1 ஏப்ரல் 1944.
இப்போது நான் ஒரு மலைப்பாங்கான இடத்தில் இருக்கிறேன். அவை உயர்ந்த மலைகளுமல்ல, வெறும் குன்றுகளுமல்ல. நம் டஸ்கனியிலுள்ள அப்பென்னைலிலும் அம்ப்ரியாவிலும் நான் காண்பவைபோல் முகடு கூடல்வாய்களும் கடற்கழிகளும் அங்கிருக்கின்றன. தாவரங்கள் அடர்ந்தும் அழகாகவும் உள்ளன. ஏராளமான நல்ல தண்ணீர் மேய்ச்சல் நிலங்களைப் பசுமையாகவும் பழமரங்களை வளமாகவும் வைத்திருக் கின்றது. தோட்டங்களில் பெரும்பாலும் ஆப்பிளும் அத்தியும் பயிரிடப்படுகின்றன. வீடுகளின் அருகே திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. அது இளந்தளிர் காலமாயிருக்க வேண்டும். ஏனென்றால் திராட்சைக் காய்கள் பட்டாணியளவில் பெரிதாயிருக் கின்றன. ஆப்பிள் மலர்கள் பச்சைக் குளிகைகள்போல் ஏற்கெனவே தோன்றியுள்ளன. அத்தி மரங்களின் உச்சியில் முதற் கனிகள் விளையா பருவத்திலிருந்தாலும் வடிவமடைந்து காணப்படுகின்றன. மேட்டு நிலங்களெல்லாம் மெல்லிய பல்நிற விரிப்புகளாகத் தெரிகின்றன. அவற்றின் மேல் ஆடுகள் மேய்கின்றன, ஓய்வு கொள்கின்றன. மரகதப் பச்சைப் புல்லின்மேல் அவை வெள்ளைப் பொட்டுக்கள் போல் தோன்றுகின்றன.
மாதா கழுதையின்மேல் அமர்ந்தபடி ஒரு நன்கு பராமரிக்கப்பட்ட முக்கியமான சாலை வழியே மேலேறுகிறார்கள். மேட்டு நிலத்தில்தான் அந்தக் கிராமம் உள்ளது. துப்புரவான கிராமம் அது. என் அந்தரங்க எச்சரிப்பாளர் சொல்கிறார்: “இந்த இடம் எபிரோன்” என்று. நீங்கள் என்னிடம் மோன்டானாவைப் பற்றிப் பேசினீர்கள். ஆனால் இந்தப் பெயர்தான் எனக்குக் காட்டப்படுகிறது. எபிரோன் என்பது இந்த இடம் முழுவதற்குமா அல்லது ஊருக்கு மட்டுமா பெயர் என்பது தெரியவில்லை. எனக்கு இப்படித்தான் கேட்கிறது. அதையே நானும் கூறுகிறேன்.
இப்போது மாதா ஊருக்குள் செல்கிறார்கள். மாலை வேளை. பெண்கள் சிலர் வாசல்களில் நின்று புதிதாய் வருகிற ஆளைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். அவர்களின் கண்கள் மாதாவைத் தொடருகின்றன. மாதா, ஊரின் நடுவில், ஓர் மிக அழகிய வீட்டின் முன் நிற்கிறார்கள். அவ்வீட்டின் முன்னும் பின்னும் சமையல் தோட்டம் உள்ளது. வீட்டைச் சுற்றி நன்கு பயிரிடப்பட்ட ஒரு பழத் தோட்டம் காணப்படுகிறது. தோட்டம் நீண்டு மலையின் உயர்வு தாழ்வுடன் ஒரு மேட்டு நிலமாகி, வளர்ந்த மரக் கூட்டத்துடன் இணைகிறது. அதற்கப்பால் என்ன உள்ளதென்று தெரியவில்லை. அவ்விடத்தைச் சுற்றிலும் ஒருவகை முட்செடிகளாலும், காட்டு ரோஜாக்களாலுமான வேலி இருக்கின்றது. எந்தச் செடி அது என்று சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவை பழம் பழுக்கும் வரையிலும் எது எது என்று நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. ஊர்ப் பக்கமாயுள்ள வீட்டின் முன்புறத்தில் ஒரு தாழ்ந்த வெள்ளைச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல் வரிசையாக ரோஜாப் புதர்கள். தற்சமயம் அவற்றில் பூக்கள் இல்லை. நிறைய மொட்டுக்கள் காணப்படுகின்றன. நடுவில் ஒரு இரும்புக் கதவு. ஊரில் ஒரு முக்கியமானவருடைய வீடு அது என்று எளிதாகத் தெரிகிறது - அல்லது ஒரு பணக்காரரின் வீடாக இருக்க வேண்டும். ஏனென்றால் அது செல்வச் செழிப்பாயும் படாடோபமாயும் காணப்படவில்லையாயினும் எல்லாம் செளகரியமாகவும் ஒழுங்காகவும் காணப்படுகின்றன.
