அர்ச். சந்தியாகப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். சந்தியாகப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். சந்தியாகப்பர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ மாதாவால் சிநேகிக்கப்பட்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கலிலேயா நாட்டைச் சேர்ந்த செபதேயு என்பவருக்கு அருமை மகனான சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி உம்மை அழைக்கும் போது தந்தையையும், வலைகளையும் விட்டு மனமுவந்து அவரைப் பின்சென்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவராலே உம்முடைய சகோதரனோடு இடியின் மக்களென்று அழைக்கப்பட வரம் பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி உருமாறினபோதும், நூற்றுவர் தலைவனின் இறந்த மகளை உயிர்ப்பிக் கும்போதும் அவர் அருகே இருந்த சந்தியாகப்பரேஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி பூங்காவனத்திற்குப் போகும்போது, அவரோடு போகும் பேறுபெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதர் சுவாமி மோட்சம் சென்ற பின், அவரைத் தவிர வேறு தெய்வமில்லை என்று யூதேயா தேசத்திலும், சமாரியா தேசத்திலும் போதித்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஸ்பெயின் நாட்டில் பலருக்கு சத்திய வேதத்தை போதித்து, மாயவித்தைக்காரனாகிய இரமோசன் என்பவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்து நாதர் சுவாமியுடைய வேதத்தைத் திடனோடு போதித்ததை கேட்ட எரோது அகரிப்பா என்பவன் உமக்கு மரணத் தீர்ப்பிட்டபோது மனமகிழ்ச்சி அடைந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை கொலைக் களத்துக்கு கூட்டிக் கொண்டு போகும்போது, உம்மோடு கூட வந்தவன் நீர் வேத சாட்சியாவதற்கு உமக்கிருந்த அகமகிழ்ச்சியைக் கண்டு, தானும் கிறீஸ்தவன் என்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இவன் கொலைக் களத்திற்குப் போய் சேர்ந்த உடனே, உம்மைக் கொலைக்களத்திற்கு சேவகனாக கூட்டிக்கொண்டு வந்ததை நினைத்து உம்மிடம் பொறுத்தல் கேட்டபோது, அவனைத் தழுவி முத்தமிட்டு உனக்கு சமாதானம் உண்டாகுக என்று வாழ்த்திய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நூறு சம்மனசுக்கள் உம்மை சூழ்ந்து வர இத்தாலி நாட்டிற்கு போய், திருச்சபையைப் போதித்து அவ்விடத்தில் சேசுநாதர் சுவாமி யுடைய வேதம்போதித்துக் கொண்டே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அற்புதமான வகையாய் எபேசு நகரில் தேவ அன்னையைக் கண்டு, அவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கிய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது தேவ அன்னை உம்முடைய கரத்தைப் பிடித்துத் தூக்கவும், அனேக வரங்களை அந்த இராக்கினியிடத்தில் பெற்றுக் கொள்ளும் பேறு பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது நீர் ஜெருசலேம் பட்டணத்தில் வேத சாட்சியாகப் போகிறீரென்று தேவ அன்னை சொல்லக் கேட்டு அத்தருணத்தில், எனக்கு உதவியாக வரவேண்டுமென்று அவளைக் கேட்டுக் கொண்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெருசலேம் பட்டணத்திலே மகா தைரியத்தோடு வேதத்தைப் போதிக்கும்போது, திருச்சபையின் எதிரிகளாலே பிடிபட்டு, தேவ அன்னை கொடுத்த வாக்கை நினைத்து, அவளை நோக்கி மன்றாடிய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்நேரத்தில் தேவ அன்னை அநேக சம்மனசுக்களால் புடைசூழ வருவதை கண்டு அக்களித்து, துன்புற்றோருக்குத் தேற்றரவே என அகமகிழ்ந்து உரத்த சத்தமாய் கூவின சந்தியாகப்பரே  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய தலையை வெட்டும்போது, தேவ அன்னை உன் ஆன்மாவை கையில் ஏந்தி சேசுநாதருக்கு ஒப்புக் கொடுக்க வரம்பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய திருச்சரீரம் கொம்போஸ்தெல்லா என்கிற பட்டணத்திற்குக் கொண்டு போகப் பட்டபோது, அவ்விடத்தில் அற்புதங்கள் பல நடக்கவே மக்கள் பொருத்தனை செய்து வணங்கப் பெற்ற சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் மோட்சம் சென்றபின் ஸ்பெயின் நாட்டின் கிறீஸ்தவர்கள்பேரில் பகைவர் படை எடுக்கும்போது, அவர்கள் உம்மைப் பார்த்து வேண்டுதல் செய்ய, பயங்கரத் தோற்றமுள்ள வெள்ளைக் குதிரை மீதேறி வந்து, பகைவர் படையை முறியடித்துத் துரத்திய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக. அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் ஆண்டவரான சேசுக் கிறீஸ்துவே! அப்போஸ்தலரான அர்ச்சியசிஷ்ட சந்தியாகப்பருக்கு உன்னதமான வரங்களைத் தந்து, ஜெருசலேம் பட்டணத்திலும் இஸ்பானியா தேசத்திலும், இத்தாலியா தேசத்திலும் அவரால் அநேக புதுமைகளைச் செய்து ஏராளமான மக்களைத் சத்திய வேதத்தில் உட்படுத்தினீரே, அவரைப் போற்றித் துதிக்கிற எங்களுக்கும் வாழ்வின் துன்பங்கள் எல்லாவற்றையும் வென்று இவ்வுலகப் பற்றுகள் நீங்கி மோட்ச முடிபெற அருள்புரிவீராக. 

