27ஆகஸ்ட் 1944.
எழுந்திரு; துரிதப்படு. என் சிறு நண்பா! மரியாயின் கன்னிமையைப் பற்றி மோட்ச காட்சி தியானத்திற்கு உன்னைக் கூட்டிச் செல்ல ஆவல் கொள்கிறேன். இப்போதுதான் பிதாவினால் ஒரு சிறு ஏவாளாக நீ சிருஷ்டிக்கப்பட்டது போல் - இன்னும் மாம்சத்துக்கு விழிப்படையாத ஏவாளைப் போல், உன் ஆன்மா ஒளியால் நிரம்பியிருக்க, நீ இவ்வனுபவத்திலிருந்து வெளி வருவாய். ஏனெனில் கடவுளின் தலைசிறந்த படைப்பினுள் நீ மூழ்குவாய். நீ முழுவதும் அன்பிலே துவைந்து வெளிவருவாய். ஏனென்றால், எந்த அளவிற்கு கடவுள் நேசிக்கக் கூடும் என்று கண்டுபிடித்திருப்பாய். மாசற்ற மரியாயின் உற்பவத்தைப் பற்றிப் பேசுவது, வானத்தையும், ஒளியையும், சிநேகத்தையும் ஊடுருவுவதாகும்.
வா, முன்னோரின் புத்தகத்தில் மாமரியின் மகிமைகளை வாசித்துப் பார்: “ஆண்டவர் தமது வழிகளின் துவக்கத்திலேயே ஆதியில் யாதொன்றையும் உண்டாக்குமுன்னரே என்னை சுதந்தரித்திருந்தார். பூர்வங்களில் பூமி உண்டாகுமுன்னமே நித்தியந் தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன். பாதாளங்கள் இன்னும் இருக்கவில்லை. நான் ஏற்கெனவே கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தேன். நீரூற்றுகள் இன்னமும் புறப்படவில்லை. பாரச் சுமையுள்ள பர்வதங்களும் இன்னும் உண்டாகவில்லை. குன்றுகளுக்கு முன்னமே நான் பிறப்பிக்கப்பட்டிருந்தேன். இன்னமும் பூலோகத்தையும், அருவிகளையும், பூச்சக்கரத்தின் துருவங்களையும் தேவன் உண்டாக்கவில்லை. அவர் வான மண்டலங்களை சித்தம் செய்கையில் நான் கூட இருந்தேன். அவர் நிச்சயமான சட்டத்தாலும் வட்டத்தாலும் பாதாளங்களைச் சுற்றி அடைக்கையிலும் அவர் மேலே வானத்தை உறுதிப்படுத்தி, நீர்க் கங்கைகளை நிலையாக நிறுத்தி வைக்கையிலும், சமுத்திரத்திற்குக் கோடியைக் கட்டி தன் எல்லையைக் கடக்காதபடி சலத்திற்குச் சட்டத்தை வைக்கையிலும், பூமியின் அஸ்திவாரங்களை நிறுத்திடுகையிலும் அவரோடுதானே சகலத்தையும் சீர்ப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தேன். தினந்தோறும் சந்தோஷித்துக் கொண்டும், எக்காலத்தும் அவர் முன்பாக விளையாடிக் கொண்டும், சர்வ லோகத்திலும் விளையாடிக் கொண்டுமிருந்தேன்...” (பழமொழி. 8:22-31). இந்த வார்த்தைகளை நீங்கள் ஞானத்திற்குப் பொருத்திக் கூறினீர்கள். ஆனால் இவை அழகுறும் அன்னையும், புனித மாதாவும், இதோ உன்னுடன் பேசுகிற ஞானமாயிருக்கிற என்னுடைய கன்னித் தாயுமான மரியாயைப் பற்றிக் கூறுகின்றன.
அத்தாயைப் பற்றிப் பேசுகிற புத்தகத்தின் தொடக்கத்தில், பாடலின் முதல் வரியை நீ எழுத வேண்டுமென விரும்பினேன். எதற்கென்றால், அவ்வன்னை ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டும்; அதனால் கடவுளின் ஆறுதலும், மகிழ்ச்சியும் அறியப்பட வேண்டும்; உங்களை ஆண்டு நேசிக்கிறவரும், மனிதரிடமிருந்து தன் அநேக துயரங்களுக்குக் காரணங்களைப் பெற்றவரும், ஏக திரித்துவருமாயிருக்கிற கடவுளின் நிரந்தர அந்யோந்நிய ஆனந்தத்தின் காரணமும், முதல் பரிசோதனையிலேயே அழிக்கப்படத் தகுதி பெற்ற மனுக்குலத்தை அவர் நீடிக்கச் செய்ததின் காரணமும் அறியப்பட வேண்டும். நீங்கள் பெற்றுக் கொண்டுள்ள மன்னிப்பின் காரணம் தெரியப்பட வேண்டும்.
அவரை நேசித்த மரியாயைக் கொண்டிருப்பது எத்தகையது! ஓ, மனிதனைப் படைத்ததும், அவனை மன்னிக்கச் சித்தங்கொண்டு அவனை வாழ விட்டதும் இந்த அழகிய கன்னிகையைக் கொண்டிருக்கவே! இப்பரிசுத்தமான கன்னிகையை - அமலோற்பவக் கன்னிகையை - நேசிக்கிற கன்னிகையை - அன்பான குமாரத்தியை - மிகப் புனிதமான அன்னையை நேசிக்கிற மணவாளியைக் கொண்டிருக்கவே!! கடவுள் தமது மகிழ்ச்சியின் சிருஷ்டியை, தமது சூரியனின் சூரியனை, தமது பூந்தோட்டத்தின் மலரை நீங்கள் கொண்டிருக்கும் பொருட்டு உங்களுக்கு ஏராளமாகக் கொடுத்துள்ளார், இதற்கு மேலும் கொடுத்திருப்பார். அவ்வன்னையினிமித்தம் உங்களுக்குத் தொடர்ந்து கொடுத்தும் வருகிறார். அவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டும், அவர்களுடைய மகிழ்ச்சிக்காகவும் அப்படிச் செய்கிறார். ஏனெனில் அவர்களின் மகிழ்ச்சி கடவுளின் மகிழ்ச்சிக்குள்ளே சென்று பாய்கிறது. அம்மகிழ்ச்சி, ஒளியை - பரலோகப் பேரொளியை கதிர் வீச்சுகளால், பிரகாசமான சுடர்களால் அதிகரிக்கிறது. அந்த ஒவ்வொரு சுடரும் பிரபஞ்சத்திற்கும், மனுக்குலத்திற்கும், பாக்கியம் பெற்ற ஆன்மாக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாயிருக்கிறது. இந்தக் கன்னிகையின் பளிச்சிடும் புன்சிரிப்பைக் காண வேண்டுமென்ற பரிசுத்த தமதிரித்துவத்தின் ஆசையால் அவை சிருஷ்டிக்கப்பட்டன. அந்த ஆன்மாக்கள் தேவ அற்புதத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் அல்லேலூயா என்ற மகிழ்ச்சிப் பாடலால் அதற்குப் பதிலளிக்கிறார்கள்.