மாதா வாகனத்தை விட்டிறங்கி வாசலுக்கு வந்து இரும்புக் கம்பிகள் வழியாகப் பார்க்கிறார்கள். ஒருவரும் தென்படவில்லை. யாராவது தன்னைக் கேட்கும்படி முயலுகிறார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த அதிக வினோதப்பிரியையான ஒரு மூதாட்டி, அங்கே தொங்குகிற மணியாகப் பயன்படுத்தப்படும் ஒரு நூதன விசையைக் காட்டுகிறாள். இரண்டு உலோகத் துண்டுகள் ஒரு கோலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு கயிறு உள்ளது. கயிற்றை இழுக்கும்போது அந்த உலோகத் துண்டுகள் மோதி மணியயாலியை எழுப்பும். மாதா மிக மெதுவாக கயிற்றை இழுக்கிறார்கள். மிக மெலிந்த ஒலி கேட்கிறது. யாருக்கும் அது கேட்கவில்லை. பின் அந்த பாட்டி தன் பலமெல்லாம் கூட்டி கயிற்றை பலமுறை வேகமாக இழுத்து செத்தவனை எழுப்ப போதுமான பெரிய ஒலியை உண்டாக்குகிறாள்.
“இப்படிச் செய்ய வேண்டும் பெண்பிள்ளை! அல்லாவிட்டால் யாருக்குக் கேட்கும்? எலிசபெத்தும் சக்கரியாசும் வயதானவர்களென்று உனக்குத் தெரியுமே. அவர் இப்போது ஊமையும் செவிடுமாயிருக்கிறார். இரண்டு வேலைக்காரர்களும் வயசாலிகள்தான், உனக்குத் தெரியாதா? நீ இதற்குமுன் இங்கே வந்ததுண்டா? சக்கரியாஸை உனக்குத் தெரியாதா? நீ...”
அப்போது அங்கே மூச்செறிய வேகமாய் வருகிற ஒரு சின்ன வயோதிப மனிதனால், மாதா அந்த ஸ்திரீயின் கேள்விகள், அவள் தரும் தகவல்கள் ஆகிய பிரளயத்திலிருந்து காப்பாற்றப்படு கிறார்கள். அந்த ஆள் ஒரு தோட்டக்காரர் அல்லது விவசாயியாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் கையில் ஒரு மண் கிளறி இருக்கிறது. கிளை கழிக்கும் கத்தி அவர் இடைவாரில் தொங்குகிறது. அவர் வாசலைத் திறக்க, மாதா அந்தப் பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு, அவளுடைய கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் உள்ளே செல்கிறார்கள். வினோதப் பிரியமுள்ள அந்தப் பாட்டிக்கு அது ஏமாற்றம்தான்.
உள்ளே வந்ததும் மாதா: “நான் சுவக்கீன் அன்னாளின் மரியா. என் ஊர் நாசரேத். உம் எஜமானரின் உறவினள்” என்று சொல்கிறார்கள்.
