வரம் கேட்டு வருகின்றேன் இறைவா ***

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா

1. பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன்
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

3. எளியோர் தம் விழி பேசும் துயரம் எல்லாம் - என்
இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன்
ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் - நல்
ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

4. நம்பிக்கை இழந்தோரென் முகம் பார்த்த பின் - நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன்
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் - உன்
அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்