பாத்திமா காட்சிகள் - பிரான்சிஸ், ஜஸிந்தா

லூஸியாவைச் சுற்றி வரும் சிறுவர்களில் அவளுடன் நல்ல நட்புரிமை பெற்றவர்கள் பிரான்சிஸம், அவன் தங்கை ஜசிந்தாவும் தான். இருவரும் லூஸியாவின் அத்தை பிள்ளைகள். மனுவேல் மார்ட்டோ, சேசுவின் ஒலிம்பியா இவர்களின் இரு கடைசிப் பிள்ளைகள் அவர்கள். 

ஒலிம்பியா மொத்தம் பதினொரு பிள்ளைகளுக்குத் தாயாயிருந்தாள். அவளிடம் தெய்வ பக்தி உண்டு. மனுவேல் மார்ட்டோ ஒலிம்பியாவின் இரண்டாம் கணவர். கடின உழைப்பாளி. நகைச்சுவை படப் பேசும் இயல்புடையவர். வீட்டில் அவர் உண்மையிலேயே தலைவராயிருந்தார். அவர் சொல்லை யாரும் மீற மாட்டார்கள். அந்தக் கிராமப்புறங்களில் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது.

1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் நாள் பிரான்சிஸ் பிறந்தான். தன் தந்தையின் குணங்களை பிரான்சிஸ் நிரம்பக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு வடிவமான பையன். அன்பான சுபாவம். கீழ்ப்படியும் குணம். ஆயினும் முரண்டு பிடித்தால் தந்தையின் தண்டனைதான் அவனை வழிக்குக் கொண்டு வர முடியும். 

வீட்டில் குடும்ப ஜெபத்திற்கு வரமாட்டேன் என்று ஒரு தடவை புரளி பண்ணிய போது மார்ட்டோ அவனைத் தண்டிக்க வேண்டியதாயிற்று. பிரான்சிஸ் எதற்கும் பயப்பட மாட்டான். எந்த இருட்டிலும் வெளியே தயக்கமின்றிச் செல்வான். நரி, முயல், இவற்றைக் காட்டில் போய்ப் பிடித்து வந்து வீட்டில் வளர்ப்பான். பாம்பு பல்லிகளை வேட்டையாடி . கோலில் தூக்கி வருவான். குளத்தில் அவைகளுக்குத் தண்ணீர் காட்டுவான். அவை தண்ணீரில் நீந்திப் போவதைக் கண்டு மகிழ்வான்.

1910-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் நாள் ஜசிந்தா பிறந்தாள். பிரான்சிஸை விட இரண்டு வயது இளையவள் ஜசிந்தா . பார்க்க அழகாயிருப்பாள். கூரிய அறிவுடைய தோற்றம். எந்த நேரமும் குறுகுறுவென்று அங்கும் இங்கும் மீன் போல் தாவுவாள். இளைய பிள்ளைக்குரிய செல்லம் அவளுக்குக் கிடைத்திருந்ததால் மிகவும் அன்புடன் காணப்படுவாள். அதே நேரம் பிடிவாதம் பிடித்தாளானால் யாரும் அவளை அசைக்க முடியாது. எப்படியோ அவள் அருள் நிறை மந்திரத்தை "அருள்கள் நிறைந்த மரியாயே” என்று கற்று வைத்திருந் தாள். "அருள் நிறைந்த மரியாயே" என்று மாற்றிச் சொல்ல மறுத்து விட்டாள்!

ஜாஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரும் இணைபிரியாத் தோழர்களாகி விட்டார்கள். கூடி விளையாடுவார்கள். கள்ளன் போலிஸ் (முதலிய சாதாரண விளையாட்டுக்களை விரும்பி விளை யாடுவார்கள். விளையாடிக் களைத்ததும் லூஸியா, தன் அம்மாவிடம் கேட்ட சேசு கதைகளையும், அப்பா, அண்ணன்மாரிடம் கேட்ட அரக்கர், இராஜா ராணிக் கதைகளையும் சொல்லுவாள்.

