சகாய மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சகாய மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சகாயமாதா ஜெபம்

நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே!  மாசணுகாத் தாயே! உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம்.  கொள்ளை நோய், மின்னல், இடி, நெருப்பு, புயல்காற்றிலிருந்தும், விமானத் தாக்குதல், விரோதிகளின் பகை, குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும்.  மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியே போகும்போதும், உள்ளே வரும்போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்திலிருந்து அவர்களை இரட்சியும்.  எங்களைச் சகல பாவங்களில் நின்றும் ஆபத்துக்களில் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாக ஊழியம் செய்து உம்மோடுகூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனையை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே.

ஆமென்.

சதா சகாயமாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர் திருநாமம் உடைத்தான சதா சகாய மாதாவே, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக் கும் ஆபத்தான வேளையில் அதனை ஜெயங் கொள்ளும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

எங்களுடைய முழுமனதுடன் சேசுவை நேசிப்பதற்கு, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக் கியத்துக்கு உள்ளாவேனாகில் அதிலிருந்து உடனே எழுந்திருக்கும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

பசாசின் ஊழியத்தில் ஈடுபடும்படியான தகாத வளையில் நான் சிக்கிக் கொள்ளுவேனாகில் அத்தளையைத் தகர்த்தெறியும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் விரைவில் ஞான உஷ்ணம் கொள்ளும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங் களைப் பெறுவதிலும், கிறீஸ்தவ பக்திக்குரிய கடமைகளை பக்தியாய் செய்யும்படி, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

என் சீவியத்தில் வரும் துன்ப சோதனை வேளைகளில், எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

என்னுடைய சுபாவ துர்ச்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், புண்ணிய வாழ்க்கையில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும் படி நான் செய்யும் முயற்சிகளிலும், எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய் கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என் பலம் குறைந்து போகும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

என் மரண வேளையில் என் ஆத்துமம் என் சரீரத்தைவிட்டுப் பிரிய போராடும்போது, எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, பூஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ஓ! என் தேவ தாயாரே, என் கடைசிநாள் பரியந்தம், என் கடைசி மூச்சு பரியந்தம், எனக்கு சகாயமாக வாரும் சகாய மாதாவே.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி!  மனுக்குலத்திற்கு துணை புரிய ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாயை உமது ஏக குமாரனுக்குத் தாயாராக்கத் திருவுளமானீரே! பரிசுத்த கன்னிமரியாயின் வேண்டுதலால் அடியோர்களின் பாவநோய் தீர்ந்து, பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சிநேகித்து சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக எங்களுக்குக் கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். 

ஆமென்.

சதா சகாய மாதா நவநாள் ஜெபம்

சதா சகாய மாதாவே, உம்மிடத்தில் சரணடைந்து நம்பிக்கையுடன் உமது பாதத்தண்டையிலிருக்கும் நீசப் பாவியான என்னை உற்று நோக்கியருளும்.  இரக்கத்தின் மாதாவே! என் பேரில் இரக்கமாயிரும்.  பாவிகளின் அடைக்கலமும் நம்பிக்கையுமென எல்லோராலும் அழைக் கப்படுகிற நீரே என் அடைக்கலமும் நம்பிக்கையுமாயிரும். சேசுவின் நேசத்துக்காக எனக்கு சகாயம் புரிந்தருளும். சதாகாலமும் உமது பிள்ளையாகப் பாராட்டி உமக்குக் கையளிக்கும் இந்த நீசப் பாவியாகிய என்னிடம்  உமது கரங் களை நீட்டியருளும். உம்மிலே நம்பிக்கை வைப் பதுதான் நித்திய ஈடேற்றத்தின் பிணை என்று நான் எண்ணுகிறேன்.  நான் உம்மில் வைக்கும் இந்த நம்பிக்கையைச் சர்வேசுரன் தமது இரக்கத் தால் எனக்குத் தந்ததற்காக நான் அவரை வாழ்த் தித் துதிக்கிறேன். உம்மிடம் என்னை கையளிக் காததால் இவ்வளவு காலமும் நான் அநேக தடவை களில் நீசத்தனமாய்ப் பாவச் சோதனைகளில் விழுந்திருக்கிறேன்.  ஆனால் உமது உதவியால் நான் வெற்றியடைவேனென்று எனக்குத் தெரியும்.  என்னை உமக்கு நான் கையளித்தால், நீர் எனக்கு உதவி செய்வீர் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் பாவத்தில் விழப் போகும் தறுவாயில் உமது உதவியைக் கேளாமல் விட்டு விடுவேனோ என்றும், அதனால் என் ஆத்துமத்தை இழந்து போக நேரிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.

