8 மார்ச் 1944.
நான் காண்பது: மரியா - ஓர் மிக இளவயதுப் பெண். அதிகமானால் பதினைந்து வயதிருக்கும். அவர்கள் ஒரு நீண்ட சதுர வடிவமான அறையில் இருக்கிறார்கள் - ஒரு நங்கைக்கு மிகப் பொருத்தமான அறை. அதன் ஒரு நீண்ட சுவர் ஓரமாக ஒரு தாழ்ந்த படுக்கை. சட்டம் இல்லை. தடிப்பான பாய் அல்லது ஜமுக்காளங்கள் பலகையில் அல்லது பிரம்பு பின்னல் தட்டியில் விரிக்கப்பட்டுள்ளன. நம் படுக்கைகளில் இருப்பது போல் நெளிவு சுளிவு எதுவுமில்லாமல் விறைப்பாயிருக்கின்றன. அடுத்த சுவரில் ஒரு புத்தக அல்மேராவும் எண்ணெய் விளக்கும் உள்ளன. சில பார்ச்மெண்ட் காகித சுருள்களும் கவனமாக மடிக்கப்பட்டுள்ள நூல் தையல் வேலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அது பூ வேலை போலிருக்கிறது.
புத்தக அல்மேரா பக்கத்தில், சமையல் தோட்டத்தை நோக்கும் கதவு ஒன்று உள்ளது. அதில் ஒரு திரை தொங்குகிறது. அது தென்றலில் மெல்ல அசைகிறது. அங்கே ஒரு தாழ்ந்த சாய்வில்லா இருக்கை ஒன்றில் கன்னிகை அமர்ந்திருக்கிறார்கள். பனியைப்போல் வெண்மையும், பட்டுப்போல் மெல்லியதுமான லினன் நூல் நூற்கிறார்கள். லினன் வெண்மையைவிட சற்று மங்கலான அவர்களின் சிறு கரங்கள் தக்களியைத் துரிதமாக சுற்றுகின்றன. அவர்களின் அழகிய முகம் முன்புறமாக சற்றுக் கவிழ்ந்திருக்கிறது. ஏதோ இனிய நினைவுகளில் ஈடுபட்டிருப்பது போல் முகத்தில் சிறு நகை அரும்புகிறது.
அவ்வீட்டிலும், சமையல் தோட்டத்திலும் பெரிய அமைதி காணப்படுகிறது. மரியாயின் முகத்திலும் சுற்றுப்புறத்திலும் பெரும் சமாதானம் நிலவுகிறது. எல்லாம் அமைதியாகவும் ஒழுங்காகவும் உள்ளன. அது ஒரு துறவி மடத்து அறையைப் போல் எல்லாம் தூய்மையாக எளிமையாக, குறைவான பொருள்களுடனே இருந்தாலும், அதன் துப்புரவின் காரணமாகவும், எல்லாம் வைக்கப்பட்டிருக்கிற ஒழுங்கின் காரணமாகவும் அந்த அறை ஆடம்பரமற்ற அரசத் தன்மையுடன் விளங்குகிறது. படுக்கையில் வைக்கப்பட்டிருக்கிற உடைகள், சுருள்கள், விளக்கு, அதன் அருகில் உள்ள செம்பு ஜாடி, அதில் பூ மலர்ந்துள்ள கிளைகள் எல்லாமே அப்படியிருக்கின்றன. அக்கிளைகள் எந்த மரக்கிளைகள் என்று எனக்குத் தெரியவில்லை... நிச்சயம் அவை ஒரு கனிமரக் கிளைகள்தான். இளஞ்சிவப்புப் பூக்கள் அவை.