சேசு கதைகளை, முக்கியமாக சேசு பாடுபட்ட சம்பவங்களை லூஸியா சொல்வது கேட்பவர்களுக்கு மிகவும் ஆவலை உண்டாக்கும். ஜஸிந்தா அவற்றில் லயித்து தன்னையே மறந்து விடுவாள். சேசு கசையடி படும்போது தேவதாய் பார்த்து அழுததையும், பாரமான சிலுவையைத் தாங்க மாட்டாமல் சேசு விழுந்ததையும், கல்வாரி மலையில் சிலுவையில் சேசு தொங்கி, தாகத்தாலும், வேதனையாலும், பாவத்துக்காக அதுவும் தம்முடைய பாவத்துக்காக அல்ல, நம்முடைய பாவத்துக்காக உயிர் விட்டதையும் உள்ளம் உருகும்படிச் சொல்வாள். 

ஜஸிந்தாவுடைய உள்ளத்தில் இவை வெகு ஆழமாகப் பதிந்து விட்டன. "பாவம் சேசு! ரொம்பப் பாவம்! பாவங்கள் உமக்கு இவ்வளவு வேதனை கொடுக்குமானால், இனிமேல் நான் ஒருபோதும் எந்தப் பாவத்தையும் செய்யப் போவதில்லை " என்று கூறுவாள் ஜசிந்தா.

ஒருநாள் மூன்று குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந் தார்கள். லூஸியாவின் அண்ணன் ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந் தான். அவன் ஜஸிந்தாவைப் பார்த்து, "ஜஸிந்தா, எனக்கொரு முத்தங் கொடு" என்றான். “வேறு ஏதாவது வேண்டுமானால் கேள்" என்றாள் ஜஸிந்தா . 

"இல்லை. எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். நீ மூன்று முத்தம் கொடு, போதும்" என்றான் அவன். ''நம் ஆண்டவருக்கு மட்டும்தான் நான் முத்தம் கொடுப்பேன். அவர் எத்தனை முத்தம் கேட்டாலும் கொடுப்பேன்" என்று கூறிய ஜஸிந்தா, ஓடிப்போய் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சேசு பாடுபட்ட சுரூபத்தை முத்தங்களால் நிரப்பி விட்டாள்.

ஜசிந்தா தனியாக இருக்கும்போது சுவரில் தொங்கிய பாடுபட்ட சுரூபத்தை எடுத்து மடியில் வைத்து மிக அன்போடு சேசுவைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

லூஸியா வீட்டுப் பக்கத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு உண்டு. அதனுள் ஒலிவமர இலைகளும், காய்களும் விழாமல் பெரிய படலைக் கற்களால் கிணற்றை மூடி இருந்தார்கள். அந்தக் கல் மேல் உட்கார்ந்து கொண்டோ, அல்லது படுத்துக் கொண்டோ மூன்று குழந்தைகளும் மகிழ்ச்சியாக பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். 

மாலையில் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றுவதை ஜஸிந்தா ஒவ்வொன்றாய் எண்ணுவாள். எண்ண முடியாமல் போகும் வரை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண் சொல்லிக் கொண்டிருப்பாள். நட்சத்திரங்களுக்கு சம்மனசுக்களின் விளக்குகள் என்று பெயர்! சூரியன் ஆண்டவருடைய விளக்கு, சந்திரன் தேவதாயின் விளக்கு! "எனக்கு ஆண்டவரின் விளக்குத்தான் பிடிக்கும்" என்பான் பிரான்ஸிஸ். 

"எனக்கு அது பிடிக்காது. அது பார்க்கிறவர்கள் கண்ணைக் கூசும். எனக்கு நம் அம்மாவின் விளக்குத்தான் பிடிக்கும்' என்பாள் ஜஸிந்தா. இப்படி வாக்குவாதம் எல்லையில்லாமல் நீண்டு கொண்டிருக்கும்.