கழுதையின் ஆராதனை

போனில்லோ திவ்விய நற்கருணையில் ஆண்டவர் இல்லை என வாதிட்டவன். கடின மனத்தினன். அந்தோனியார் அவனைத் தெருவில் கண்டார். நற்கருணையில் உண்மையாகவே இறைவன் இருப்பதை தெளிவுப்படுத்த இருவருக்கும் ஒரு போட்டி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதாவது அவன் தன் கழுதைக்கு மூன்று நாட்கள் எந்த உணவும் தரக்கூடாது. நான்காம் நாள் கழுதையை ஆலயத்தின் முன் கொண்டு வரவேண்டும். அந்தோனியார் நற்கருணை நாதரை ஏந்தி வருவார். அவ்வேளையில் அவன் அதற்கு தீனி போட வேண்டும்.

பசியுற்ற கழுதை உணவை நாடாது நற்கருணை நாதர் முன்னால் மண்டியிட்டால் அவன் மனம் வருந்தி ஆல்பிஜீனிய பேதகத்தை விட்டு விட வேண்டும். அவனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தான்.

அனைவரிடமும் இது பற்றிச் சொன்னான். வேடிக்கை பார்க்க பெருங் கூட்டம் கூடியது. அந்தோனியார் நற்கருணைப் பேழையைத் தாங்கி வந்தார். அந்த நேரத்தில் மூன்று நாட்கள் பட்டினி கிடந்த கழுதைக்கு, அது விரும்பி உண்ணும் உணவைப் போட்டான் போனில்லோ.

அது உணவை எட்டிக் கூடப் பாராது மண்டியிட்டு ஆண்டவரை வணங்கியது. இவ்வதிசயத்தைப் பார்த்த பலர் மனம் திரும்பினர். பார், "விலங்கு அறிந்த விமலனை பாவி நான் அறியவில்லையே'' என அவன் புலம்பி நல்ல கிறிஸ்தவன் ஆனான்.

ஒளிரும் விளக்கு 

தென் பிரான்ஸ் நாட்டில் ஆல்பிஜீனிய மதம் தலை விரித்துத் தாண்டவமாடியது. தூய சுவாமிநாதர் இதனைத் தகர்த்தெறிய அரும் பாடுபட்டார். அரசினால் இதனை வேரறுக்க முயன்றும் முற்றிலும் முடியவில்லை . இப்பேதகத்தினர் இயேசுவின் தெய்வீகத்தை மறுத்தனர். அருட்சாதனங்கள், நரகம், மோட்சம் என்பனவற்றை மறுத்தனர். அவர்களை மனந்திரும்புவதற்காக அந்தோனியார் கால்நடையாகப் பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டார். பார்மா நகரில் உள்ள தம் சபை துறவியர்களையும், வெர்செல்லி நகரில் தம் நண்பர் மாமேதை அகுஸ்தீனார் சபைத் துறவி தாமஸ் காலாசையும் சந்தித்தார். காலாஸின் படத்தில் அந்தோனியாரின் படமும் காணப்பட்டது. இதற்குச் சான்று தனது மரணத்திற்குப் பின் அந்தோனியார் இவருக்குத் தோன்றினார். "எனது கழுதையை பதுவையில் விட்டுவிட்டேன். இப்பொழுது வீடு செல்கிறேன்” என மொழிந்தார். "அந்தோனியார் ஒளிரும் விளக்கு, இறைப்பற்றால் எரியும் அவர் இதயம் மக்களுக்கு வழிகாட்டி" என காலாஸ் புகழ்ந்தார்.

மகப்பேறு தருதல்

வழியில் ஆல்ப்ஸ் மலையை அடுத்த பட்டணத்தில் அனிஸி என்ற சீமாட்டி இவருக்கு உபசரணை செய்தாள். இவள் பக்தி மிக்கவள். அந்தோனியார் மீது பற்றுக் கொண்டு என்றாவது அவரைப் பார்த்து அவரின் ஆசீரைப் பெற வேண்டும் என விரும்பியவள். அவரால் தனது வாழ்வு மலரும் என நம்பியிருந்தாள். சாலையில் யாராவது துறவிகள் சென்றால் அது அந்தோனியாராக இருப்பாரோ என நினைத்து ஓடோடிச் செல்வாள். இவளுக்கு மக்கள் பேறு இல்லை. அவள் ஒருநாள் அந்தோனியாரை சந்தித்து பணிவுடன் உபசரித்து தன் மனக்குறையை எடுத்துரைத்தாள். "இறையருளால் ஒரு மகனை அடைவாள் என்றும், அவன் பிரான்சிசின் சபையில் சேர்ந்து வேதசாட்சியாவான்" என்றும் முன்னுரைத்தார். பிற்காலத்தில் அவள் மகன் பிலிப்பு பாலஸ்தீனாவில் வேதசாட்சியானார்.

அசீசியார் கேட்ட மறையுரை

அந்தோனியார் ஆர்லஸ் நகரிலுள்ள கப்பூச்சின் ஆசிரமத்தை அடைந்தார். அது 1224ம் ஆண்டு தூய மிக்கேல் அதிதூதர் திருநாள் காலம். அந்தோனியாரின் நாவன்மையைப் பற்றி கேள்விப் பட்டிருந்த மோனஸ்தோ மட அதிபர், நடக்க இருக்கும் சபைக் கூட்டத்தில் அவர் மறையுரை ஆற்ற வேண்டுமென வேண்டினார். அந்தோனியார் உடன் பட்டு "இயேசு நசரேன் யூதர்களின் ராஜா” என்ற தலைப்பில் அரியதோர் மறைஉரை நிகழ்த்தினார். மேலாளரின் உதவியாளர் கண்களில், தூய பிரான்சிஸ் அசிசியார் தரையிலிருந்து மேலே ஆகாயத்தில் நின்று கதவண்டையில் ஆசீர்வதிப்பது தெரிந்தது. இந்நிகழ்ச்சியைப் பற்றிய படம் அசிசிநகர் பேராலயத்தில் அழகுபட வரையப்பட்டுள்ளது.