6 ஜூன் 1944.
மாதாவும் சூசையப்பரும் சில மிருகங்களுடன் அடைக்கலம் புகுந்துள்ள கற்குகையின் உட்பாகத்தை இன்னும் காண்கிறேன்.
அங்கிருந்த நெருப்பும் அதைக் காத்திருந்த சூசையப்பரும் அயர்கிறார்கள். மாதா தன் தலையை உயர்த்தி சுற்று முற்றும் பார்க்கிறார்கள். சூசையப்பரின் தலை அவர் மார்பில் கவிழ்ந்து தியானிக்கிறவரைப் போலிருக்கிறார். விழித்திருக்க வேண்டுமென்ற அவருடைய நல்லெண்ணம் களைப்பின் மிகுதியால் நிறைவேறவில்லையென்று எண்ணிய மாமரி புன்னகை செய்கிறார்கள். பின் ஒரு ரோஜாவில் அமரும் வண்ணத்துப் பூச்சி எழுப்பும் சத்தத்தைவிடக் குறைவான ஓசையுடன் எழுந்து அமர்கிறார்கள். முழங்காலிடுகிறார்கள். அவர்கள் வதனத்தில் மோட்சத்திற்குரிய புன்முறுவல் அரும்ப ஜெபிக்கிறார்கள். கரங்களை ஏறக்குறைய சிலுவை அடையாளமாக, உள்ளங்கைகளை முன் நீட்டி மேலே நோக்கியபடி ஜெபிக்கிறார்கள். அந்நிலையில் இருப்பது அவர்களுக்கு எவ்வித சலிப்பும் தரவில்லை. அதன்பின் சிதறிக் கிடக்கும் வைக்கோலில் முகம் படும்படி பணிந்து முன்னைவிட அதிக உருக்கமாக ஜெபிக்கிறார்கள். நீண்ட நேரம் அப்படியே ஜெபத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
சூசையப்பர் விழித்துக் கொள்கிறார். நெருப்பு ஏறக்குறைய அணைந்துவிட, அந்தத் தொழுவம் வெளிச்சமற்று இருக்கிறது. ஒரு கைப்பிடியளவு கூளத்தை அள்ளி நெருப்பில் அவர் போடவும் நெருப்பு பற்றிக் கொள்கிறது. பின் அவர் சிறு சுள்ளிகளையும் அதற்குப் பின் விறகுக் குச்சிகளையும் போடுகிறார். குளிர் மிகக் கடுமையாயிருக்கிறது. குளிர்கால தெளிந்த இரவின் குளிர் எப்பக்கமுமிருந்து உள்ளே பாய்கிறது. வாசல் - அல்ல அந்த குகைத் துவாரத்தின் பக்கத்தில் அவர் இருப்பதால் குளிரால் கூடுதல் தாக்கப்படுகிறார். அவர் தம் கரங்களை நெருப்பில் காட்டுகிறார். காலணிகளை கழற்றிவிட்டு பாதங்களையும் நெருப்பில் காட்டுகிறார். தீ நன்கு பற்றி எரிகிறது. அப்போது சூசையப்பர் திரும்பிப் பார்க்கிறார். எதுவும் புலப்படவில்லை. மாதாவின் வெள்ளை முக்காட்டைக் கூட அவரால் பார்க்க முடியவில்லை. அவர் எழுந்து மாதாவின் பக்கம் சென்று: “மரியா நீங்கள் உறங்கவில்லையா?” என்கிறார். அப்படி மூன்றாவது தடவை கேட்டபோதுதான் மாதா திரும்பி “நான் ஜெபிக்கிறேன்” என்று பதில் கூறுகிறார்கள்.
“உங்களுக்கு ஏதும் தேவையா?”
“எதுவுமில்லை.”
“கொஞ்சம் உறங்க முயற்சி செய்யுங்கள். ஓய்வு கொள்ளவாவது முயற்சி எடுங்கள்.”
“சரி. ஆனால் ஜெபிப்பது எனக்குக் களைப்பாயில்லை.”
