில் அணியும் இந்த உத்தரியத்தை அன்னைமரியாவிடமிருந்து பெற்றவர் புனித சைமன் ஸ்டாக்.   Stock என்றால் அடிமரம் என்று பொருள்.

புனித சைமன் அவர்களின் இளமைக்கால வாழ்வு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லையெனினும், இவர் தனது 12வது வயதிலிருந்தே ஓர் ஓக் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த காலியான இடத்தில் துறவியாக வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் இளைஞனாக இருந்தபோது புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்மேல் சபைத் துறவிகளுடன் சேர்ந்தார். பின்னர் ஐரோப்பா திரும்பி, கார்மேல் சபையின் பல இல்லங்களை நிறுவினார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ், ஆக்ஸஃபோர்டு, பாரிஸ், பொலோஞ்ஞா போன்ற பல்கலைக்கழக நகரங்களில் கார்மேல் சபை இல்லங்களை ஏற்படுத்தினார். கார்மேல் சபையை தியானயோக வாழ்விலிருந்து தர்மம் எடுத்து வாழும் சபையாக மாற்றினார்.