கடவுள், தாம் ஒன்றுமில்லாமையிலிருந்து சிருஷ்டித்த பிரபஞ்சத்திற்கு ஓர் அரசனை ஏற்படுத்த விரும்பினார். பருப்பொருளைக் கொண்டு உண்டாக்கப்பட்டதும், பருப்பொருளை உடையவையுமான எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியிலும், பருப்பொருளின் தன்மைப்படியே அவன் அரசனாயிருக்க வேண்டும். அவன் ஆவியின் தன்மைப்படி தெய்வீகத்தை விட சற்றுத் தாழ்ந்தவனாகவும், அவனுடைய மாசற்றதாகிய முதல் நாளில் இருந்ததுபோல் வரப்பிரசாதத்துடன் இணைக்கப்பட்டவனாகவும் இருக்க அவர் விரும்பினார். ஆனால் காலங்களின் தொலைவான எல்லா நிகழ்ச்சிகளையும் அறிந்துள்ள உந்நத மனம், இருந்தவைகளையும், இருக்கிறவைகளையும் வரவிருக்கிறவைகளையும் இடை விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது கடந்தவற்றை எண்ணிப் பார்த்து நடப்பவற்றை ஆராயும்போது, அது தன் தீர்க்க முன்பார்வையால் மிகத் தொலைவிலிருக்கிற வருங்காலத்தை ஊடுருவிப் பார்த்து, கடைசி மனிதன் எப்படி இறப்பான் என்பதையும் அதன் ஒவ்வொரு நுட்ப விவரத்துடன் அறிந்துள்ளது. இவ்வுந்நத மனம், தன் பக்கத்தில் ஒரு சின்னக் கடவுளாக, மோட்சத்தில் இருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்ட இந்த அரசனும், பிதாவின் வாரிசுமான மனிதன், தன் தாயின் வீட்டில் வாழ்ந்த பிறகு - அதாவது அவன் உண்டாக்கப்பட்ட மண்ணில் வாழ்ந்த பிறகு - தன் குழந்தைப் பருவத்தை வாழும் வாழ்வின் நாளுக்குப் பரிசாக நித்திய பிதாவின் மகனாக, நிறைவயதினனாய் அவருடைய இராச்சியத்திற்கு வந்து சேருவான் என்று குழப்பமின்றி தொடர்பறுதலுமின்றி எப்போதும் அறிந்தே இருந்தது. மனிதன் தனக்கே எதிராக தன்னிடத்திலே வரப்பிரசாதத்தைச் சாகடிக்கும் பாதகத்தை செய்வானென்றும், மோட்ச பாக்கியத்தைக் களவு கொடுப்பான் என்றும் அந்த உந்நத மனம் எப்போதும் அறிந்தே இருந்தது.
அப்படியானால் அவர் எதற்காக அவனை உண்டாக்கினார்? நிச்சயமாக அநேகர் ஏன் என்று கேட்கவே செய்கிறார்கள். நீங்கள் இராதிருக்க விரும்புவீர்களோ? இந்த வாழ்நாள், அது எவ்வளவு வறியதாயும் வெறிச்சோடியதாயும் இருந்தாலும், உங்கள் கெட்ட குணத்தினால் குரூரமாய் ஆக்கப்பட்டிருந்தாலும், கடவுளின் கரம் பிரபஞ்சத்தில் விதைத்துள்ள அளவற்ற அழகை நீங்கள் அறியவும் வியந்து பாராட்டவும் இவ்வாழ்நாள் வாழப்படத் தகுதி பெறவில்லையா?