“சர்வேசுரன் உங்களோடு இருப்பாராக மரியா!”
“உங்களுடனும் அவர் இருப்பாராக!”
மாமரி முன்போல் ஜெபிக்கத் தொடங்குகிறார்கள். சூசையப்பர், தான் உறங்கிவிடாதபடி நெருப்புப் பக்கத்தில் முழங்காலிட்டு ஜெபிக்கிறார். முகத்தை கைகளில் புதைத்தபடி ஜெபிக்கிறார். இடைக்கிடையே நெருப்பில் குச்சி எடுத்துப் போடுகிறார். பின் உருக்கமாக ஜெபிக்கிறார். நெருப்பில் குச்சிகள் வெடிக்கும் ஓசையும் கழுதை தரையைக் காலால் உதைக்கிற சத்தத்தையும் தவிர எல்லாம் நிசப்தமாயிருக்கிறது.
கூரையிலுள்ள ஒரு வெடிப்பின் வழியாக நிலா வெளிச் சத்தில் ஒரு கதிர் உள்ளே பாய்கிறது. அது பூமிக்கப்பாலிருந்து வரும் வெள்ளி, மாதாவைத் தேடுவது போலிருக்கிறது. நிலா மேலே வர வர அது மாதாவை எட்டுகிறது. இப்பொழுது அவ்வொளி மாதாவின் தலைமேல் படிந்து தெளிந்த ஒளிவட்டம் போல் காணப்படுகிறது.
மாதா ஏதோ மோட்ச அழைப்பைக் கேட்டதுபோல் தலையை உயர்த்துகிறார்கள். பின் எழுந்திருந்து மறுபடியும் முழங்காலிடுகிறார்கள். ஓ! இந்த இடம் இப்பொழுது எவ்வளவு அழகாயிருக்கிறது! மாதா தலையை நிமிர்த்துகிறார்கள். அவர்களின் முகம் நிலா வெளிச்சத்தில் அழகுடன் பிரகாசிக்கிறது. அதில் படரும் ஒரு மோட்ச புன்னகையால் அம்முகம் தெய்வீகமாய் மாறுகிறது. அவர்கள் எதைக் காண்கிறார்கள்? எதைக் கேட்கிறார்கள்? எப்படி உணர்கிறார்கள்? அவர்கள் தேவனுடைய தாயாகப் போகும் ஒளி சூழும் அந்நேரத்தில், தான் காண்பதையும், கேட்பதையும், உணர்வதையும் அவர்கள் மாத்திரமே கூறக்கூடும். அவர்களைச் சுற்றிலும் ஒளி கூடிக் கொண்டே வருவதையே நான் காண்கிறேன். அந்த ஒளி மோட்சத்திலிருந்து வருவது போலிருக்கிறது. மாதாவைச் சுற்றியிருக்கிற அந்த எளிய பொருள்களிலிருந்து மேலே எழும்புவதாகத் தெரிகிறது. அதற்கெல்லாம் மேலாக அந்த ஒளி பொருந்திய பிரகாசம் மாதாவிடமிருந்தே வருவதுபோல் தெரிகிறது.
மாதா அணிந்திருந்த கட்டிநீல ஆடை இளநீலமாகத் தெரிகிறது. அவர்களின் கைகளும் முகமும் ஒரு பெரிய இளநீல இரத்தினக் கல்லுக்கடியில் வைக்கப்பட்டவை போல் தெளிவான நீலமாகக் காணப்படுகின்றன. இந்த இளநீல நிறம் பரவுகிறது. மாதாவை சுற்றியிருக்கிற பொருள்கள்மீது படிகிறது. அவற்றைச் சுத்திகரிக்கிறது. எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துகிறது. மோட்ச காட்சியில் எனக்குக் காணப்பட்ட நீல நிறத்தைப்போல் - அதைவிட சற்று மெல்லியதாக இது இருக்கிறது. இதே நிறம் மூன்று இராஜாக்கள் பாலனைத் தரிசிக்க வந்தபோதும் எனக்குக் காணப்பட்டது.