ஆகையால் இந்த வரப்பிரசாதத்தை நீர் எனக்குப் பெற்றுத்தரும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.  பசாசு என்னுடன் போர்   புரியும் போது நான் உம்மிடம் சரணடையவும்,  “ஓ மரியாயே, எனக்கு உதவி செய்யும். சதா சகாய மாதாவே, எனது ஆத்துமத்தை நான் இழந்து போக விடாதேயும்” என்று உம்மை நோக்கி வேண்டிக்கொள்ள கிருபை புரிந்தருளும். 

ஆமென். 

(அருள் நிறை மந்திரம்  9 முறை)

பரிசுத்த மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்கு உமது சகாயம் தந்தருளும்.  மனத்திடம் இல்லாத வர்களுக்கு உதவியாயிரும். அழுகிறவர்களை மகிழச் செய்தருளும். மனுக்குலத்துக்காக மன்றாடி யருளும். குருக்கள், ஆயர்களுக்காகப் பரிந்து பேசி யருளும்.  கடவுளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்த சந்நியாசிகள் கன்னியர்களுக்காகவும் மனுப் பேசியருளும்.  உமது சதா சகாயத்தை வேண்டு வோர் உமது உதவியை உணரச் செய்தருளும்.

ஓ மாதாவே!  நீர் எங்களுக்கு அடைக்கல மாயிருக்கிறீர். குறைகளிலும், துன்பங்களிலும் உதவி யாகவும் இருக்கிறீர்.

பிரார்த்திக்கக்கடவோம்

ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவே! உமது மாதாவாகிய கன்னிமரியாயை எப்பொழுதும் உதவி செய்யத் தயாராயிருக்கும் தாயாக எங்க ளுக்குத் தந்தருளச் சித்தமானீரே.  அவருடைய அற்புதமான சாயலை வணங்கி அன்னைக்குரிய உதவியை மிகவும் ஆவலுடன் வேண்டிநிற்கும் நாங்கள் உம்முடைய இரட்சண்யத்தின் பலனை சதாகாலமும் அனுபவிக்க தகுதியுள்ளவர்களா யிருக்கக் கிருபை செய்யும்படி தேவரீரை வேண்டிக் கொள்கிறோம். சதாகாலமும் சீவியரு மாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற சர்வேசுரா. 

ஆமென்.

பரிசுத்த பாப்பரசருக்காக வேண்டிக் கொள்வோம். ஒரு பர. அருள். திரி.

சதா சகாய மாதாவை நோக்கி ஜெபம்

சதா சகாய மாதாவே, உமது பிள்ளைகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அதிபரிசுத்த கன்னிமரியாயின் அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப் படுவதாக. ஒரு பர. அரு. திரி.

(இச்செபங்களை 3 முறை சொல்லவும்.)

உமது உற்பவத்தில் மாசில்லாதவளா யிருந்த கன்னிமரியாயே, உமது திருக்குமாரனின் பரம பிதாவிடம் எங்களுக்காக பரிந்து பேசியருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  தேவரீர் மாசில்லாத கன்னிகையின் திரு உதரத்திலே உம்முடைய திருச்சுதனுக்குத் தகுதியான வாசஸ்தலம் ஒன்றை ஆயத்தப்படுத்தியருளினீரே.  எங்கள் ஆண்டவ ருடைய திருமரணத்தை முன்னிட்டு அவர் திருத் தாயாரின் வழியாக எங்களைச் சகல பாவக் கறையில் நின்று காத்து தேவரீரிடத்தில் வந்து சேரத்  தயை பண்ணியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரான சேசு கிறீஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென்.

சதா சகாயமாதா பிரார்த்தனை ஜெபம்.

அம்மா! தாயே! தயாபரியே! அமல உற்பவமே! எங்கள் அன்பான சதா சகாய மாதாவே! இதோ உமது பாத சந்நிதானம் பணிந்து நிற்கும் பாவிகளைத் திருக்கண்ணோக்கிப் பாரும்.

பஞ்சத்தால் வாடி வந்தோம்; பசிப்பிணியால் ஓடி வந்தோம்; படுந்துயரம் தாங்காமல் பதறிவந்தோம்; தாயே எங்களுக்கு சகாயம் புரியும் சகாரி நீயல்லவா? உபகாரம் பண்ணும் உத்தமி நீயல்லவோ? உம்மையல்லாது எங்களுக்கு உதவி புரிவார் யாருண்டு? துணை செய்வார் யாருண்டு? இரங்குவார் யாருண்டு? ஏந்தி அணைப்பார் யாருண்டு?