யாருக்காக கடவுள் நட்சத்திரங்களை உண்டாக்கினார்? இடி மின்னல்களைப் போலும், அம்புகளைப் போலும், விண்ணக விதானத்தை உழுது செல்கிறதும், எரி நட்சத்திரங்களின் பாய்ச்சலிலே கம்பீரமாய் மோதிப் பாய்வதும், மெல்லச் செல்வதுபோல் காணப்பட்டுப் பறக்கிறதுமாகிய கிரகங்களை ஏன் உண்டாக்கினார்? இவை உங்களுக்கு வெளிச்சத்தையும் பருவ காலங்களையும் கொடுக்கின்றன. நித்தியமாய் மாறாமலும், ஆயினும் எப்பொழுதும் மாறக்கூடியவையுமாயிருக்கின்றன. ஒவ்வொரு மாலையிலும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் வானத்தில் ஒரு புதுப்பக்கத்தை அவை உங்களுக்குப் படிக்கத் தருகின்றன. அவை இப்படிச் சொல்வது போலுள்ளது: “உங்கள் கட்டுக்களை மறங்கள். தெளிவில்லாததும் அழுகியதும், அழுக்கேறியதும், விஷமுள்ளதும், பொய்யானதும், சபதமிடுவதும், கெடுப்பதுமாகிய அச்சேறிய கருத்துக்களை விடுங்கள். குறைந்த பட்சம் உங்கள் கண்களாலாவது மேலேழுந்து வந்து விசும்பு வெளியின் எல்லையில்லா சுதந்திரத்தைப் பாருங்கள். இவ்வளவு தெளிந்த வானத்தைப் பார்த்து, உங்கள் ஆன்மாக்களைப் பிரகாசத் தோற்றமாக்குங்கள். உங்கள் இருண்ட சிறைச் சாலைக்குக் கொண்டு வர ஒளியைத் தேக்கி வையுங்கள். நாங்கள் எங்கள் தாரகைப் பல்லவியைப் பாடிக் கொண்டே எழுதும் வார்த்தையை வாசியுங்கள். அது ஒரு மேற்றிராசனப் பேராலய ஆர்கன் இசையை விட அதிக இசைவு உள்ளதாயிருக்கிறது. நாங்கள் பிரகாசித்துக் கொண்டே, நேசித்துக் கொண்டே எழுதும் வார்த்தை அது. எங்களுக்கு இருத்தலின் மகிழ்ச்சியைத் தந்த அவரை எப்பொழுதும் எங்கள் மனதில் நாங்கள் கொண்டுள்ளோம். நாங்கள் இருக்கும்படி செய்ததற்காக அவரை நேசிக்கிறோம். எங்களுக்கு பிரகாசத்தையும், அசைவையும், சுதந்திரத்தையும், அமைதியான நீலத்தின் நடுவில் அழகையும் அளித்ததற்காக அவரை நேசிக்கிறோம். இதற்கு அப்பால் இதைவிட உந்நதமான நீலத்தை எங்களால் காண முடிகிறது: அதுவே பரலோகம். அவருடைய அன்பின் இரண்டாம் பாகக் கட்டளையை, உங்களை - பிரபஞ்சத்தில் எங்கள் அயலாரை நேசிப்பதால் நிறைவேற்றுகிறோம். உங்களுக்கு வழிகாட்டி - வெளிச்சமும், வெப்பமும், அழகும் தருவதால் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் கூறும் வார்த்தையை - எங்கள் பாடலையும், பிரகாசத்தையும், புன்னகையையும் ஒத்தமைக்கிற வார்த்தையை வாசியுங்கள்: அதுவே கடவுள் என்னும் வார்த்தை.”
நீலக்கடலையும், வானக் கண்ணாடியையும், நிலத்தில் பாதையையும், நீர்களின் புன்னகையையும், அலைகளின் குரலையும் யாருக்காக அவர் படைத்திருப்பார்? பட்டின் சலசலப்பும், மகிழும் சிறுமியரின் புன்சிரிப்பும், நினைவுபடுத்தி அழும் முதியோரின் பெருமூச்சும், வன்செயலின் கூக்குரலும், மோதல்களும், கர்ஜனைகளும் ஒன்றாய்க் கூடிய சமுத்திரமே ஒரு வார்த்தையல்லவா? அது கடவுள் என்ற வார்த்தையை எப்பொழுதும் உரைத்துக் கொண்டிருக்கிறதே! சமுத்திரம் உங்களுக்காகவே; வானமும் நட்சத்திரங்களும் உங்களுக்காகவே. சமுத்திரத்துடன் ஏரிகளும், நதிகளும், குளங்களும், நீரோடைகளும், சுத்தமான ஊற்றுகளும் உங்களுக்காகவே. அவையெல்லாம் உங்களைப் போஷிக்கவும், உங்கள் தாகத்தைத் தணிக்கவும் உங்களைச் சுத்தம் செய்யவும், உங்களுக்கு ஊழியம் செய்கின்றன. நீங்கள் பெற்றுள்ள தகுதியின்படி அவை உங்களை மூழ்கடிக்காமல், தங்கள் சிருஷ்டிகருக்கு ஊழியஞ் செய்து கொண்டே உங்களுக்கு ஊழியம் செய்கின்றன.
எண்ணிக்கையற்ற இனங்களான மிருகங்களையும், பாடிக் கொண்டே பறக்கின்ற அழகிய நிறம் படைத்த பறவைகளையும், தங்கள் அரசர்களான உங்களுக்கு வேலைக்காரர்களைப் போல் ஓடி உழைத்து உதவி செய்து, உணவுமாகும் மற்ற மிருகங்களையும் யாருக்காக அவர் படைத்திருப்பார்?
எண்ணிக்கையற்ற இனங்களான மரஞ் செடிகளையும், வண்ணத்துப் பூச்சிகளைப் போல், இரத்தினம் போல், அசைவில்லாப் பறவைகள்போல் காட்சி தரும் மலர்களையும், ஆபரணங்களைப் போலும், நகைப் பெட்டிகளைப் போலுமிருக்கும் வகைவகையான கனிகளையும், உங்கள் பாதங்களுக்கு விரிப்புப் போலவும், மரங்களை உங்கள் தலைகளுக்கு மேல் பாதுகாப்பாகவும், விரும்பத் தக்க ஓய்வையும், மகிழ்ச்சியையும், மனதிற்கும், அவயவங்களுக்கும் தந்து, பார்வைக்கும் வாசனைக்கும் மகிழ்ச்சியளிக்கும் இவைகளை யாருக்காக அவர் படைத் திருப்பார்?
பூமியின் வயிற்றுக்குள் உலோகங்களையும், குளிரும் வெப்பமுமான நீரூற்றுகளில் கரைந்துள்ள உப்புக்களையும், அயோடின்களையும், புரோமின்களையும், கடவுள் அல்லாத கடவுளின் பிள்ளையாகிய ஒருவன்: மனிதன் அனுபவிப்பதற்காக அல்லாது வேறு யாருக்காக அவர் படைத்திருப்பார்?
