உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஏன் நீண்டகால வேதனை?

காரணங்கள் கண்டுபிடிப்பது கடினமன்று.

1. சிறிய தவறாக நமக்குத் தெரிவது, பரிசுத்த தேவனுக்கு முன் உண்மையில் மிகப் பெரிய குற்றமாக உள்ளது. இது புனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக எவ்வாறு கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பதன் மூலம் நமக்குப் புலப்படும்.

நாம் பலவீனர்கள், பாவத்திற்கு வற்புறுத்தப்பட்டிருக்கலாம். உண்மைதான். ஆனால் பலவீனத்திலிருந்து மீள் கடவுள் நமக்கு அபரிதமான வரங்களைப் பொழிந்துள்ளார். மேலும் நமது பாவங்களின் விளைவுகளைக் காண போதுமான அறிவினையும், பலவீனத்தை வெல்வதற்கு தேவையான உத்திகளையும் வழங்கியுள்ளார். இருந்தும் தொடர்ந்து பலவீனர்களாகவே இருந்தால் முற்றிலும் அது நமது பொறுப்பே. நாம் கடவுள் தரும் பலத்தையும் வரங்களையும் பயன்படுத்துவதில்லை நாம் போதுமான அளவு செபிப்பதில்லை. கடவுள் தரும் தேவ திரவிய அனுமானங்களை முறையாக பெற்று பயனடைவதில்லை.

2. பிரபலமான மறைநூல் வல்லுநர் ஒருவர் இவ்வாறு தெளிவுற கூறுகிறார்:

ஒரு சாவான பாவத்திற்கு தண்டனையாக ஆன்மாக்கள் நித்தியமாக நரகத்திற்கு தள்ளப்படுமானால், தெரிந்தே கணக்கற்ற அற்ப பாவங்கள் புரிந்த ஆன்மாக்கள், நீண்ட ஆண்டு உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனை அனுபவிப்பது வியப்புக்குரியதன்று.

பல ஆன்மாக்கள் சாவான பாவமும் செய்திருக்கலாம். அதற்காக சிறிதளவே வருத்தப்பட்டு, சிறிது பாவப்பரிகாரம் செய்திருக்கலாம். அல்லது அதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம். பாவமன்னிப்பின் மூலம் குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இந்தப் பாவங்களுக்கு செலுத்த வேண்டிய அநித்திய அபராதக்கடன் தீராததால், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை அனுபவித்தே தீர வேண்டும்.

'மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்." என நமதாண்டவர் கூறுகிறார். மேலும் "கடைசி கணக்கை செலுத்தும் வரை சிறையிலிருந்து செல்ல இயலாது" எனவும் தெரிவிக்கிறார்.

புனிதர்கள் குறைந்த அளவில் சிறிய பாவங்களே புரிந்திருந்தாலும், அதற்காக அதிக அளவில் வருத்தப்பட்டு கடுமையான தவமுயற்சிகள் மேற்கொண்டனர். நாமோ கடுமையான , பல பாவங்கள் புரிந்தாலும் அதற்காக சிறிய அளவிலே வருத்தப்பட்டு, தவ முயற்சிகளும் சிறிதே செய்கின்றோம்; அல்லது அதுவும் செய்வதில்லை.

அற்ப பாவங்கள் கத்தோலிக்கர்கள் அதிக அளவில் புரியும் அற்ப பாவங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அது மிகக் கடினம்.

அ) சுய அன்பு, சுயநலம், எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் பலவிதமான மோக பாவங்கள், சிந்தனை, சொல், செயல்களில் பிறர் நலம் பேணாமை, சோம்பல், தற்பெருமை, பொறாமை, எரிச்சல் ஆகியவைகளால் இழைக்கும் பாவங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

ஆ) நாம் புரியும் பல பாவங்கள் நம் கவனத்தில்கூட இருப்பதில்லை . பல ஆயிரம் மடங்கு அன்பு செலுத்த கடமைப்பட்டுள்ள நம் கடவுளுக்கு மிகச் சிறிய அளவிலேயே அன்பை செலுத்துகிறோம். குறைந்தபட்ச நன்றியுணர்வு கூட இன்றி அவரை பொருட்படுத்தாமலேயே இருந்து விடுகிறோம்.