அம்மா! தாயே! ஆண்டவளே! உம்மையல்லோ உலகம் சகாயத்தின் நாயகி என்று அழைக்கிறது; இரக்கத்தின் இராக்கினி என்று கூப்பிடுகிறது; இதனாலல்லோ உமது சந்நிதானம் கோடானு கோடி பக்தர்களால் நிரம்பி வழிகிறது. லட்சாதி லட்சம் பிற சமதிகளால் நிறைகிறது. நாளாந்தம் ஆயிரமாயிரம் புதுமைகளால் பொலிந்து விளங்குகிறது.

இதையறிந்தே பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்மேல் நம்பிக்கை வைத்து உமது சந்நிதானத்தில் சரணடைந்து நிற்கிறோம். உமது பாதார விந்தத்தைக் கட்டிப்பிடித்துக் கண்ணீரால் கழுவுகிறோம். இருகை நீட்டி இரந்து கேட்கிறோம். விண்ணப்பம் பண்ணி விடையை எதிர் பார்க்கிறோம். இந்த உலகத்தில் உம்மையல்லாது எங்களை ஆதரிப்பார் யாருமில்லை.

இந்நேரம் எண்கள் பேரில் மனமிரங்கி ஒருமுறையாவது உமது கருணையின் வழியில் கடைக்கண் பார்வையை எங்கள் பக்கம் திருப்பியருளும். மதுரவாய் திறந்து மறுமொழி சொல்லியருளும். திருக்கரத்தால் வெகுமதியை தந்தருளும்.

இதோ உமது படத்தினருகே எங்களுடன் கூடியிருந்து உமது சகாயத்தை கேட்கும் பிற சமயவாதிகள் பேரிலும் இரக்கமாயிரும். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு வரத்தையும் இல்லை என்று சொல்லாமல் ஈந்தருளும். அவர்களும் உமது நேசப் பிள்ளைகள் என்பதை மறவாதேயும்.

விசேஷமாய் அவர்கள் மனந்திரும்பப் பண்ணியரும். கடைசியாக ஆண்டவளே எங்கள் பாப்பனவரையும் ஞான மேய்ப்பர்களையும் எங்கள் நாட்டையும் எங்கள் தொழில் துறைகளையும் எங்களுக்குள்ள யாவற்றையும் உமக்கு பாத காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம். அதை நீர் ஏற்று ஆசீர்வதித்தருளும்.

செபிப்போமாக

சர்வேசுரா சுவாமி பரிசுத்த சதா சகாய மாதாவை வணங்கி அவருடைய சலுகையை இரந்து அழுது மன்றாடிக் கிடக்கும் அடியர்கள் மேலே கிருபை வைத்தருளவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.

சகாய மாதாவுக்கு சத்தியப்பிரமாணம்.

அர்ச்சிஷ்ட மரியாயே, மகா சக்தியுள்ள கன்னிகையே, இரக்கத்தின் அன்னையே, விண்ணக அரசியே, பாவிகளுக்கு அடைக்கலமே உம்முடைய மாசற்ற திரு இருதயத்திற்கு எங்களை முழுதும் அர்ப்பணிக்கிறோம்.

எங்கள் வாழ்வையும், நாங்கள் நேசிக்கும் அனைத்தையும், எங்கள் உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் எங்கள் வீட்டையும், நாட்டையும் எங்கள் குடும்பங்களையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.

எங்களையும் எங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உமக்கு உகந்ததாக்கவும், உமது உன்னதமான தாயன்பில் அவை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.  இந்த உடன்படிக்கை நீடித்திருக்க எங்கள் ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் போது செய்துகொண்ட உறுதி மொழிகளை நாங்கள் இன்று நினைத்து புதுப்பித்துக் கொள்கிறோம்.

எங்கள் திருத்தந்தை மற்றும் பேராயர்களின் சீறிய வழி நடத்துதலின் படி உண்மை கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழவும்,எங்களது பரிசுத்தமான விசுவாசத்தை உண்மையாகவும் தைரியமாகவும் எப்பொழுதும் அறிக்கையிடவும் உறுதி கூறுகிறோம்.

கடவுளின் கட்டளைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் குறிப்பாக கடவுளின் திருநாட்களை பரிசுத்தமாக அனுசரிக்கவும் உறுதி கூறுகிறோம்.

கத்தோலிக்க மதக் கோட்பாடுகளின் படி மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவும் , எங்கள் வாழ்வில் அங்கமாக கலந்து விட்ட பரிசுத்த திவ்விய நற்கருணையை மகிமைப்படுத்தவும் உறுதி கூறுகிறோம்.