கடவுளின் ஆனந்தத்திற்குக் குறை ஏதுமில்லை. அவருக்கு எந்தத் தேவையும் இல்லை. அவர் தம்மிலே போதியவரா யிருக்கிறார். அவர் ஆனந்திக்கவும், தன்னை போஷிப்பிக்கவும், ஜீவிக்கவும், இளைப்பாறவும் தம்மை நினைப்பதே போதுமானது. அவருடைய அளவில்லாத மகிழ்ச்சியையும், அழகையும் ஜீவனையும், வல்லமையையும், ஒரு அணு அளவால்கூட சிருஷ்டிகள் அனைத்தும் அதிகரிக்கவில்லை. தம் செயல்பாட்டிற்கு அரசனாக அவர் ஏற்படுத்த எண்ணிய சிருஷ்டிக்காகவே அவர் யாவற்றையும் படைத்தார். அந்த சிருஷ்டி மானிடனே.
சர்வேசுரனுடைய இத்தகைய செயல்பாட்டைக் காணவும், அதற்கு உங்களுக்கு வாய்ப்பளிக்கிற அவருடைய வல்லமைக்கு நன்றி கூறுவதற்கெனவும் வாழ்வது தகுந்ததே. நீங்கள் உயிருடன் இருப்பதற்கு நன்றியுடையவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு இறுதி அழிவின் நாள் வரை காத்திருக்க வேண்டியிருந்தாலும் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் உங்கள் முதல் பெற்றோரிடமாய் தவறிப் போனவர்கள், ஆங்காரிகள், இச்சையுற்றவர்கள், கொலைகாரர்கள், இப்பொழுதும் தனிப்பட்ட முறையில் அப்படி இருக்கின்றீர்கள். ஆயினும் பிரபஞ்சத்தின் அழகையும், நன்மைகளையும் அனுபவிக்க தேவன் உங்களை அனுமதிக்கிறார். நல்ல பிள்ளைகளைப் போல உங்களை நடத்துகிறார். உங்கள் வாழ்நாள் அதிக மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் இருக்க எல்லாம் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. எல்லாம் தரப்படுகின்றன. நீங்கள் அறிந்துள்ளதெல்லாம் கடவுளின் ஒளியால் அறிந்தவை. நீங்கள் கண்டு பிடித்துள்ளவையெல்லாம் கடவுளின் நடத்துதலால், நன்மைத்தனத்தில் கண்டுபிடித்தவை. தீமையின் அடையாளம் பொறித்த இதர அறிவும், கண்டுபிடிப்புகளும், தீமையின் சிகரமான சாத்தானிடமிருந்து வருகின்றன.
மனிதன் தோன்று முன்பே, அனைத்தையும் அறியும் உந்நத மனம், மனிதன் ஒரு திருடனாயிருப்பானென்றும்,சுய கொலைகாரன் ஆவானென்றும் அறிந்திருந்தது. நன்மைத்தனத்தில் அளவற்றிருக்கிற நித்திய நன்மையானவர், குற்றம் தோன்றுமுன்பே அதைத் துடைக்கும் வழியைப் பற்றி நினைத்தார். அந்தவழி: வார்த்தையாகிய நானே. அந்த வழியிலுள்ள செயலாற்றலுள்ள கருவி: கன்னிமாமரி. உந்நத மனத்திலே கன்னி மாமரி உருவாக்கப்பட்டார்கள்.
பரம பிதாவின் நேச குமாரனாகிய எனக்காகவே அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டன. அரசனாகிய நான் வேறு எந்த இராஜ அரண்மனையிலும் இராத விரிப்புக் கம்பளங்களையும், ஆபரணங்களையும், என்னுடைய தெய்வீக இராஜ பாதங்களுக்கடியில் பெற்றிருக்க வேண்டும். எந்த அரசனும் கொண்டிருந்திராத பாடல்களையும், குரல்களையும், ஊழியர்களையும், பிரதானிகளையும் பெற்றிருக்க வேண்டும். அது போல் மலர்களையும், இரத்தினங்களையும், கடவுளுடைய நினைவிலிருந்து வரக்கூடிய உயர்வுகள், பெரிய நன்மைகள், கருணை அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் நான் மாமிசமாகவும், மனமாகவும் இருக்க வேண்டியிருந்தது. மாமிசத்தை இரட்சிக்க மாமிசம். மாமிசத்தை, அதன் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மோட்சத்திற்குக் கொண்டு சென்று, மாமிசத்தை உந்நதமாக்கும்படியாக! மனம் குடிகொண்டிருக்கிற மாமிசம் கடவுளின் தனிச்சிறந்த கைவேலை. ஏற்கெனவே அதற்கென மோட்சம் உண்டாக்கப்பட்டிருந்தது. நான் மாமிசம் ஆவதற்கு எனக்கொரு மாதா தேவையாயிற்று. நான் கடவுளாயிருப்பதற்கு பிதா கடவுளாயிருப்பது தேவையாயிற்று.
