ஜனவரி 23

அர்ச். ரேயிமுந்தப்பர் - துதியர் (கி.பி. 1275). 

இவர் ஸ்பெயின் தேசத்தில் உயர்ந்த கோத்திரத்தில் பிறந்து மேலான சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்று, தம்முடைய 20-ம் வயதில் கல்லூரியில் பல கலைகளைக் கற்றுப் பெயர் பெற்றார். 

இவர் குருப்பட்டம் பெற்று, தமது உத்தம அலுவலை அதிக ஊக்கத்துடன் செய்து வந்ததினால் சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். இவருடைய அரிதான ஞானத்தையும் பக்தியையும் அறிந்த அர்ச். பாப்பானவர் இவரை உரோமைக்கு அழைப்பித்து, இவருக்கு உயர்ந்த வேலைகளைக் கொடுத்தார். 

பாப்பானவரால் தமக்கு அளிக்கப்படவிருந்த அதிமேற்றிராணியார் பட்டத்தைத் தடுக்க அவர் பட்ட பிரயாசையின் பலனாக வியாதியாய் விழுந்தார். இதைப் பாப்பானவர் அறிந்து, தமது விருப்பத்தை மாற்றி, ரேயிமுந்தப்பர் தம்முடைய சுய தேசத்துக்குப் போகலாமென்று உத்தரவளித்தார். 

சுய தேசத்தில் அவர் பூரண சுகமடைந்து, வேதத்திற்காக வெகு ஆவல் உற்சாகத்துடன் பிரயாசைப்பட்டதினால் கணக்கற்றப் பாவிகள் மனந்திரும்பினார்கள். மேலும் 20,000 சரசேனருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். 

இவர் அர்ச். டொமினிக் சபையில் உட்பட்டு, உத்தம சந்நியாசியாய் வாழ்ந்ததால் அநேக அரசரும் பிரபுக்களும் இவரைத் தம் ஆத்தும குருவாக தெரிந்துகொண்டார்கள். 

அத்தேசத்து அரசன் அவரை மஜோர்க்கா என்னும் தீவுக்கு அனுப்பினபோது, அவ்விடத்தில் அவரால் அநேக ஞான நன்மைகள் உண்டாயின. ஆனால் முன் சொன்ன அரசன் தன் பாவ நடத்தையை விடாததினால் அவர் அவ்விடத்தை விட்டுப் புறப்படத் தீர்மானித்தார். 

அதை அரசன் அறிந்து, எவரும் அர்ச்சியசிஷ்டவரை கப்பலில் ஏற்றாதபடிக்கு உத்தரவு பிறப்பித்தான். ரேயிமுந்தப்பர் தமது மேற்போர்வையைக் கடலில் விரித்து, அதில் ஏறி 150 மைல் தூரம் கடலில் பிரயாணம் செய்து, தமது மடம் போய்ச் சேர்ந்தார். 

அதையறிந்த அரசன் அதிசயித்து தன் துர்நடத்தையை முற்றிலும் ஒழித்துவிட்டு சாகும் வரையில் புண்ணியவாளனாய் நடந்துவந்தான். அர்ச்சியசிஷ்டவர் சகல புண்ணியங்களிலும் உத்தமமாய்ப் பிரகாசித்து, தமது 100-ம் வயதில் மரணமாகி மோட்சமடைந்தார்.

யோசனை

யாரொருவர் தங்களைத் தாழ்த்தி, தங்களுக்கும் உலகத்திற்கும் மரித்தவர்களாகிறார்களோ அவர்களே அர்ச்சியசிஷ்டவர்கள் ஆவார்கள்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். அருளப்பர், து.