மரியா மெல்லிய குரலில் பாடத் தொடங்குகிறார்கள். பின், குரல் சற்று உயருகிறது - ஆயினும் சத்தமாக இல்லை. அப்பாடலில் மரியாயின் குரல் அச்சிறிய அறையில் அதிர்கிறது. அதிலே அவர்களின் ஆன்மா அதிர்வதை உணர முடிகிறது. எபிரேய மொழியாதலால் எனக்கு அது விளங்கவில்லை. இடைக்கிடையே “ஜெகோவா!” என்ற வார்த்தை வருவதினால் அது ஒரு புனித பாடல் அல்லது சங்கீதமாயிருக்க வேண்டுமென்று கண்டுபிடிக்கிறேன். ஒரு வேளை மரியா தேவாலயத்தின் பாடல்களை நினைத்துக் கொள்வதாக இருக்கக்கூடும். அது ஒரு இனிய நினைவாக இருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ஏனென்றால் பஞ்சையும் தக்களியையும் கையில் பிடித்தபடியே கையை மடியில் வைத்து தலையை நிமிர்த்தி சுவரில் சாய்ந்து கொண்டுள்ள மரியாயின் முகம் அழகாகச் சிவந்து விழிகள் பின்னால் மறைகின்றன... என்ன இனிய நினைவோ! கண்களில் நீர் துளிர்த்து நிற்கிறது. கீழே பாயவில்லை. அது கண்களைப் பெரிதாக்கிக் காட்டுகிறது. அக்கண்கள் புன்னகை செய்கின்றன. அவைகள் ஏதோ நினைவைக் காண்கின்றன! அதனால் மரியா இந்தப் பூவுலகத்திற்கப்பால் கவரப்பட்டிருக்கிறார்கள். சிவந்த முகத்தின் பின்னால் தலையில் வாரிக் கட்டப்பட்டுள்ள முடியுடன் ஒரு அழகிய மலர் போல், அவர்களின் சாதாரண வெண்ணாடையிலிருந்து வெளிப்பட்டுக் காணப்படுகிறார்கள்.
பாடல் ஒரு ஜெபமாக மாறுகிறது: “மிக உந்நதரான சர்வேசுரா! உலகிற்கு சமாதானம் கொண்டு வர உமது ஊழியனை அனுப்ப இனியும் தாமதியாதேயும். உம்முடைய கிறீஸ்து வருவதற்குரிய அனுக்கிரகமான காலத்தையும், தூய வளமுள்ள கன்னியையும் எங்களுக்குத் தந்தருளும். தந்தையே! பரிசுத்த பிதாவே! இதற்காக உமது அடியாளாகிய என் வாழ்வை அர்ப்பணிக்க கிருபை புரியும். உமது ஒளியையும், உமது நீதியையும் இவ்வுலகில் கண்டு எங்கள் இரட்சண்யம் நிறைவேறி விட்டது என்று அறிந்த பிறகே நான் மரணமடையச் செய்யும். பரிசுத்தரான பிதாவே, தீர்க்கதரிசிகள் வாக்களித்தவரை பூமிக்கு அனுப்பும். என் உயிர் பிரியும் வேளையில், உமது இல்லம் எனக்குத் திறக்கப்படும்படியாக, அதன் கதவுகள் உம்மை நம்பின அனைவருக்கும் உம்முடைய கிறீஸ்துவால் திறக்கப்பட்டதாக இருக்கிறதாகையால், உமது அடியாளுக்கு உம் இரட்சகரை அனுப்பியருளும். வாரும் ஆண்டவரின் ஆவியானவரே! வாரும்! உம்மை எதிர்பார்த்திருக்கிற உம் விசுவாசிகளிடம் எழுந்து வாரும்! ஓ சமாதானத்தின் இளவரசே வருவீராக!...” அப்படியே தன்னை மறந்தவர்களாய் மரியா அமர்ந்திருக்கிறார்கள்...
அப்போது கதவின் திரை வேகமாய் அசைகிறது. பின்னாலிருந்து யாரோ அதைத் திறப்பது போல் அல்லது அதை இழுக்க அசைப்பதுபோல் தெரிகிறது. முத்துப் போன்ற வெண் ஒளியுடன் சுத்த வெள்ளியின் பிரகாசம் கலந்தது போன்ற ஒரு வெளிச்சம் அவ்வறையின் மெல்லிய மஞ்சள் சுவர்களைத் துலங்க வைக்கின்றது. துணிகளை ஒளிரச் செய்கிறது. அவர்களின் நிமிர்ந்த முகத்தை மேலும் ஞானத் தன்மையாய்க் காட்டுகிறது. அந்த ஒளியில், நிறைவேறப் போகிற திருநிகழ்ச்சி மீது திரை மூடப்பட்டவாறே இருக்க, அங்கே, அதிதூதரான சம்மனசு சாஷ்டாங்கமாகப் பணிந்து காணப்படுகிறார். இப்போது திரை அசையவில்லை. அது இரண்டு கதவு நிலைகளுக்குமிடையில் தடுப்புச் சுவர்போல் விறைப்பாய் நிற்கிறது.