அப்போது கடவுள் தம் பத்தினியைப் படைத்து அவளிடம் கூறினார்: “என்னுடன் வா. நம் குமாரனுக்கு நான் செய்ய இருப்பதை என் பக்கத்திலிருந்து பார். நித்திய கன்னிகையே! நித்திய யுவதியே! கண்டு மகிழ்ச்சியடைவாயாக! இந்தப் பரலோகத்தை உன் புன்னகை நிரப்புவதாக! அது சம்மனசுக்களுக்கு ஆரம்ப ஸ்வரத்தைக் கொடுத்து, பரலோகத்திற்கு மோட்ச இணையிசையைக் கற்பிப்பதாக! உன்னை நான் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது ஓர் ஆன்மாவாக மட்டும் இருக்கிற அமலோற்பவ மாது உன்னை நீ எப்படி இருப்பாயோ அப்படி நான் காண்கிறேன். அந்த ஆன்மாவில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னைப் பார்த்தபடி, கடலுக்கும், வானத்துக்கும் உன் கண்களின் நீலத்தைக் கொடுக்கிறேன். புனித தானியத்திற்கு உன் முடியின் நிறத்தைக் கொடுக்கிறேன். உன் பட்டான சருமத்தின் வெண்மையை லீலிக்கும், ரோஜா வண்ணத்தை ரோஜா மலருக்கும் கொடுக்கிறேன். உன் சிறு பற்களைப் பார்த்து முத்துக்களைச் செய்கிறேன். உன் திருவாயை உற்று நோக்கி இனிய முசுக்கொட்டையின் கனிகளைப் படைக்கிறேன். உன் குரலோசையை இராப்பாடி குயிலுக்கும், நீ அழும் குரலை காட்டுப் புறாவுக்கும் அளிக்கிறேன். எதிர்காலத்தில் நீ எண்ணப் போகும் எண்ணங்களை அறிந்து உன் இருதயத் துடிப்புக்குக் காது கொடுப்பதனால் சிருஷ்டிப்பதற்கு எனக்கு முகாந்தரம் கிடைத்தது. என் மகிழ்வே வா. என் சிந்தனையில் ஆடும் ஒளியாய் நீ இருக்குந்தனையும், உலகங்களை உன் விளையாட்டுப் பொருளாய்க் கொண்டிருப்பாயாக. உன்னுடைய புன்னகையாக உலகங்களைக் கொண்டிரு. மாலைகளாகவும், கழுத்தணிகளாகவும் நட்சத்திரங்களைப் பெற்றுக் கொள். உன் மெல்லிய பாதத்தடியில் சந்திரனை வை. பால்வெளி வீதியை உன் நட்சத்திரக் கழுத்துப் பட்டியாக்கிக் கொள். நட்சத்திரங்களும், கிரகங்களும் உனக்காகவே. உன் குழந்தைக்குப் பாலிய மகிழச்சியாகவும், உன் உதரக் கனிக்குத் தலையணையாகவும் இருக்கும் மலர்களைக் கண்டு மகிழ வருவாயாக. ஆடுகளும், ஆட்டுக் குட்டிகளும், கழுகுகளும், புறாக்களும் சிருஷ்டிக்கப்படுகிறதை வந்து பார். நான் கடல்களின் குடைவுகளையும், நதிகளின் சால்களையும் படைக்கும்போதும், மலைகளை உயர்த்தி, அவைகளை உறைபனியாலும், காடுகளாலும் அலங்கரிக்கும் போதும், என் அருகில் நிற்பாயாக. நான் கால்நடைகளுக்குத் தீவனங்களையும், மரங்களையும் கொடிகளையும் விதைக்கையிலும், ஒலிவ மரத்தை உனக்காக உண்டாக்கும் போதும் இங்கே நீ இருப்பாயாக, என் சமாதானமானவளே! என் திராட்சைக் கொடியே! உனக்காக நான் திராட்சைக் கொடியையும் உண்டாக்குகிறேன். நற்கருணையின் திராட்சைக் குலையை நீயே விளைவிப்பாய். என் அழகே! ஓடிப் பறந்து மகிழ்வாயாக! என் நேசமே! ஒவ்வொரு மணித் தியாலமாய் சிருஷ்டிக்கப்படும் பிரபஞ்சம் என்னை நேசிக்க உன்னிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும். என் குமாரனின் தாயே, என் பரலோகத்தின் இராணியே, உன் கடவுளின் நேசமே, உன் புன்னகையினால் பிரபஞ்சம் அதிக அழகுடன் விளங்கட்டும்.” மேலும், கடவுள் பாவத்தைப் பார்த்து, பாவமில்லாதவளை வியந்தபடி கூறுவார்: “மனித கீழ்ப்படியாமையின் கசப்பைத் துடைத்தெடுக்கிற நீ என்னிடம் வா. மனிதன் சாத்தானுடன் சோரம் போனதின் கசப்பையும் மானிட நன்றி கெட்டதனத்தின் கசப்பையும் மாற்றுகிறவளே வா. உன்னால் சாத்தானை நான் பழிதீர்ப்பேன்.”
சர்வேசுரன், சிருஷ்டிகரான பிதா, எத்தகைய சம்பூரணமான அன்பின் நியதியுடன் மனிதனையும், மனுஷியையும் உண்டாக்கியிருந்தார் என்றால், அதன் முழுமையை இப்போது உங்களால் கண்டுபிடிக்கக் கூட இயலாது. சாத்தானால் மனிதன் அறிவூட்டப்படாதிருந்தால், மனித இனம் எப்படி வந்திருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டு அதில் அமிழ்ந்திப் போகிறீர்கள்.
கனிகளையும், விதைச் செடிகளையும் பாருங்கள். அவை ஒழுக்க நெறி தவறியா பழங்களையும், விதைகளையும் உற்பத்தி செய்கின்றன? நூறு சேர்க்கைகளில் ஒரு வளப்படுத்தலையா பெறுகின்றன? இல்லை. ஆண் பூவிலிருந்து மகரந்தம் வெளியேறி, எரி விண்மீன், மின் காந்த சக்தி இணைந்த நியதிகளால் உந்தப்பட்டு பெண் பூவின் சூலுக்கு வர, அது திறந்து அதை ஏற்று, உற்பத்தியை அடைகிறது. அது தன்னைக் கறைப்படுத்தாமல், நீங்கள் மறுநாளிலும் அதே உணர்வைப் பெறுவதற்காகச் செய்வது போல் உற்பத்தியை மறுப்பதில்லை. அது விளைவைத் தந்து, அடுத்த பருவ காலம் வரையிலும் மகரந்தத்தை ஏற்பதில்லை. அது ஏற்பது உற்பத்தி செய்வதற்காக மட்டுமே.
விலங்குகளை - எல்லா விலங்குகளையும் பாருங்கள். வளமில்லாத சேர்க்கைக்காக, இச்சைக்காக ஓர் ஆண் விலங்கும், பெண் விலங்கும் நெருங்குவதை எப்போதாவது கண்டிருக்கிறீர்களா? இல்லை. கிட்டத்தில் அல்லது தூரத்திலிருந்து, உற்பத்தியின் சடங்கிற்கு சமயம் வந்ததும், அவை பறந்து, ஊர்ந்து, குதித்து, அல்லது ஓடி வருகின்றன. அவை சுகத்தில் மட்டும் நிறுத்திக் கொண்டு தட்டிக் கழிக்காமல், காரியார்த்தமான புனித வமிச உற்பத்திக்குச் செல்கின்றன. நான் நிறைவு செய்துள்ள வரப்பிரசாத உற்பத்தியால் ஒரு குட்டிக் கடவுளாயிருக்கிற மனிதன் இந்தச் செயலின் விலங்கினத் தன்மையை ஏற்பதின் ஏக காரணம் இது ஒன்றே. நீங்கள் விலங்கினங்களை நோக்கி, கீழே ஒரு படி இறங்கியுள்ளீர்களாதலால் இது தேவையாகி விட்டது.
