மருதமடு மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருதமடு மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மருதமடு மாதாவின் மன்றாட்டு மாலை.

ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்.

பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மருத மடுவிலே திருப்பதி கொண்டு தேவ அருள் பொழிகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கரடி, புலி வாழும் கானகத்தூடே அருளைத்தந்து கருணை மழை பொழிந்து வருகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நம்பி வந்தோருக்கு என்றும் தப்பாது அடைக்கலம் அருளிவருகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இத்திருப்பதிக்கு யாத்திரை செய்து இளைத்து, களைத்து வருகிறவர்களுக்குக் களைப்பாற்றிக் குளிர்ந்த நிழலைத்தந்து வருகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மருதமடு திருப்பதியை நினைக்க இன்பத்தையும், இப்பதியில் வசிக்க மதுரத்தையும்  அருளுகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வன்னிக்காட்டிலே பெற்ற மாதாவைப்போல் அன்போடு அடியார்க்கு இரங்கி வருகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிசாசுகளின் சோதனைகளால் துன்பமடைகிறவர்களுக்குத் தைரியம் தந்து புதுமை புரிகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செவிடருக்குக் கேள்வியையும், ஊமைகளுக்கு நாவன்மையையும், குருடருக்கு கண் பார்வையையும் கொடுத்து புதுமை புரிகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல வியாதி வருத்தங்களையும் நீக்கி சுகம்கொடுத்து வருகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அழுகிற பேர்களை அரவணைக்கிற அன்னையாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தஞ்சமென்று ஓடிவருகின்ற அடியார்கள் மேலே தயவாயிருந்து வருகின்ற செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சென்ம மாசணுகாக் கன்னிகையான செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக பூலோக அரசியான செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்களுக்கு மனம் நிறைந்த பாக்கியமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்களுக்குத் தேடக் கிடையாத செல்வமும், ஆறுதலும், தேறுதலும், காவலுமான செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்களுடைய ஆத்தும இரட்சணியத்திற்கு அடைமானமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நாங்கள் பரலோகமேறிச் செல்வதற்கேற்ற ஏணியாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்களை மோட்சத்துக்கு இழுத்தெடுப்பதற்குச் செபமாலை என்னும் திருவடத்தைப் பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு விட்டிருக்கும் செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்திலே அருட்செல்வம் பொழிகின்ற சிங்காரத் தோப்பாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் சகல நம்பிக்கையும், எங்களுக்கு சகல துணையுமான செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீர் எங்கள்மேல் கிருபைக்கண் சாத்தியருள வேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்களுடைய மன்றாட்டுக்கு இரங்க வேண்டுமென்று தாயே! உம்மை  மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்களுடைய அழுகைச் சத்தமானது உம்முடைய சந்நிதி மட்டும் எட்டுவதால் அதற்குச் செவி கொடுத்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம், தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நாங்கள் வறுமையால் வருந்துகின்றோம், பிணியிலே அழுந்துகின்றோம். எங்கள் மேலே இரங்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நாங்கள் உம்முடைய திருச் சந்நிதிக்குச் செய்த விண்ணப்பங்களை எல்லாம் தப்பாது அடையும்படி செய்ய வேண்டுமென்று தாயே!  உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நாங்கள் பாவ வழிகளைவிட்டுப் பரிசுத்தராய் உம்முடைய திருக்குமாரானுக்கு உகந்தவர்களாய் சீவிக்கும்படி செய்ய வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உம்முடைய திருப்பதிக்கு யாத்திரைசெய்து இளைத்துக் களைத்து வந்த யாத்திரிகர்கள் ஒவ்வொருவர் மேலும் மனமிரங்கி அவர்கள் கேட்கிற மன்றாட்டுக்களை எல்லாம் அனுக்கிரகிக்க வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உம்முடைய திருப்பதியிலே நோய் பிணி அணுகாது சகல யாத்திரிகர்களையும் சேமமாய்க் காத்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