அம்மனிதன் தலைபணிந்து மாதாவை வரவேற்கிறான். பின் சத்தமாக: “சாரா, சாரா” என்று கூப்பிடுகிறான். மாதா வந்த கோவேறு கழுதையை உள்ளேவிட வாசலை மறுபடியும் திறக்கிறான். விடாப்பிடியாக நின்ற அந்தப் பாட்டியிடமிருந்து தப்ப மாதா துரிதமாக உள்ளே நுழைந்துவிட அந்த வேலையாளும் உடனே வாசலைச் சாத்திவிட்டான். இப்பொழுது மீண்டும் திறந்து கழுதையை உள்ளே வரவிடும் போது அவன்: “ஓ! இந்த வீட்டிற்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்! மலடியாயிருந் தவளுக்கு பரலோகம் ஒரு மகவைத் தந்திருக்கிறது. உந்நதர் வாழ்த்தப்படுவாராக! ஆனால் ஏழு மாதங்களுக்கு முன் சக்கரியாஸ் ஜெருசலேமிலிருந்து ஊமையாகத் திரும்பி வந்தார். இப்போது அவர் சயிக்கினையால், அல்லது எழுதிக்காட்டி தம்மைக் கண்டுபிடிக்க வைக்கிறார். ஒருவேளை இது ஏற்கெனவே உமக்குத் தெரிந்திருக்கும். என் எஜமானி, இந்த மகிழ்ச்சியிலும் இந்த கஷ்டத்திலும் உமக்காக மிகவும் ஏங்கியிருக்கிறார்கள். எப்போதும் அவர்கள் சாராளிடம்: “சின்ன மரியா மட்டும் என்னுடன் இருந்தால்! அவள் இன்னும் ஜெருசலேமில் இருந்திருக்க வேண்டும் என்று ஆசிக்கிறேன். அவளை அழைத்துவர சக்கரியாஸை அனுப்பியிருப்பேன். ஆனால் ஆண்டவர் அவர் நாசரேத் சூசைக்கு விவாகஞ் செய்யப்பட விரும்பினார். என் வேதனையில் அவள் மட்டுமே எனக்கு ஆறுதலாயிருக்கக் கூடியவள். அவள் தான் கடவுளிடம் ஜெபிக்க எனக்கு உதவக்கூடியவள். அவள் தான் கடவுளிடம் ஜெபிக்க எனக்கு உதவக்கூடியவள். ஏனென்றால் அவள் அவ்வளவு நல்லவள். தேவாலயத்தில் எல்லாரும் அவளைத் தேடுகிறார்கள். கடவுள் எனக்குத் தந்திருக்கிற குழந்தைக்காக அவருக்கு நன்றி செலுத்தும்படி போன திருநாளைக்கு நான் சக்கரியாசுடன் ஜெருசலேமுக்குப் போயிருந்தபோது அவளுடைய ஆசிரியைகள் என்னிடம்: “மரியாயின் குரல் இந்த சுவர்களின் உள்ளே கேட்கப்படாததால் மகிமையின் கெருபின் தேவாலயத்தில் இல்லாததுபோல் இருக்கிறது” என்று சொன்னார்கள்” என்று கூறிய அவ்வேலையாள் மறுபடியும் சத்தமிட்டு: “சாரா! சாரா!” என்று கூப்பிடுகிறான். “என் மனைவி கொஞ்சம் செவிடு. வா அம்மா, நான் வழிகாட்டுகிறேன்” என்கிறான்.
அப்போது வீட்டின் ஒரு பக்கத்திலிருந்த படிக்கட்டில் ஒரு வயதான ஸ்திரீ தோன்றுகிறாள். முகமெல்லாம் சுருக்கம். பழுத்த தலைமுடி. அது முன்பு நல்ல கறுப்பாயிருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவளுடைய கண்புருவங்களும் இமைகளும் கறுப்பாயிருக்கின்றன. அவள் முகத்திலிருந்து அவள் புது நிறமாயிருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. அவள் தளதளப்பாக உடையணிந்திருக்கிறாளெனினும் அவள் குழந்தையோடிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அது இந்த மூப்பு வயதுக்குப் பொருந்தாதது போலிருக்கிறது. அவள் கையால் கண்ணை வெளிச்சத்துக்கு மறைத்தபடி கீழே எட்டிப் பார்க்கிறாள். மாதாவை அடையாளம் கண்ட உடனே தன் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “ஓ!!” என்று மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் குரல் கொடுக்கிறாள். தன்னால் முடிந்த மட்டும் மாதாவை நோக்கி விரைந்து வருகிறாள். வழக்கமாக எப்போதும் மெல்லவே நடக்கும் மரியா மான்போல் ஓட, படிக்கட்டின் அடியில் இருவரும் சந்திக்கிறார்கள். மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்தும் எலிசபெத் தம்மாளை மாதா அன்போடு அரவணைத்துக் கொள்கிறார்கள்.