நீங்கள் தாவரங்களைப் போலும், விலங்கினங்களைப் போலும் நடப்பதில்லை. உங்கள் ஆசிரினொக சாத்தானைக் கொண்டீர்கள. அவனையே உங்கள் ஆசிரினொக விரும்பினீர்கள். இன்னும் அவனையே விரும்புகிறீர்கள். நீங்கள் விரும்பிய ஆசிரியனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் செயல்களையே நீங்களும் செய்கிறீர்கள். கடவுளுக்கு நீங்கள் பிரமாணிக்கத்துடன் இருந்திருந்தால், பகுத்தறிவும், ஆவித் தன்மையுமுடைய ஆன்மா இல்லாத மிருகங்களும் கூட அறியாத அசுத்த வெட்கக் கேடான உறவுகளில் உங்களை ஆயாசப்படுத்தாமலும், வேதனை இல்லாமலும், ஒரு புனிதமான முறையில் குழந்தைகளைக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பெற்றிருப்பீர்கள்.
சாத்தானால் கெடுக்கப்பட்ட மனிதனுக்கும் மனுஷிக்கும் எதிராக கடவுள், ஸ்திரீயிடத்தில் பிறந்த மனிதனை நிறுத்தத் தீர்மானித்தார். அந்த ஸ்திரீயை சர்வேசுரன் எந்த அளவுக்கு மிக உயர்த்தினாரென்றால், மனிதனை அறியாமலே அவள் பிறப்பித்தாள். அவள், விதையின் அவசியம் இல்லாமலே மலரைப் பிறப்பிக்கும் மலராயிருந்தாள். மாசில்லா லீலியின் பாத்திரத்தில், தேவ சூரியனுடைய தனிச்சிறந்த முத்தத்தால் அது நிகழ்ந்தது. கன்னி சுத்தங் கெடாத அந்த லீலி மலர்: கன்னி மாமரியே!
இதுவே கடவுளின் பழிதீர்ப்பு!
இதோ அவள் உலகத்தில் தோன்றுகிறாள்! ஓ சாத்தானே, நீ சீறி உன் பகையை வெளியிடு. இந்தச் சிசு உன்னை அடித்து வீழ்த்தி விட்டது. நீ எதிர்ப்பவனாக, திரிப்பவனாக, கெடுப்பவனாக இருக்குமுன்பே நீ அடிபட்டு விட்டாய். உன் மேல் வெற்றி கொண்டவள் அவளே! ஓராயிரம் சேனைகளும் உன் சக்திக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாது; நிரந்தரமானவனே, உன் செதில்களுக்கு முன் மனிதரின் ஆயுதங்கள் கீழே விழுகின்றன; உன் மூச்சின் நாற்றத்தை எந்தக் காற்றும் அடித்துச் செல்ல இயலாது. அப்படியிருந்தாலும், இந்தக் குழந்தையின் குதிங்கால் உன் தலையை எந்த அச்சமுமின்றி நசுக்குகிறது. ரோஜா நிற கமெலியா மலரின் உட்புறம் போல் அக்குதிங்கால் இருக்கிறது. அது எவ்வளவு மிருதுவானதென்றால், அதனுடன் ஒப்பிட்டால் பட்டு முரடாகத் தெரிகிறது. அது எவ்வளவு சிறிதென்றால் அது டூலிப் மலரின் கிண்ணத்திற்குள் புகுந்து அந்தத் தாவரப் பட்டைக் கொண்டு தனக்கு காலணி செய்து கொள்வதாயிருக்கிறது. அப்படிப்பட்ட குதிங்கால் அச்சமின்றி உன்னை உன் குகைக்குள்ளே மிதித்துத் தள்ளுகிறது. நீ படைகளைக் கண்டும் அஞ்ச மாட்டாய். ஆயினும் அக்குழவியினுடைய அழுகுரல் உன்னை ஒளிந்தோட வைக்கிறது. உன்னுடைய அசுத்த நாற்றத்திலிருந்து உலகத்தை அவளுடைய சுவாசம் சுத்தப்படுத்துகிறது. நீ தோற்கடிக்கப்பட்டாய். அவளுடைய திருநாமமும், அவளுடைய பார்வையும், அவளுடைய பரிசுத்ததனமும் உன்னை ஊடுருவக் குத்தி, உன்னை அழித்து, நரகத்தில் உன்னுடைய குகைக்குள் உன்னைச் சிறைப்படுத்தும் ஈட்டியாகவும், மின்னல் இடியாகவும் இருக்கின்றன. ஓ, சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனிதருடையவும் தந்தையாக இருக்கும் மகிழ்ச்சியை கடவுள் அடையாதபடி செய்து விட்ட சபிக்கப்பட்டவனே!
ஆனால் நீ அவர்களைக் கெடுத்தது பயனற்றுப் போயிற்று. அவர்கள் மாசற்றவர்களாக படைக்கப்பட்டார்கள். அவர்களை அறிவுக்கும், மாமிச இச்சையான கர்ப்பந்தரித்தலுக்கும் கொண்டு சென்றாய். கடவுளின் அன்புள்ள படைப்பில், முறையோடு பிள்ளைகளின் உபகாரியாக அவர் இருப்பதைக் கெடுத்தாய். அந்த முறை மதிக்கப்பட்டிருந்தால், உலகத்தில் இரு பாலினத்திற்கும், குலங்களுக்குமிடையில் சமநிலை இருந்திருக்கும். அது ஜனங்களிடையே யுத்தங்களையும், குடும்பங்களிடை பெரும் விபத்துக்களையும் தவிர்த்திருக்கும்.