மாதாவின் சரீரத்திலிருந்து வரும் அந்த ஒளி வர வர அதிக கூர்மையான பிரகாசமடைகிறது. நிலா வெளிச்சத்தை அது உட்கொண்டு விட்டது. பரலோகத்திலிருந்து இறங்கக்கூடிய எல்லா ஒளியையும் மாதா தன்னிடம் இழுத்துக் கொள்வது போலிருக்கிறது. இப்பொழுது மாதா ஒளியின் உறைவிடமா யிருக்கிறார்கள். இந்த ஒளியை அவர்கள் உலகிற்குக் கொடுக்க வேண்டும். இப்படிக் கொடுக்கப்படப் போகிற ஆனந்த மயமான, எதற்குள்ளும் அடங்காத, அளக்க முடியாத, நித்திய தெய்வீக ஒளியின் முன்னோடியான வைகறை, ஒரு உதய நட்சத்திரம், ஒளியணுக்களின் ஒரு திரள் வருகிறது. அது அலைபோல் வர வர அதிகரிக்கிறது. தூப புகைபோல் எழும்புகிறது. பெரும் அருவியைப்போல் இறங்கி, திரைகளைப் போல் விரிகிறது.
அக்குகையின் மேல் பாகத்தில் நிறைய வெடிப்புகளும் சிலந்திக் கூடுகளும் உள்ளன. உடைந்த காரைக் கட்டிகள் பெளதீக சாஸ்திர அற்புதமாய் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இருண்டு வெறுப்பூட்டும் புகைபடிந்த அந்தக் கூரை இப்பொழுது ஒரு அரச அவையின் மேற்கூரை போல் காணப்படுகிறது. ஒவ்வொரு கற்பாளமும் ஒரு வெள்ளிக் கட்டி போலும், ஒவ்வொரு வெடிப்பும் நீலமணிக் கல்லின் ஒளிப் பாய்ச்சல்போலும், ஒவ்வொரு சிலந்திக் கூடும் வெள்ளிக்கம்பிகளாலும் வைரங்களாலும் பின்னப்பட்ட குடை போலுமிருக்கிறது. இரு கற்களுக்கிடையில் பதுங்கி இருந்து செறிதுயில் கொள்ளும் ஒரு பல்லி, ஓர் அரசி மறந்து விட்டுப்போய் விட்ட மரகதக் கல்லாகக் காட்சியளிக்கிறது. நீள் உறக்கம் கொள்ளும் ஒரு வெளவால் கூட்டம் பன்னிற மணி சரவிளக்குக் கொத்துப்போல் தெரிகிறது. முன்னிட்டியின் மேல் தட்டிலிருந்து நீண்டு தொங்கும் வைக்கோல் தாள்கள் சுத்தமான வெள்ளிக் கம்பிகளாக காற்றில் அசையும் முடியைப் போல் லாவகமாக ஆடுகின்றன.
முன்னிட்டியின் கீழ்த்தட்டின் இருண்ட மரம் மெருகூட்டப் பெற்ற வெள்ளிபோல் காணப்படுகிறது. சுவரெல்லாம் சரிகை வேலை செய்த துணி போல் அப் பூ வேலையினடியில் வெண்பட்டு மறைவது போலிருக்கிறது... மண் தரை எப்படியிருக்கிறது? வெண்யணாளியால் பிரகாசிக்கிற படிகம் போலிருக்கிறது. தரையில் சமமில்லாமல் மேலே எழும்பித் தெரிகிற மண், அதற்கு மரியாதை செய்யும்படி தூவப்பட்ட ரோஜாக்களைப் போலிருக்கிறது. தரையிலுள்ள குழிகள் நறுமணமும் வாசனைகளும் எழும்பும் விலைமதிப்புள்ள கிண்ணங்களாகத் தெரிகின்றன.