பின் எலிசபெத்தம்மாள் தன்னை விடுவித்துக் கொணடு, மகிழ்ச்சியும், துயரமும் கலர, “ஆ!” என்று ஓலமிட, மாதாவும் அநத மூப்பான ஊழியனும் உடல் நலமற்றது போல் தள்ளாடும் எலிசபெத்தம்மாளைத் தாங்கிக் கொள்கிறார்கள். கவிழ்ந்த அவள் முகம் மாறி மாறி சிவந்து வெளுப்பாகிறது. ஆனால் சற்று ஊன்றிய சிந்தனைக்குப் பின் எலிசபெத் பிரகாசமான முகத்துடன் காணப்படுகிறாள். தான் இருப்பதை விட அதிக இளமையாக காட்சியளிக்கிறாள். தான் இருப்பதைவிட அதிக இளமையாக காட்சியளிக்கிறாள். தான் ஒரு சம்மனசைப் பார்ப்பதுபோல் வணக்கத்தோடு மாதாவைப் பார்த்து தாழ்ந்து பணிந்து ஆச்சரியத்தோடு உரைக்கிறாள்:
“எல்லாப் பெண்களுக்குள்ளும் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய உதரத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே! - இப்படி இரண்டு தனி வாக்கியங்களாகவே கூறுகிறாள் - என் ஆண்டவரின் தாயார் உம்முடைய ஊழியக்காரியாகிய என்னிடம் வரும்படி எனக்குக் கிடைத்ததெப்படி? உமது குரலின் சத்தம் என் காதில் விழுந்ததும் என் உதரத்திலிருக்கிற பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று. நான் உம்மை அரவணைத்த போது தேவனின் ஆவியானவர் மிக ஆழ்ந்த உண்மைகளை என் இருதயத்தில் கூறினார். மனித மனத்திற்கு சாத்தியமாகாதென காணப்பட்டவை கடவுளால் கூடும் என நீர் விசுவசித்ததால் நீர் பாக்கியவதியாயிருக்கிறீர். நீர் பாக்கியவதி. ஏனென்றால், உமக்கு முன்னறிவிக்கப்பட்டதையும், நம் நாட்களுக்கென தீர்க்கதரிசிகள் முன்னுரைத்ததையும் உம்முடைய விசுவாசத்தால் நீர் நிறைவேறச் செய்வீர். யாக்கோபின் வீட்டாருக்கு நீர் கொண்டு வந்துள்ள இரட்சண்யத்திற்காக நீர் பாக்கியவதியா யிருக்கிறீர். என் குமாரனுக்கு நீர் கொண்டு வந்துள்ள அர்ச்சிப் பிற்காக நீர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர். இக்குழந்தை மகிழ்ச்சி யடைந்த வெள்ளாட்டுக் குட்டிபோல் என் உதரத்துள் அக்களிப்பால் துள்ளுவதை நான் உணருகிறேன். காரணம் அவன் பாவ தோஷத்திலிருந்து விடுபட்டதாக உணருகிறான். உமக்குள்ளே வளருகின்ற பரிசுத்தரின் இரட்சிப்பிற்கு முன்கூட்டியே அர்ச்சிக்கப் பட்டு அவருடைய முன்னோடியாக அழைக்கப்பட்டிருக்கிறான்.”