கீழ்ப்படிதலினால் அவர்கள் அன்பையும் அறிந்திருப்பார்கள். ஏன்! கீழ்ப்படிதலினால் மட்டுமே அவர்கள் அன்பை அறிந்தும், சுதந்தரித்தும் இருப்பார்கள். ஒரு முழுமையான, சமாதானமான இந்த சுத்திகரிப்பு கடவுளின் ஒரு கொடை. அவர் சுபாவத்திற்கு மேற்பட்டதிலிருந்து கீழ்ப்பட்டதை நோக்கி இறங்குகிறார். மாமிசமும் பக்தியுடன் மகிழும்படி அப்படிச் செய்கிறார். ஏனென்றால் ஆன்மாவை சிருஷ்டித்தவராலேயே சரீரமும் சிருஷ்டிக்கப்பட்டு அவ்வான்மாவோடு அதுவும் இணைக்கப்பட்டிருப்பதனால்தான்.
மனிதர்களே! உங்கள் அன்பு என்பது என்ன? நீங்கள் நேசிப்பவை எவை? ஒன்றில் அன்பைப் போல் மாறுவேடம் போடும் இச்சையை நேசிக்கிறீர்கள். அல்லது உங்கள் துணைவியின் அன்பை, அவளுடைய, அல்லது மற்றவர்களுடைய இச்சையால் இழந்து விடுவோமோ என்கிற தீர்க்க முடியாத பயத்தை அன்பென்கிறீர்கள். இச்சை உலகத்தில் புகுந்ததிலிருந்து நீங்கள் உங்கள் கணவனுடைய அல்லது மனைவியினுடைய இருதயத்தை சொந்தமாகக் கொண்டிருப்பது உங்களுக்கே ஒருபோதும் உறுதியில்லை. அதனால் நீங்கள் நடுங்குகிறீர்கள், அழுகிறீர்கள், மிஞ்சிய பொறாமை கொள்கிறீர்கள். சில சமயம் ஒரு துரோகத்தைப் பழி தீர்க்க கொலை செய்கிறீர்கள். சிலசமயம் நம்பிக்கை இழந்து விடுகிறீர்கள். சில சமயம், எந்தத் தீர்மானமும் செய்யக் கூடாதவர்களாகி, ஏன், பைத்தியமே பிடித்துப்போய் விடுகிறீர்கள்.
சாத்தானே! இதுதான் நீ கடவுளின் மக்களுக்குச் செய்த காரியம். நீ கெடுத்தாயே மனிதர்கள், அவர்கள் துன்பமும் வேதனையுமில்லாமல் குழந்தைகளைக் கொண்டிருக்கிற மகிழ்ச்சியைக் கண்டிருப்பார்கள்; சாவின் பயம் இல்லாமல் பிறக்கும் மகிழ்ச்சியையும் அனுபவித்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது நீ ஒரு ஸ்திரீயிடம், ஒரு ஸ்திரீயினால் அடிக்கப்பட்டாய். இதுமுதல் அப்பெண்மணியை நேசிக்கிற யாரும் மீண்டும் கடவுளுடையவர்கள் ஆவார்கள். உன்னுடைய சோதனைகளை மேற்கொள்வார்கள். அவளுடைய அமலோற்பவ அழகை உற்றுநோக்கக் கூடியவர்களாயிருப்பார்கள். இதுமுதல், தாய்மார் வேதனையில்லாமல் கருத்தாங்க இயலாவிடினும், அவளிடத்தில் ஆறுதல் பெறுவார்கள். இதுமுதல் அவளே மணமான பெண்களுக்கு வழிகாட்டியும், மரிக்கிறவர்களின் தாயாகவும் இருப்பாள். இதனால் அவளுடைய நெஞ்சில் சாய்ந்தபடி மரிப்பது இனிமையாக இருக்கும். அது சபிக்கப்பட்ட உனக்கெதிராகவும், தேவ கோபத்திற்கெதிராகவும் ஒரு கேடயமாக இருக்கும்.
மேரி, சிறுகுரலே, கன்னிகையினுடைய குமாரனின் பிறப்பையும், அவள் மோட்சத்திற்கு ஆரோபணமானதையும் நீ தரிசித்தாய். அதிலே மாசற்றவர்கள், பிறப்பிக்கும் வேதனையையும், இறப்பதின் வேதனையையும் அறியார்கள் என்பதைக் கண்டிருக்கிறாய். கடவுளின் மிகவும் மாசில்லா அன்னை பரலோகக் கொடைகளின் முழுமையையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அதுபோல் ஆதிப் பெற்றோரிடத்தில் மாசற்றவர்களாயும், கடவுளின் பிள்ளைகளாயும் இருந்திருந்தால், எல்லோருமே வேதனையின்றிப் பிறப்பித்திருப்பார்கள்; இச்சையின்றி கர்ப்பந்தரித்திருப்பார்கள்; கவலையின்றி மரித்திருப்பார்கள். அதுவே நீதியாயிருந்திருக்கும்.
பழிவாங்கும் சாத்தானின் மேல் கடவுளின் உந்நத வெற்றி எதுவென்றால், அவருடைய அன்புக்குரிய சிருஷ்டியின் உத்தம முழுமையை ஓர் அதீத உத்தம நிலைக்கு உயர்த்துவதே. அது, சாத்தானின் விஷத்தால் பாதிக்கப்படக் கூடிய மனிதத்தன்மையின் நினைவையெல்லாம் ஒரேயயாரு மனிதனிடமாவது ரத்துச் செய்ய வேண்டும். அதனால் மனிதனுடைய கற்புள்ள அரவணைப்பால் அல்ல, நெருப்பானவரின் பரவசத்தில் ஆன்மாவை நிறம் மாறச் செய்கின்ற தெய்வீக அரவணைப்பால் தேவ சுதன் பிறப்பிக்கப்பட வேண்டும்.
ஓ! அக்கன்னிகையின் கன்னிமை!!
வா. தியானிப்பதில் பரவச மயக்கமூட்டக் கூடிய இவ் ஆழ்ந்த கன்னிமையைத் தியானி.
