என் ஆதாரம் நீயாகியே ***

என் ஆதாரம் நீயாகியே - உன்
பேரன்பில் எனைத் தேற்றுமே
கற்பாறை போல் துணையாகியே - என்
கரம் பற்றி வழிநடத்துமே
உனை நம்பியே உயிர் வாழ்கிறேன்
இறை உன்னில் சரணாகிறேன்

1. துயரங்கள் சூழத் தளர்ந்திடும் வேளை
வருத்தங்கள் நீக்கி வலிமையைத் தந்தாய்
உடைந்திட்ட கலமாய் வதைபட்ட போதும்
உன் முக ஒளியால் ஆறுதல் ஈந்தாய்
எப்போதும் பேரச்சம் சூழ்ந்தாலுமே
என்றென்றும் நம்பிக்கை உன் மீதிலே
போற்றுவேன் நான் போற்றுவேன்
போற்றியே தினம் வாழுவேன்
என் நினைவெல்லாம் அதுதானய்யா

2. மலையெனப் பகைவர் எழுந்து வந்தாலும்
மறைப்பினுள் வைத்துக் காத்திடுகின்றீர்
நேரிய மனத்தோர் நன்மைகள் அடைந்திட
காவலாய் இருப்பீர் கருணையில் அணைப்பீர்
இறுமாப்பில் நடப்போர்க்கு பதில் கொடுக்கின்றீர்
இறைவா உம் அடியோர்க்கு பலம் தருகின்றீர்