அப்போது மாதாவின் ஒளிரும் கண்களில் இருதுளிகள் உருண்டோடுகின்றன. தன் இரு கரங்களையும் உயர்த்தி கண்களை மேலே எழுப்பி முறுவலோடு: “என் ஆன்மா ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது” என்ற தன் கீதத்தை அது நமக்குக் கிடைத்துள்ளபடியே உரைக்கிறார்கள். மேலும் “அவர் தமது கிருபையை நினைவுகூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்” என்ற வாக்கியத்தைக் கூறும்போது மாதா முழங்காலிட்டு கைகளை மார்பில் சார்த்தி தரைமட்டும் கவிழ்ந்து கடவுளை ஆராதிக்கிறார்கள். மாதா கரங்களை உயர்த்துகிற பாவனையில் சேசு அடிக்கடி பின்னால் காணப்படுவார்.
எலிசபெத்தம்மாளுக்கு உடம்பிற்கு ஒன்றுமில்லை, அவள் தன் எண்ணங்களை மாதாவிடம் வெளியிடுகிறாள் என்று கண்ட ஊழியன் விவேகத்தோடு அங்கிருந்து அகன்று, இப்பொழுது ஒரு கம்பீரமான முதியவரோடு வருகிறான். முதியவரின் தலையும் தாடியும் முழுவதும் வெண்மையாயிருக்கின்றன. தூரத்திலிருந்தே அவர் மாதாவை பெரும் சைகைகளோடும் அடித்தொண்டை யிலிருந்து கிளம்பும் ஒலிகளோடும் வரவேற்கிறார்.
அப்போது எலிசபெத்தம்மாள் ஜெபத்தில் மூழ்கியிருந்த மாதாவை தோளில் தொட்டு: “சக்கரியாஸ் வருகிறார். அவர் ஊமையாயிருக்கிறார். அவர் விசுவசியாததால் கடவுள் அவரைத் தண்டித்திருக்கிறார். அதைப் பற்றி பிந்திச் சொல்கிறேன். ஆனால் வரப்பிரசாதத்தால் நிறைந்திருக்கிற நீர் இங்கு வந்திருப்பதால் கடவுள் அவரை மன்னிப்பாரென நம்புகிறேன்” என்கிறாள்.
மாதா எழுந்து சக்கரியாஸை சந்திக்கப் போகிறார்கள். கிட்டப் போனதும் தரை மட்டும் தாழ்ந்து தரை வரை தொங்கும் அவருடைய அகலமான ஆடையின் ஓரத்தை முத்தமிடுகிறார்கள். அது ஒரு பூவேலை செய்த நாடாவினால் இடையில் கட்டப்பட்டுள்ளது.
சயிக்கினைகளால் சக்கரியாஸ் மாதாவை வரவேற்கிறார். இருவரும் எலிசபெத்திடம் வருகிறார்கள். அவர்கள் ஓர் அறைக்குள் செல்கிறார்கள். அது ஒரு விசாலமான அழகாக ஒழுங்கு செய்யப்பட்ட அறை. அதில் மாதாவை இருக்கச் செய்து பலகாரங்களையும் நுரைமாறா புதுப்பாலையும் அருந்தக் கொடுக்கிறார்கள்.
எலிசபெத்தம்மாள் வேலைக்காரப் பெண்ணுக்கு சில கட்டளைகளைக் கொடுக்கிறாள். அவள் தன் கையில் மாவு படிந்தும், மாவு பட்டதால் கூடுதல் வெண்மையாகிக் காணப்படும் முடியோடும் இப்போதுதான் வந்தாள். அவள் உரொட்டி சுட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அந்த ஊழியனுக்கும் - அவர் பெயர் சாமுவேல் என்று சொல்லக் கேட்கிறேன் - சில கட்டளைகள். மாதாவின் பெட்டியை ஓர் அறையை அடையாளம் சொல்லி அங்கே கொண்டு செல்லும்படி கூறுகிறாள். விருந்தினர் சார்பாக வீட்டெஜமானியாகிய தன் கடமையை இவ்வாறு நிறைவேற்றுகிறாள்.