எந்த மனிதனாலும் விவாகம் பண்ணப்படாத ஒரு பெண்ணின் பரிதாபமான கட்டாயக் கன்னிமை எப்படிப்பட்டது? அது ஒன்றுமில்லையென்பதிலும் தாழ்ந்தது. கடவுளுக்குச் சொந்தமாயிருக்கும்பொருட்டு, கன்னிகையாக ஒரு பெண் இருக்க விரும்புகிறாள்; ஆனால் அவள் தன் சரீரத்தளவில் கன்னிகையாகவும், ஆத்துமத்தில் அப்படி இல்லாமலும் இருக்கிறாள்; புற எண்ணங்களை உள்ளத்தில் வர விடுகிறாள்; மனித நினைவுகளின் கவர்ச்சிகளை ஏற்றுக் கொள்கிறாள். இவளுடைய கன்னிமை எப்படிப்பட்டது? அது போலிக் கன்னிமை. ஆயினும் மிகச் சிறிய அளவில் அது உள்ளது. கடவுளுக்கென மட்டுமே அடைபட்டு வாழும் ஒரு சகோதரியின் கன்னிமை எப்படிப்பட்டது? அது அதிக உயர்வுடையது. ஆயினும் என் அன்னையின் கன்னிமையுடன் ஒப்பிடுகையில் அதுவும் உத்தமமான கன்னிமை ஆகாது.
மிகப் புனித மனிதனிடத்திலும் முதலாய் ஒரு ஆதி உறவு, ஆன்மாவுக்கும், குற்றத்திற்கும் ஏற்பட்ட ஓர் உறவு உள்ளது. அதையே ஞானஸ்நானம் போக்குகிறது. அதைப் போக்கடித்தாலும், கணவனுடைய மரணத்தால் பிரிக்கப்பட்ட பெண்ணின் நிலையைப் போல் பாவத்திற்கு முன் ஆதிப் பெற்றோரிடம் காணப்பட்ட முழுக் கன்னிமையாக அது இல்லை. ஒரு தழும்பு விடப்பட்டிருக்கிறது. அது நினைவூட்டி வேதனைப்படுத்துகிறது. கிருமிகளால் சமயாசமயம் அதிகரிக்கிற சில நோய்களைப் போல அதுவும் புண் ஆகிவிடக் கூடிய தன்மையிலேயே இருக்கிறது. பரிசுத்த கன்னிகையிடம், இந்த ஆன்மாவிற்கும், குற்றத்திற்கும் இருந்து அறுந்த உறவின் அடையாளமே கிடையாது. எல்லா வரப்பிரசாதங்களையும் பரம பிதா அவளில் ஒன்று திரட்டி அவளைத் தம் நினைவில் உருவாக்கியபோது இருந்தது போலவே, அவள் ஆன்மா அழகுடனும், பழுதின்றியும் காணப்படுகிறது.
அவளே கன்னிகை. அவள் ஒருத்தியே கன்னிகை. அவளே உத்தம கன்னிகை. அவளே முழுமையான கன்னிகை. அப்படியே கர்ப்பந்தரிக்கப்பட்டவள். அப்படியே ஜெனிப்பிக்கப் பட்டவள் அப்படியே நிலைத்திருந்தவள். அவ்வாறே முடிசூட்டப்பட்டவள். நித்தியமாகவே அப்படியிருப்பவள். அவளே கன்னிகை. தீண்டப்படாமை, தூய்மை, வரப்பிரசாதம் ஆகியவற்றின் உச்சம் அவள். தான் புறப்பட்டு வந்த அறியப்படாத ஆழத்தினுள் மறைந்துபோகும் வரப்பிரசாதம்: கடவுளிடத்தில்: மிக உத்தம தீண்டப்படக் கூடாமை, மிக உத்தம தூய்மை, மிக உத்தம வரப்பிரசாதம் அவளே!
அதுவே திரித்துவமாயிருக்கிற ஒரே கடவுளின் பழிதீர்த்தல். அவசங்கைப்படுத்தப்பட்ட சிருஷ்டிகளுக்கு எதிர்மாறாக, இந்த நட்சத்திரத்தை உத்தமதனத்திற்கு அவர் உயர்த்துகிறார். ஆபத்தான வினோதப் பிரியத்திற்கு எதிர்மாறாக, கடவுளை நேசிப்பதிலேயே திருப்தி கொண்டு ஒதுங்கி வாழும் இக்கன்னிகையை அவர் எழுப்புகிறார். தீமையின் சாஸ்திரத்திற்கு எதிராக இவ்வுந்நத மறுவில்லாக் கன்னிகை! அவள் சலிப்புற்ற அன்பை அறியாள். விவாகமானவர்களுக்கு கடவுள் அளித்துள்ள அன்பை அவள் அறிந்திராதது மட்டுமல்ல, அதற்கும் அதிகமாய், பாவத்தின் வாரிசாக வந்த பாசத் தூண்டுதல்கள் அவளிடம் இல்லை. பனிக் குளிர்தலும், வெண்ணிற வெப்பமுமான தேவ அன்பின் ஞானமே அவளிடத்தில் இருந்தது. மாம்சத்தை உறைபனியால் பலப்படுத்துகிற தீ அது. அதனால், கடவுள் ஒரு கன்னிகையை மணந்த பீடத்தின் மேல் ஊடுருவிப் பார்க்கக் கூடிய முகம் பார்க்கும் கண்ணாடியாக அது இருந்தது. அவளுடைய உத்தமதனத்தை, அவருடைய உத்தமதனம் அரவணைப்பதால், கடவுள் தம்மையே கீழிறக்கவில்லை. அவளுடைய உத்தமதனம் திருமணவாளியாகையில், அவருடையதைவிட ஒரு அம்சம் மட்டுமே தாழ்கிறது - மனுஷி என்கிற முறையில் அவருக்குத் தாழ்ந்திருப்பதனால். ஆயினும் அவரைப் போலவே அது பழுதற்றிருக்கிறது.