என் விளக்கு சுடர் விட்டு எரியச் செய்கின்றீர் ***

என் விளக்கு சுடர் விட்டு எரியச் செய்கின்றீர்
என் வாழ்வை அகல்விளக்காய் இறைவா மாற்றினீர்

1. புனிதம் மிகுந்த இறைவன் பெயரை
நாளும் புகழ்ந்து ஏத்துவேன்
புகழ்ச்சிப் பலியைப் பாக்களாலே
நானும் இசைத்துப் பாடுவேன்
போற்றி இறைவா போற்றி என்று
நாளும் பொழுதும் வாழ்த்துவேன்
அரணும் மீட்பும் எனக்கு நீரே
சரணமே உன் திருப்பாதமே

2. எனக்கு உமது துணையிருக்க
எதிரிப் படையைத் தாக்குவேன்
எனக்கு உமது வலுவிருக்க
எதிரிக் கோட்டையைக் தாண்டிடுவேன்
எனக்குக் கேடயம் நீரே இருக்க
எதிரிக் கணையைத் தடுத்திடுவேன்
தாங்கும் வலிமை தாண்டும் வலிமை
தடுக்கும் வலிமை நீர் தந்த வளமை

3. எனக்கு உமது அருள் கொடுத்து
மானைப் போல ஓடச் செய்தீர்
எனக்கு உமது சக்தி அளிக்க
வெண்கல வில்லினை வளைத்திடுவேன்
எனக்கு உமது அன்பைப் பொழிந்து
என் வாழ்வை விளக்காய் ஏற்றி வைத்தீர்
ஓடும் வலிமை ஒடுக்கும் வலிமை
ஒளிரும் வலிமை நீர் தந்த வளமை