இதற்கிடையில், ஓர் எழுதுகோலால் மெழுகு அட்டையில் சக்கரியாஸ் எழுதிக் கேட்கிற கேள்விகளுக்கு மாதா பதில் சொல்கிறார்கள். அவர் அர்ச். சூசையப்பரைப் பற்றியும் அவருடன் மாதாவின் மெய்விவாக வாழ்வு பற்றியும் கேட்கிறார் என்பதை மாதாவின் பதில்களிலிருந்து புரிந்து கொள்கிறேன். மேலும், மாதா மெசையாவின் தாயாயிருக்கிற நிலையைப் பற்றி மோட்ச ஒளி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. எலிசபெத்தம்மாள் சக்கரியாஸிடம் சென்று: “மரியாயும் ஒரு தாயாகியிருக்கிறாள். அவளின் மகிழ்ச்சியினிமித்தம் சந்தோஷப்படுங்கள்” என்று சொல்கிறாள். வேறு எதையும் கூறாமல் மாதாவை நோக்கிப் பார்க்கிறாள். மாதாவும் எலிசபெத்தைப் பார்த்து அதற்கு மேல் சொல்ல வேண்டாமென்ற குறிப்பை உணர்த்துகிறார்கள். எலிசபெத்தம்மாளும் மவுனமாகி விடுகிறாள்.
இந்த இனிமையான காட்சி யூதாஸின் தற்கொலைக் காட்சியின் பயங்கரத்தை நான் மறக்கச் செய்கிறது.
நேற்றிரவில், உறங்குமுன், மாதா மரித்த இரட்சகரின் சரீரத்தின் மீது வாசனைப் பொருள்கள் ஊட்டப்படும் கல்லின் மேல் குனிந்து நின்று அழுவதைக் கண்டேன். கல்லறையினுள்ளே, வாசலுக்கு எதிர்ப்புறமாகத் திரும்பி சேசுவின் வலது கைப்பக்கத்தில் அவர்கள் நின்றார்கள். பந்தங்களின் வெளிச்சத்தில் அவர்கள் முகம் தெரிந்தது. பரிதாபமான அம்முகம் துயரத்தால் பாழாக்கப்பட்டு கண்ணீரால் கழுவப்பட்டிருந்தது. சேசுவின் கரத்தை எடுத்து முத்தமிட்டு தன் கன்னத்துடன் சேர்த்து, விரல்களை ஒவ்வொன்றாய் நிமிர்த்தி அசைவற்ற அவை ஒவ்வொன்றிலும் முத்தஞ் செய்தார்கள். பின் அவர் முகத்தையும், பாதி திறந்திருக்கும் கண்களையும், காயப்பட்ட நெற்றியையும் தடவி முத்தமிட்டார்கள். பந்தங்களின் சிவப்பு ஒளி வதைக்கப்பட்ட அத்திருச் சரீரத்தின் காயங்களை அதிக உண்மையாகக் காட்டின. அவருடைய வாதையின் கொடுமையையும் அவருடைய மரணத்தின் உண்மையையும் அதிக எதார்த்தமாக, அதிக உண்மையாகக் காண்பித்தன.
என் மனம் தெளிவடையும் வரை நான் தியானித்துக் கொண்டிருந்தேன். என் மயக்கத்திலிருந்து வெளிப்பட்டபின், நான் ஜெபம் செய்து விட்டுப் படுத்தேன். அப்போது மேற்கண்ட காட்சி தொடங்கியது. ஆனால் மாதா என்னிடம்: “எழும்ப வேண்டாம், பார்த்துக் கொண்டிரு. நாளைக்கு எழுதலாம்” என்றார்கள். என் உறக்கத்தில் அதையெல்லாம் மறுபடியும் கனவு கண்டேன். 6-30க்கு நான் விழித்தபோது நான் விழிப்பில் கண்டதையும், கனவில் பார்த்ததையும் மீண்டும் கண்டேன். அப்படிக் கண்டபோதே அதை எழுதினேன். அதற்குப் பிறகு நீங்கள் வர, நான் பின்வருபவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமா என்று உங்களிடம் கேட்டேன். அவை சக்கரியாஸ் வீட்டில் மரியா இருந்த சமயம் நடந்த பல்வேறு காட்சிகள்.