பிரகாசம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. தற்சமயம் அது கண் தாங்கக் கூடாததாகிறது. எரியும் சுவாலையான திரையால் உட்கொள்ளப்படுவது போல் பரிசுத்த கன்னிகை அத்தனை ஒளியினுள் மறைந்து போகிறார்கள்... அதிலிருந்து தேவனுடைய தாய் வெளிப்படுகிறார்கள்.
ஆம், மீண்டும் என் கண்கள் ஒளியைத் தாங்கக் கூடுமாயிருந்த போது, பிறந்த பாலனைத் தன் கரங்களில் ஏந்தியவர்களாக மாதாவைக் காண்கிறேன். ஒரு சிறு குழந்தை, ரோஜா வண்ணத்தில், குண்டாக, சுறுசுறுப்பான ரோஜா மொட்டளவு சிறிய கரங்களுடன், ஒரு ரோஜா மலரின் நடுவில் அடங்கிவிடக் கூடிய பாதங்களுடன், கால்களை உதைத்துக் கொண்டு, மெல்லிய நடுங்கும் குரலில் புதிதாய்ப் பிறந்த ஆட்டுக் குட்டியைப் போல் அழுது கொண்டு, முசுக்கொட்டைக் கனி போன்ற சிறு வாய் திறந்து, அச்செவ்வாயுள் அசைந்து நடுங்கும் நாவுடன் மாதாவின் கைக்குள் அடங்கும் உருண்டை சிரசுடன் காணப்படுகிறது. அச்சிறு இளம் பொன்னிற சிரசில் முடி இல்லாதது போலிருக்கின்றது. மாதா ஒரே சமயத்தில் அழுகிறார்கள், புன்னகை பூக்கிறார்கள். பாலனைப் பார்க்கிறார்கள். ஆராதிக்கிறார்கள். குனிந்து அவருடைய மாசற்ற சிரசிலல்ல, நெஞ்சின் நடுவில் முத்தமிடுகிறார்கள். அதனுள்ளே நமக்காகத் துடிக்கிறது அவருடைய சின்ன இருதயம்... ஒருநாள் அதிலே காயம் ஏற்படும். அவருடைய தாய் தன் மாசற்ற முத்தத்தினால் அந்தக் காயத்திற்கு முன்கூட்டியே மருத்துவம் செய்கிறார்கள்.
பளிச்சிடும் வெளிச்சத்தால் கலைந்த எருது, குளம்புகளை உதைக்கும் ஓசையுடன் எழுந்து கூப்பிடுகிறது. கழுதையும் திரும்பிப் பார்த்து கத்துகிறது. ஒளியின் பிரகாசம்தான் அவைகளை எழுப்பிவிட்டன. ஆயினும் அவை தங்கள் சார்பிலும் எல்லா விலங்கினங்கள் சார்பிலும் தங்கள் இரட்சகரை வரவேற்கின்றன என்று எண்ணுவது எனக்குப் பிரியமாயிருக்கிறது.
அர்ச். சூசையப்பர், கரங்களால் முகத்தை மூடியபடி ஏறக்குறைய பரவசமான நிலையில் அந்தச் சூழலிலிருந்தே தனிப்பட்டவராய் உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தவர், அவரும் விழித்து அவருடைய விரல் இடைகள் வழியாக அந்த அதிசயமான ஒளியைக் காண்கிறார். கையை அகற்றி தலையை நிமிர்த்தி சுற்றிலும் பார்க்கிறார். எழுந்து நிற்கிற எருது மாதாவை அவரிடமிருந்து மறைக்கிறது. ஆனால் மாதா: “சூசையே இங்கு வாருங்கள்” என்று அழைக்கிறார்கள்.