இத்திருப்பதி சிறக்கவும் இதிலே சகல சாதிசனங்களும் ஆத்தும சரிர சகாயங்களை அடைந்து சந்தோசிக்கவும் செய்ய வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உம்முடைய இன்ப சந்நிதானத்தை தேடிவந்த நமது பிறசமய சகோதரர் தங்கள் மன்றாட்டுக்களை அடைந்து தேவ அருளைப் பெறவேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பஞ்சம், படை, கொள்ளைநோய், பெருவாரிக் காச்சல் வராதபடி காத்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நல்லமழை பெய்யவும், நாடு செழிக்கவும் கிருபை செய்ய வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

சத்தியவேதம் தளைத்தோங்கி வளரக்கிருபை செய்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம், தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் பரிசுத்த பிதாவான பாப்பரசரை ஆசீர்வதித்து அவரைச் சத்திராதிகள் கையிலிருந்து காத்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் மேற்றாணியாரை ஆசீர்வதித்து அவரைக் காப்பாற்றி அவரின் சுகிர்த கருத்துக்கள் நிறைவேறத் தயைசெய்ய வேண்டுமென்று தாயே!  உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உமது ஆதரவில் இருக்கும் எங்கள் குருமாரை ஆசீர்வதித்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் சந்நியாச கன்னியாஸ்திரிமாரின் சபைகள், தொண்டர் சபைகள் வேத வைராக்கியத்தினால் நிறைந்து விளங்கத் தயைசெய்ய வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் உத்தம கத்தோலிக்க ஆசிரியர்கள், ஆசிரியைகளாக விளங்கக் கிருபை செய்ய வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்கள் பிள்ளைகளின் ஞான அறிவு வளரவும் அதை அவர்களுக்கு ஊட்டும் தொண்டர்கள் அதிகரிக்கவும் வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருச்சபையின் ஐக்கிய இயக்கத்தை ஆசீர்வதித்து சகல சாதி சனங்களிடையே உமது திருக்குமாரன் விரும்பிய ஒற்றுமையைத் தந்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உம்மிடம் மன்றாடுகிற எங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்தருள வேண்டும் என்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எங்களையும், எங்கள் குடும்பங்களையும், எங்களுடைய பொருள், பண்டங்களையும், எங்களுடைய தொழில் துறைகளையும் ஆசீர்வதித்தருள வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

இங்குள்ள யாத்திரிகர்கள் மேலே உம்முடைய அடைக்கலமும், அருளும், ஆதரவும் என்றைக்கும் நீங்காது நிலைத்திருக்கும்படி செய்ய வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம். தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நாங்கள் சத்திய வேதத்திலே உத்தமராய் சீவித்து நன்மரணமடைந்து மோட்ச இராட்சியத்தில் சேர்ந்து உம்முடைய திருக்குமாரனுடைய சந்நிதியிலே நித்தியமாய் களிகூர்ந்திருக்கும்படி கருணைசெய்ய வேண்டுமென்று தாயே! உம்மை மன்றாடுகிறோம்.

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே

மு- யேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக
து- பரிசுத்த செபமாலை மாதாவே!  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக;
சருவேசுரா சுவாமி! பரிசுத்த செபமாலை மாதாவை வணங்கி அவருடைய சலுகையை இரந்து சாஸ்டாங்கமாக விழுந்து கிடக்கும் யாத்திரிகர்களாகிய அடியார்கள் மேலே கிருபை வைத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான யேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும்.

ஆமென்.

மருதமடு மாதாவிற்குச் செபம்.

மருதமடுத் திருப்பதியிலே பேருதவி புரிகின்ற பரிசுத்த செபமாலை மாதாவே, பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ, எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோசமும், எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களைத் தாய் பாராட்டுவாளோ? உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியர்கட்கு உதவியாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர்; இரங்காவிட்டால் எங்களுக்கு வேறார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறார் உதவுவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறார் நினைப்பார்? தஞ்சமென்று ஓடிவரும் அடியார் மேலே தயவாயிரும் தாயே! தயைக்கடலே! தவித்தவர்களுக்கு தடாகமே! தனித்தவர்களுக்கு தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம்! காடுகளைக் கடந்து ஓடிவந்தோம்! துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளால் வாடிவந்தோம்! எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரை பலனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படியாகுமோ அம்மா? அடியோர்க்கு அன்பான அம்மா, செபமாலை அம்மா எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும்.

ஆமென்.