தேவமாதாவின் வணக்கமாதம் - மே 10

வானதூதர் சொன்ன மங்கள வார்த்தையின் பேரில்!

கபிரியேல் என்னும் வானதூதர் தேவமாதாவை வாழ்த்தினார்

அன்னை அடைந்த தேவ வரங்களைப் பற்றி வாழ்த்தினார்:

வானதூதர் தேவ இராக்கினியான அன்னை அடைந்த வரங்களைப்பற்றி வாழ்த்தும்படியாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க என்றார். இந்த வார்த்தைகளைக் கொண்டு வானதூதர் அர்ச். தமத்திரித்துவத்தின் தூதுவராகப் பரிசுத்த கன்னிகைக்கு மங்களவார்த்தை சொல்லி அன்னைக்குச் சகல சுவிசேஷங்களிலும் மேலான சுவிசேஷத்தையும், சகல வர்த்தமானங்களிலும் உன்னத வர்த்தமானாகிய ஆண்டவருடைய மனித அவதாரத்தையும் அறிவித்தார்.

அன்னையுடைய திருநாமத்தை அதிக வணக்கத்தின் பொருட்டு உச்சரிக்க மனதில்லாதவராய், பிரியத்த்தத்தினாலே பூரணமானவளே என்று சொல்லி, அந்த வார்த்தையில் அன்னையுடைய மகத்துவத்தைக் காண்பித்தார். அது எவ்வாறெனில், அதிசயத்துக்குரிய அந்தத் திவ்விய கன்னிகை தம்முடைய மனதிலும் இருதயத்திலும் உணர்விலும் வார்த்தைகளிலும் கிரிகைகளிலும் எவ்வித தேவ வரங்களாலும் நிறைந்தவர்களாகி, மேலான விதமாக இஷ்டப்பிரசாதத்தினால் அலங்கரிக்கப்பட்டவர்களாய், அனுக்கிரகப் பிரசாதங்களையும் சுபாவத்துக்கு மேலான புண்ணியங்களையும் இஸ்பிரீத்து சாந்துவினுடைய வரங்களையும் பெற்றவர்களாய், சகலமான சம்மனசுகளையும் மோட்சவாசிகளையும் விட பிரியதத்தத்தினாலே பூரணமானவர்களாய் இருந்தார்கள். நாமும் வானதூதரோடு நம்முடைய ஆண்டவளை வாழ்த்தி, அன்னைக்கு அளிக்கப்பட்ட திவ்விய நன்மைகளைக் கொண்டாடக் கடவோம். நிர்ப்பாக்கியர்களாயிருக்கிற நமது பேரில் இரக்கமாகித் தன்வசம் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் தேவநன்மைகளில் நமக்கு தேவையான வரம் கொடுக்க வேண்டுமென்று மன்றாடக்கடவோம்.

அன்னை சர்வேசுரனுடன் அடைந்த ஞான ஐக்கியத்தைப் பற்றி வாழ்த்தினார்:

வானதூதர் பரம இராக்கினியை நோக்கி கர்த்தர் உம்மிடத்திலே என்று சொல்லி அன்னை அடைந்த தேவ ஒன்றிப்பின் முகாந்தரமாக அன்னையை வாழ்த்தினார். கர்த்தர் மற்ற புண்ணியாத்மாக்களிடத்தில் தம்முடைய இஷ்டப் பிரசாதத்தினாலும் தேவ கிருபையினாலும், சகலமான சிருஷ்டிகளிலே தம்முடைய செய்கைகளினாலும், ஆளுகையினாலும் இருக்கிற வண்ணமே, தேவ கன்னிகையினிடத்தில் வாசம் பண்ணினதுமல்லாமல், விசேஷ அன்பினாலும் மேலான ஒன்றிப்பினாலும் தமக்குப் பிரியமான இருப்பிடத்தை ஸ்தாபித்திருக்கிறார்.

அப்போது அந்த தேவ ஐக்கியம் அதிகரிக்கும்படியாகவும், தேவசிநேகம் பெருகும் படியாகவும் அன்னையுடைய இருதயமானது உன்னதத்திலே மிகுந்த மகிமையோடு ஆளுகின்ற ஆண்டவருடைய மெய்யான தேவாலயமாயிற்று. அன்னையிடத்தில் மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான உலக மீட்பர் ஒன்பது மாதமட்டும் தங்கியிருந்தார்.

நீங்களும் தேவமாதாவுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப்போல பாக்கியம் அடையலாம். நீங்கள் இஷ்டப்பிரசாதத்துடன் இருக்கும் பொழுது சர்வஜீவ தயாபர சர்வேசுரன் உங்களிடத்தில் வாசம் செய்து உங்களை மிகவும் நேசிக்கிறார். ஆனால் சாவான பாவத்தில் விழுவீர்களாகில், சர்வேசுரன் உங்களை கைவிட, பசாசுக்கு அடிமையாகப் போவீர்கள். அத்தகைய தீமைக்கு நிகரான தீமை வேறு ஒன்றுமில்லை. நீங்கள் அதில் விழாதபடிக்கு தேவமாதா உங்களை காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ளுங்கள்.