ஓ மகிமை நிறைந்த அன்னையே, மாந்தர்களின் அன்னையே, உம்முடைய இறைத் திட்டங்களில் எங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும், உம் மாசில்லா திரு இருதயத்தின் உன்னதமான அன்பை சுவீகரித்துக் கொள்ளவும்,  எங்கள் இதயங்களிலும் எங்கள் நாடு மற்றும் உலக மாந்தர் அனைவரின் இதயங்களிலும் உமது திருமகனின் திரு இருதயத்தின் அரசை விண்ணக வாசிகள் ஏற்றுக் கொண்டது போல் மண்ணகத்தில் நாங்களும் ஏற்று வாழவும் உறுதி கூறுகிறோம்.

ஆமென்.

மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம்.

எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமைமிக்க அவரது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.

அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே!
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே!
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!
அர்ச்சியசிஷ்ட மரியாயே!
சர்வேசுரனுடைய மாதாவே!
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக,
இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக.
ஓ! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே! உமது தாயாகிய மரியம்மாளை, அவருடைய அற்புதச் சாயலை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவிசெய்ய தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! ஆவருடைய தாய்க்குரிய சலுகைகளை தேடுகிற நாங்கள் உமது இரட்சண்யத்தின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் சீவித்து ஆட்சி புரியும் சர்வேசுரா.

ஆமென்.

இடைவிடா சகாயத்தாய்க்கு நன்றியறிதல்.

நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும். எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

திருச்சபையின் தேவதிரவிய அனுமானங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும் எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத்தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோமாக.

( சிறிது நேரம் மௌன நன்றியறிதல்)

நோயாளிகளை ஆசீர்வதித்தல்.

செபிப்போமாக.
ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து, உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் பெயராலே!
ஆமென்.

ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.

ஆமென்.

இடைவிடா சகாயத்தாயிடம் குழுவினர் விசுவாசம்.

ஓ! இடைவிடா சகாயத்தாயே, நீர் அருள் நிறைந்தவள். தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே! பாவிகளின் நம்பிக்கை நீரே! அன்புள்ள அன்னையே, உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான சேசுக்கிறீஸ்துநாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது, நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம்.

சோதனை வேளையில் உமது சகாயத்தைத் தேட அசட்டை செய்வதால் எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ இடைவிடா சகாயத்தாயே, எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்துநாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்.

ஆமென்.

இடைவிடா சகாயத்தாயிடம் மன்றாட்டு.

எங்கள் பாப்பரசருக்கும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத்தலைவர்கள், சமூகத்தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்தருளும். எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்த எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் பரிசுத்த ஆவி அவர்களுக்கு வழிகாட்ட எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல்நலத்தில் நீடிக்கவும் நோயாளிகள் தங்கள் உடல்நலத்தை திரும்ப அடையவும். எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும் எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

நமது இடைவிடா சகாயத்தாயிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக்கூறுவோம்.

(சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)

இடைவிடா சகாயத்தாய் நவநாள் வேண்டுதல்.

ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கிணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே! எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும். எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக்கொண்டு, எங்கள் விண்ணப்பங்களை கேட்டு அருள்புரிவீராக.

ஓ! இடைவிடாத சகாயத்தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம். வாழ்வோரின் பாதுகாவலும், மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே! உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும், மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக. உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும். நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம். நீரே எங்கள் இடைவிடா சகாயத்தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.

(நமது இகபரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக.)

ஓ! இடைவிடா சகாயத்தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் உம்முன் முழந்தாளிடுகிறோம். எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம். துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே, எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் தேவைகளை நிறைவேற்றும். எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும். ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால் நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத்தாயே, இந்த வரங்களையெல்லாம் எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல, ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.

ஆமென்.

சதா சகாயமாதாவுக்கு வல்லமையுள்ள நவநாள் செபம்.

இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும்.
(மும்முறை)

மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பிக்கையுமாக இருப்பவள் நீரே!

இன்று நாங்கள் அனைவரும் உம்மிடம் வருகிறோம். நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இடைவிடா சகாயத் தாயே உம்மை நேசிக்கிறோம். எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும் அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.

இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

சோதனைகளை வெல்லும் பலத்தையும், இயேசுக்கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும், நல்ல மரணத்தையும் அடைந்து தாரும். உம்மோடும் உமது திருக்குமாரனோடும் என்றென்றும் வாழ அருள் புரியும்.

இடைவிடா சகாயத் தாயே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.