சம்மனசானவர் எப்படியும் மனித வடிவத்தைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. ஆயினும் அது மனிதாதீத தோற்றமாயிருக்கிறது. இவ்வழகிய, பிரகாசிக்கிற உருவம் என்ன மாமிசத்தால் செய்யப்பட்டுள்ளது? கன்னிகையின் புலன்களுக்கு எட்டும்படி என்ன பொருளைக் கொண்டு கடவுள் இதைச் செய்தார்? அவர் மட்டுமே இத்தகைய பொருள்களைக் கொண்டிருக்கவும், இத்தனை சிறப்பாய்ப் பயன்படுத்தவும் கூடும். அந்த முகம், சரீரம், கண், வாய், முடி, கரங்கள் எல்லாம் நம்முடையவைகளைப் போலவே இருக்கின்றன. ஆனால் அவை நம் மக்குப் பிடித்த சடமாக இல்லை. மாமிசம், கண், முடி, உதடுகள் எல்லாம், அசைந்து புன்னகை செய்து பார்த்துப் பேசுகிற நிறங்களாகியுள்ள ஒளியே அது.
“வாழ்க மரியா! வரப்பிரசாதத்தினால் நிறைந்தவர்களே! வாழ்க!” விலையேறப் பெற்ற உலோகத் தட்டில் கொட்டப்படும் முத்துக்களின் இனிய இசையயாலியாக அக்குரல் ஒலிக்கிறது!
மரியா திடுக்கிட்டு தலையைத் தாழ்த்துகிறார்கள். தன்னிடமிருந்து ஏறக்குறைய ஒரு மீட்டர் தூரத்தில் ஒளிரும் அந்த உருவம் தன் கைகளை மார்பில் குறுக்காக சார்த்தியபடி முழங்காலிட்டு தன்னை அளவில்லாத வணக்கத்துடன் நோக்குவதைப் பார்த்து மரியா மேலும் அதிகமாக திடுக்கிடுகிறார்கள். சட்டென எழுந்து சுவரோடு ஒட்டி நிற்கிறார்கள். அவர்கள் முகம் மாறி மாறி வெளிறுகிறது, சிவக்கிறது. ஆச்சரியத்தையும் அச்சத்தையும் காட்டுகிறது. தன்னையறியாமலே தன் கைகளை தன் அகன்ற முழுக் கைச் சட்டையின் கைகளுக்குள் வைத்து நெஞ்சில் சார்த்தி அதை மறைக்கிறார்கள். குனிந்து தன் சரீரத்தை எவ்வளவு மறைக்கக் கூடுமோ அவ்வளவு மறைக்கிறார்கள். சாந்தமுள்ள அடக்கவொடுக்கமான தோற்றமாயிருக்கிறார்கள்.
“அஞ்சாதீர்! ஆண்டவர் உம்முடன் இருக்கின்றார்! எல்லா பெண்களுக்குள்ளும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்!” என்கிறார் அதிதூதர்.
மரியா இன்னும் பயந்தபடியே நிற்கிறார்கள். இவ்வசாதாரண ஜீவன் எங்கிருந்து வருகிறார்? கடவுளிடமிருந்து வரும் தூதரா அல்லது ஏமாற்றுகிறவனிடமிருந்தா?
“மரியா! அஞ்சாதீர்” என்று மீண்டும் கூறுகிறார் அதிதூதர். “நான் கபிரியேல். கடவுளின் தூதன். என் ஆண்டவர் உம்மிடம் என்னை அனுப்பியிருக்கிறார். பயப்படாதீர். ஏனென்றால் சர்வேசுரனுடைய கண்களில் கிருபை பெற்றிருக்கிறீர். நீர் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்று அவரை “சேசு” என அழைப்பீர். அவர் பெரியவராயிருப்பார்; உந்நதமானவருடைய குமாரன் எனப்படுவார். அவர் உள்ளபடியே அவ்வாறு இருப்பார். ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அவருடைய முன்னோரான தாவீதின் சிம்மாசனத்தைக் கொடுப்பார். யாக்கோபின் வீட்டை அவர் என்றென்றும் அரசாள்வார். அவருடைய அரசாட்சிக்கு முடிவிராது. கடவுளால் நேசிக்கப்படுகிற பரிசுத்த கன்னிகையே, அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட மகளே, அவருடைய சுதனின் தாயாக இருக்க அழைக்கப்பட்டவரே! எத்தகைய குமாரனைப் பெற்றெடுப்பீர் என்பதைக் கண்டுபிடியும்.”
