எனது ஆயனாய் இறைவன் இருக்கிறார் ***

எனது ஆயனாய் இறைவன் இருக்கிறார்
மனது மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறார்
இனியும் தேவை என்னவென்று
நான் சொல்லக்கூடும்
அவரின் நன்மை இரக்கம் என்னை
வாழ்நாளெல்லாம் பின்தொடரும்

1. களைப்பினால் மிக வாடியே நான் சோர்ந்து போகையில்
இளைப்பாறச் செய்கிறார் பசுமைவெளி தனில்
சோதனையின் நெருப்பிலே நான் தாகம் கொள்கையில்
சேயெனையே நடத்துவார் குளிரோடை அருகினில்
என்னென்று சொல்லுவேன் என் தேவன் அன்பினை
என்றென்றும் பாடுவேன் என் ஆயன் இயேசுவை
இதிலும் வேறு பேரின்பம் எங்கு உண்டு சொல்லுங்கள்

2. இறப்பின் நிழலில் பள்ளத்தாக்கில் நடக்க நேர்கையில்
இறைவன் அருகில் இருப்பதால் அச்சமில்லையே
ஆயனவர் வளைகோல் என்னை வழிநடத்துவதால்
ஆனந்தமே ஆனந்தமே எனது வாழ்விலே

3. எதிரி நாண விருந்து ஒன்றை இறைவன் தருகையில்
உதிரியாகிப் போன நானும் உறுதி பெறுகிறேன்
எனது தலையை எண்ணெயாலே தேவன் அர்ச்சித்ததால்
எனது ஆன்மப் பாத்திரம் பொங்கி வழியுதே