இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன் ***

இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன்
ஏழை எளியோர் ஏற்றம் காண என்னைத் தருகின்றேன்
இதயம் மகிழ்ந்து ஏழை என்னை
பலியாய் ஏற்றிடுவாய் கனிவாய் மாற்றிடுவாய்

1. உலகம் யாவும் வெறுமை என்று
உன்னைப் பணிந்தேன் தஞ்சம் என்று
குயவன் கையில் களிமண் போல
உனது பணிக்காய் என்னைத் தந்தேன்
உனக்காய் தானே வாழுகின்றேன்
எந்தன் உயிரும் உந்தன் சொந்தம்
தடைகள் மலையாய் சூழ்ந்து கொண்டால்
தயக்கமின்றி எழுந்து நடப்பேன்
ஆபேல் தந்த உயர்ந்த பலி போல்
அன்பே உனக்காய் காணிக்கையாகிறேன்

2. துடுப்பை இழந்த படகைப் போல
தனித்து தவித்துக் கலங்கும் நேரம்
விழியைக் காக்கும் இமையைப் போல
அன்பின் கரத்தால் அணைத்துக் காப்பாய்
முடவன் போல என்னை மாற்ற
தினமும் உழைக்கும் மனிதருண்டு
மண்ணில் விழுந்து மடிந்த பின்னும்
முளைக்கும் விதைபோல் உயிர்த்து எழுவேன்
மழையைத் தேடும் பயிரைப் போல
அன்பே உனையே தேடி வந்தேன்