சூசையப்பர் உடனே செல்கிறார். பார்க்கிறார். மேரை மரியாதை உணர்வு மேலிட நின்றுவிடுகிறார். தாம் நின்ற இடத்திலேயே முழங்காலிடப் போகிறார். மாதா “வாருங்கள்” என்று வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள். தன் வலது கரத்தால் பாலனை நெஞ்சோடு அணைத்தபடி இடது கையை வைக்கோலில் ஊன்றி எழுந்திருக்கிறார்கள். சூசையப்பரிடம் வருகிறார்கள். சூசையப்பர் பாலன் அருகில் போக விரும்பினாலும் மரியாதை குன்றிவிடக் கூடாதே என்ற மனப் போராட்டத்தில் தயங்குகிறார். இருவரும் வைக்கோல் படுக்கையருகே சந்திக்கிறார்கள். ஒருவர் ஒருவரைப் பார்க்கிறார்கள். மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்துகிறார்கள்.
“வாருங்கள், சேசுவை நாம் பிதாவுக்கு ஒப்புக் கொடுப்போம்” என்கிறார்கள் மாதா. சூசையப்பர் முழங்காலிடுகிறார். இரு மரத் தூண்களுக்கு மத்தியில் நின்றபடி மாதா திருப்பாலனை தன் கரங்களில் உயர்த்திப் பிடித்து: “சர்வேசுரா! இதோ நான் உமது குமாரனின் சார்பில் இவ்வார்த்தைகளைப் பேசுகிறேன். இதோ உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற நான் இருக்கிறேன். மரியா நானும் சூசை என் மணாளனும் அவரோடிருக்கிறோம். ஆண்டவரே! இதோ உம்முடைய ஊழியர்கள் நாங்கள். எப்பொழுதும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உம்முடைய மகிமைக்காகவும் உம்முடைய அன்பிற்காகவுமே உம்முடைய சித்தத்தை நாங்கள் நிறைவேற்றுவோமாக!” என்று சொல்கிறார்கள்.
அதன்பின் மாதா குனிந்து: “சூசையே, பாலனை வாங்குங்கள்” என்று கூறி சூசையப்பரிடம் திருப்பாலனைக் கொடுக்கிறார்கள். அதற்கு சூசையப்பர்:
“என்ன! என்னிடமா? ஓ! வேண்டாம்! நான் தகுதியற்றவன்” என்று மறுக்கிறார். கடவுளைத் தொடுவது பற்றி அவர் ஏதும் பேச இயலாமல் வாயடைத்து நிற்கிறார்.
ஆனால் மாதா புன்னகையுடன்: “நீங்கள் தகுதி உடையவர்கள்தான். உங்களைவிடத் தகுதி பெற்றவர்கள் வேறு யாருமில்லை. அதனால்தான் தேவன் உங்களைத் தெரிந்து கொண்டார். பாலனை ஏந்திக் கொள்ளுங்கள். நான் துணிகளை எடுக்கிறேன்” என்று கூறி சேசுவை அவரிடம் கொடுக்கிறார்கள்.
சூசையப்பர் சேசு பாலனை தம் கைகளை நீட்டி அன்போடு வாங்குகிறார். பாலனோ குளிர் தாங்கமாட்டாமல் வீறிட்டு அழுகிறார். சூசையப்பர் அவரைக் கையில் ஏந்தி தம்மிடமிருந்து தூரத்தில் வைக்கும் கருத்தை மாற்றி, அவரைத் தம் மார்போடணைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டே: “ஓ ஆண்டவரே! என் தேவனே!” என்று கூறுகிறார். திவ்விய பாலனின் பாதங்களை முத்தமிடுகிறார். பாதங்கள் மிகக் குளிர்ந்திருப்பதை உணர்கிறார். அப்படியே தரையில் அமர்ந்து பாலனைத் தம்மோடு அரவணைத்து, மேற்போர்வையால் அத்திருப்பாதங்களை நன்றாக மூடி இரவின் கொடிய குளிர்காற்று தாக்காதபடி செய்கிறார். நெருப்புப் பக்கம் போகலாமென்றால் வாசலிலிருந்து ஒரு குளிர்வாடை வீசுகிறது. இருக்கிற இடத்தில் இருந்து விடுவதே நல்லதாகத் தெரிகிறது. இல்லை, குளிர் காற்றைத் தடை செய்து உஷ்ணம் தருகிற இரண்டு மிருகங்களுக்கிடையில் போவது தாவிளை. அப்படியே எருதுக்கும், கழுதைக்கும் நடுவே போகிறார். வாசலுக்கு முதுகைத் திருப்பி, பாலனுக்கு தம் உடலால் பாதுகாப்பளித்தபடி குனிந்திருக்கிறார்...