“நான் மனுஷனை அறியாதிருக்கையில் இது எங்ஙனமாகும்? ஒரு வேளை ஆண்டவராகிய சர்வேசுரன் தம் அடிமையின் காணிக்கையை ஏற்க மாட்டாரோ? அவருடைய அன்பிற்காக நான் கன்னிகையாயிருக்க அவர் விரும்ப வில்லையோ?”
“மனித செயலால் நீர் மாதா ஆக மாட்டீர். நீரே நித்திய கன்னிகை, கடவுளின் பரிசுத்த கன்னியாயிருக்கிறீர். பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உந்நதரின் வல்லபம் உம்மைத் தன் நிழலால் சூழும். ஆதலால் உம்மிடம் பிறக்கும் குழந்தை பரிசுத்தர் என்றும், கடவுளின் குமாரன் என்றும் அழைக்கப்படுவார். நம் ஆண்டவராகிய கடவுள் எல்லாம் செய்ய வல்லவராயிருக்கிறார். மலடியான எலிசபெத் தன் முதிர் வயதில் ஒரு மகனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள். அந்தக் குழந்தை உம்முடைய குமாரனின் தீர்க்கதரிசியாயிருந்து அவருடைய வழிகளை ஆயத்தம் செய்வார். ஆண்டவராகிய கடவுள் எலிசபெத்தின் இகழ்ச்சியை நீக்கி விட்டார். அவளுடைய மகனின் பெயர் உம்முடைய திருக்குமாரனின் பெயருடன் இணைக்கப்படுவது போல் அவளுடைய ஞாபகம் உமது ஞாபகத்துடன் ஜனங்கள் மத்தியில் இருக்கும். உங்கள் இருவருக்கும் விசேஷமாய் உமக்கும் வந்துள்ள தேவ வரப்பிரசாதத்தினிமித்தம் தலைமுறைகளின் முடிவு வரை நீர் பாக்கியவதி என்று அழைக்கப்படுவீர். உம் வழியாக எல்லா மக்களுக்கும் வரப்பிரசாதம் வந்துள்ளது. எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம். அவளின் சுமை அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உமது மகிழ்ச்சியை அவள் கேள்விப்படும்போது இதைவிட இன்னும் அதிகமான மகிழ்ச்சிக்கு உயர்த்தப்படுவாள். வரப்பிரசாதத்தினால் நிறைந்துள்ள மரியாயே! ஆண்டவருக்கு அசாத்தியமானது எதுவுமில்லை. என் ஆண்டவரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்? எந்த நினைவும் உம்மை சலனப்படுத்த வேண்டாம். அவரை நீர் நம்பினால் அவர் உம்முடைய காரியங்களையெல்லாம் பாதுகாத்துக் கொள்வார். உலகமும் மோட்சமும் நித்திய பிதாவும் உம்முடைய வார்த்தைக்குக் காத்திருக்கிறார்கள்.”
அப்போது மரியம்மாள் தன் கரங்களைக் குறுக்காக தன் நெஞ்சில் சார்த்தி, தாழ்ந்து பணிந்து: “இதோ நான் ஆண்டவருடைய அடிமை. நீர் சொன்ன வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” என்கிறார்கள்.
மகிழ்ச்சியினால் தூதர் ஒளிருகிறார். ஆராதனை செய்து முழந்தாளிடுகிறார். காரணம், சம்மதித்துப் பணிகிற கன்னிகையின் மீது பரிசுத்த ஆவி இறங்குவதை நிச்சயம் அவர் காண்கிறார். பின் திரை அசையாமலே மறைகிறார். புனித திருநிகழ்ச்சியின்மேல் திரை மூடியே இருக்கிறது.