ஆமென். 

அர்ச். சந்தியாகப்பர் நவநாள் ஜெபம்

தேவ அன்னையினால் மிகவும் நேசிக்கப்பட்டவரும் சேசுவின் சீடருமான அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே திருச்சபையின் எதிரிகளால் துன்புறுத்தப்பெற்ற ஸ்பெயின் நாட்டு கிறீஸ்தவர்களுக்கு இரங்கி வெள்ளைக் குதிரை மேல் ஏறி எதிரிகள் படையை முறியடித்த புனித அப்போஸ்தலரே! அறநெறியை விரும்பாதவர்களாலும், பிசாசுகளினாலும் வீண், பொய், மாயைகளினாலும் நான் படும் துயரம் எவ்வளவோ பெரிதாகியிருக்கிறது. நான் விரும்புகின்ற நன்மையை அல்ல, நான் விரும்பாத தீமையையே செய்ய ஏவப்பட்டு பரிதவிக்கிறேன்.  நெருக்கப்படுகிற நாளில் என்னைக் கூப்பிடு  அப்போது நான் உன்னை விடுவிப்பேன் என்ற வேத வாக்கியத்தை நினையாமல் உருக்கமாக ஜெபம்செய்ய மறந்து என் ஆபத்துக்களில் மிகவும் பரிதவிக்கிறேன். கேளுங்கள் கொடுக்கப் படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வேதவாக்கை  துன்ப வேளையில் மறந்து போகிறேன். நீர் என்மீது இரக்கம்வைத்து எனக்காக கடவுளை மன்றாடி என் ஆபத்துவேளையில் நான் வெற்றி பெற எனக்குத் துணையாகவாரும். நான் பலவீனன் நான் செய்த பாவங்களே என்னை நெருக்கத் தொடங்குகின்றன. எனக்கு நேரிட்டிருக்கும் துன்பங்களாகிய சிலுவையை  நான் சுமக்க வேண்டும் என்பது அவர் சித்தமானால் அவர் திருச்சித்தம் நிறைவேறட்டும். ஆபத்துக்களில் உதவுகிற அர்ச்சிஷ்ட சந்தியாகப்பரே எங்கள் அன்புக் காவலரே, நான் என் பலவீனங்களில் தடுமாறி விழாமல் காத்தருளும்.

இரக்கம் நிறைந்த அப்போஸ்தலரே துன்ப வேளையில் உதவி செய்யும் அற்புதரே! என்னைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களிலும், ஆபத்துக்களிலும் நான் அலைக்கழிக்கப்பட்டு, கலங்காதபடி என்னைத்தேற்றி அரவணைத்தருளும் அன்று எதிரியின் படையை முறியடிக்க உம்மை நம்பி அபயமிட்ட ஸ்பெயின் நாட்டவருக்கு உதவியாய் வந்து அவர்களுக்கு வெற்றி அளித்தது போல், இருகரம்கூப்பி உம்மைநோக்கி அபயமிடும் எங்களுக்கு இவ்வேளையில் உதவியாய் வந்து, என்னைச் சூழ்ந்து நிற்கும் ஆன்ம எதிரிகளை முறியடித்துத் துரத்தி தேவ உதவியால் நான் முழுவெற்றி அடைய எனக்காக கடவுளை மன்றாடும்!

ஆண்டவராகிய சர்வேசுரன் உமது மன்றாட்டினால் என் வேண்டுதலைக் கேட்டருள்வார். நீர் கூவி அழைத்த தேவ அன்னை விரைந்து வந்து உமக்கு உதவி செய்தது போல், நீரும் என் மரண நேரத்தில் வந்து எனக்கு உதவி செய்து நான் நல்ல மரணம் அடைந்து, முடிவில்லாப் மோட்ச பாக்கியத்தைப் பெற சர்வேசுரனை நோக்கி மன்றாடும். 

ஆமென்