மாதா சிறு பெட்டிக்குள்ளிருந்து சில துண்டுகளையும் கட்டுத் துகிலையும் எடுக்கிறார்கள். பின் நெருப்படிக்குப் போய் அவற்றை உஷ்ணப்படுத்துகிறார்கள். பின் சூசையிடம் வந்து வெதுவெதுப்பான துகில்களால் குழந்தையைச் சுற்றி, தன் மேல் வஸ்திரத்தால் அவருடைய தலையையும் மூடியபின்: “பிள்ளையை எங்கே கிடத்தலாம்?” என்று கேட்கிறார்கள்.
சூசையப்பர் சுற்றிலும் பார்த்து சிந்தித்து... “பொறுங்கள். இந்த மிருகங்களையும் வைக்கோலையும் இங்கே கொண்டு வருவோம். மேல் தட்டிலுள்ள வைக்கோலை இழுத்து இங்கே ஒழுங்கு செய்யலாம். பக்கவாட்டில் இருக்கும் மரப்பலகை அவரை காற்றுப்படாமல் பாதுகாக்கும். வைக்கோல் தலையணையாக இருக்கும். எருது தன் மூச்சால் கொஞ்சம் உஷ்ணம் தரும். கழுதையை விட எருது நல்லது. அதுதான் பொறுமையாயும் அமைதியாயும் இருக்கிறது” என்று சொல்லி அவற்றை சுறுசுறுப்புடன் செய்கிறார். மாதா பாலனை அரவணைத்துத் தாலாட்டுகிறார்கள். தன் கன்னத்தை அவர் தலையில் வைத்து குளிரைப் போக்க முயல்கிறார்கள்.
சூசையப்பர் நெருப்பை நன்றாக மூட்டி வைக்கோலை அதில் காட்டி உஷ்ணமாக்குகிறார். அது குளிர்ந்துவிடாதபடி மார்புடன் சேர்த்து வைத்து, போதிய அளவு சேர்ந்ததும் அதை ஒரு மெத்தை போல் பரப்பி, பின் அதை முன்னிட்டியில் போட்டு தொட்டில் போலாக்குகிறார். “இனி ஒரு போர்வை வேண்டும். வைக்கோல் குத்தும். அவரை மூடவும் வேண்டும்” என்கிறார்.
“என் மேல் வஸ்திரம் இதோ” என்று மாதா சொல்ல,
“உங்களுக்குக் குளிருமே” என்கிறார் சூசையப்பர்.
“பரவாயில்லை. எனக்குக் குளிராகவே இல்லை. போர்வை முரடாயிருக்கிறது. மேல் வஸ்திரம் மிருதுவாயும் உஷ்ணமாயுமிருக்கிறது. அவர் துன்பப்பட விடக்கூடாது.”
சூசையப்பர் அந்த இருண்ட நீல மெல்லிய கம்பளி மேல் வஸ்திரத்தை எடுத்து, நான்காக மடித்து வைக்கோலில் பரப்பி, ஒரு பகுதியை முன்னிட்டிக்கு வெளியே நீட்டி விடுகிறார். இரட்சகரின் முதல் படுக்கை தயாராயிற்று.
மாதா மெல்ல நடந்து வந்து பாலனை அதில் கிடத்தி நீண்டு தொங்கும் பாகத்தால் அவரை மூடி, தனையைச் சுற்றிலும் பொதிந்து வைக்கிறார்கள். அவரின் முகம் மட்டுமே தெரிகிறது. துணியின் உஷ்ணம் அவருடைய அழுகையை நிறுத்திவிட்டது. அவருக்கு உறக்கம் வருகிறது. சேசு பாலனின் முதல் உறக்கத்தை அவர்கள் இருவரும் மிக்க மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.