இ) நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் மரித்தார். இதற்காக நாம் செலுத்த வேண்டிய அளவு நன்றியினை அவருக்கு செலுத்தியுள்ளோமா? நமக்கு உதவி செய்யும் ஆவலோடு இரவும் பகலுமாக பலிபீடத்தில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எவ்வளவு அரிதாக அவரிடம் நாம் செல்கின்றோம்! திவ்விய நற்கருணை மூலமாக நம் உள்ளத்தில் எழுந்தருளிவர ஆசையோடு இருக்கிறார். ஆனால் நாம் அவர் வரவை அனுமதிப்பதில்லை . தினமும் திருப்பலியில் நமக்காக பலி பீடத்தில் மரித்து, அப்பலியில் பங்கேற்கிற அனைவருக்கும் அளவற்ற அருட்கொடைகளை வாரி வழங்கினாலும் இக்கல்வாரி பலிக்குச் செல்ல பலருக்கு சோம்பேறித்தனம், அதனால் இறையருளை வீணடிக்கிறோம்.

ஈ) நமது இருதயத்தை தன்னலம், சுயவிருப்பம் மற்றும் இழிசெயல்கள் என கடினப்படுத்தி வைத்துள்ளோம். நமக்கு போதிய உணவு, அருமையான உறைவிடம், தேவைக்கேற்ப உடைகள் என அளவற்ற வசதிகள் உள்ளன. நம்மைச் சுற்றி பலரும் ஏழ்மை நிலையிலும், பசியிலும் வாழ்கின்றபோது அவர்களுக்கு மிகக் குறைந்த உதவிகளே செய்துவிட்டு, நமக்காக ஆடம்பரமாகவும், தேவையற்ற செலவு செய்துகொள்கிறோம்.

கடவுளுக்கு ஊழியம் புரிந்து, நமது ஆன்மாவை இரட்சித்துக் கொள்ளவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் காலை 5 நிமிடம், இரவு 5 நிமிடம் செபிப்பதில் திருப்தியடைந்து விட்டு, 24 மணி நேரத்தில் மீதமுள்ள நேரத்தை வேலை, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக செலவிடுகின்றனர். 10 நிமிடம் மட்டுமே கடவுளுக்கு ஒதுக்கிவிட்டு, அதாவது நமது அழியாத ஆன்மாவின் இரட்சிப்புக்கு நாம் செய்ய வேண்டிய மிகப் பெரிய பணிக்கு 10 நிமிடத்தை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 23 மணி மற்றும் 50 நிமிடங்களை நிலையற்ற உலக வாழ்விற்காக செலவு செய்கிறோமே, இது கடவுளுக்கு ஏற்புடைய செயலா?

நமது வேலை, ஓய்வு மற்றும் கஷ்டங்கள் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் பெரிதாக இருக்கும். ஆனால் பலர் பகல் பொழுதில் மிக அரிதாகவே கடவுளை நினைக்கின்றனர் என்பதே உண்மை. அவர்களது நினைவை பெரிதும் ஆக்கிரமிப்பது தங்களைப் பற்றிய நினைவுகளே. தங்களது எண்ணம், வேலை, ஓய்வு மற்றும் உறக்கம் அனைத்தையுமே தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ளவே மேற்கொள்கின்றனர். அவர்களது எண்ணங்களிலும், செயல்களிலும் கடவுளுக்கு மிகச் சிறிய இடமே ஒதுக்கப்படுகிறது. இது எப்பொழுதும் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் தேவனின் அன்பான இருதயத்திற்கு இழைக்கப்படும் துரோகம்.