சகல சிருஷ்டிகளை விட அன்னை அடைந்த மேன்மை பற்றி தேவமாதாவை வானதூதர் வாழ்த்தினர்.

வானதூதர் தேவகன்னிகையை நோக்கி பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளும் நீரே என்று சொல்லி, அன்னையடைந்த உன்னத மேன்மையைக் குறித்து அன்னைச் சகல ஜீவ ஜந்துக்களின் பேரால் வாழ்த்துகிறார்.

மெய்யாகவே பரிசுத்தமான கன்னிகையே! எவ்வித சிருஷ்டிகளையும் விட அதிக தேவ அருளையும் கிருபையையும் அடைந்திருக்கிறீர். மலர்களுக்குள் வெண்மையான ஒளியோடு விளங்குகிற லீலியென்னும் மலரைப் போல, பாவத்தினால் அழுக்குப்பட்ட மக்களுக்குள் நீர் தூய்மையுடன் விளங்குகிறீர். முழுமையும் பரிசுத்தமுள்ளவர்களாய் எவ்வித புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாய் துலங்குகிறீர்.

ஆதி தாயான ஏவாள் என்பவள் மக்கள் மீது சகல தீமைகளையும் உண்டாக்கினாள். தேவ ஆசீர்வாதங்களைப் பொழியச் செய்தீர். ஆதலால் என்றென்றைக்கும் சம்மனசுகளும், சகல மோட்சவாசிகளும், சகல ஜீவஜந்துக்களும், உம்மை வாழ்த்திப் புகழ்ந்து கொண்டாடுவார்கள். என் திவ்விய அன்னையே! அடியேன் அபாத்திரவானாயிருந்த போதிலும் உம்முடைய ஊழியர்களோடு உம்முடைய மகத்துவத்தை வாழ்த்தி, நீர் அடைந்த தேவ வரங்களை என் வாழ்நாளெல்லாம் பாடி துதித்து உம்மை வான் வீட்டில் புகழ்ந்து நேசித்து துதிப்பேனென்று நம்பிக்கையாய் இருக்கிறேன்.

செபம்.

என் ஆண்டவளே! மீட்பரின் தாயாரே! சகல பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! கன்னிகைக்குள் பரிசுத்த கன்னிகையே! சிருஷ்டிகளுக்குள் மேலானவர்களே! உம்மை மனிதர் எல்லாம் எப்போதும் வாழ்த்தி வருவார்கள். நான் அவர்களோடு உம்முடைய மகிமையை துதித்து உம்முடைய மகத்துவத்தை, சகலருக்கும் அறிவிப்பேன். நான் உம்மை என்னால் ஆனமட்டும் வணங்கி நேசித்து உம்மை எல்லாரும் சிநேகிக்கும்படி செய்யப் பிரயாசைப்படுவேன். மனுமக்கள் எல்லோரும் உமதருகில் வந்து உமக்குத் தக்க, வணக்கத்தைக் காண்பித்து, ஏக மீட்பரான உமது திருமைந்தனை நேசித்து, அவருக்கு ஊழியம் பண்ண வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன். இந்த பாக்கியம் உம்முடைய கிருபையினால் எனக்குக் கிடைக்கும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

அருள் நிறைந்த மரியாயே வாழ்க!

பத்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

உங்கள் ஊரிலிருக்கிற கோவிலையாவது சிலுவையையாவது நன்றாய் இருக்கும்படிக்கு ஏற்பாடு செய்கிறது.

புதுமை!

இஸ்பானிய தேசத்தின் அதிக செழிப்புள்ள நாடுகளெல்லாம் மகமதியருடைய கொடிய ஆளுகையில் இருந்தபோது எண்ணிக்கையில்லாத கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருந்து மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதல்லாமல் அவர்களில் அநேகர் தங்களுக்கு இழைக்கும் துன்பங்களை சகியாது தங்களிடம் சொல்லப்படும் துர்ப்புத்திகளைக் கேட்டுத் தங்களுடைய பரிசுத்த வேதத்தை மறுத்துவிட்டார்கள். எவ்வித இன்னல்களிலும் ஆதரவாயிருக்கிற மோட்ச இராக்கினியான அன்னை அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை நீக்கவும் கெட்டுப்போகிற அந்த அடிமைகளை மீட்கவும் திருவுளங்கொண்டார்கள்.

அது எவ்வாறெனில், மிகுந்த செல்வந்தரும் மகா பக்தி விசுவாசமுள்ளவருமான நோலாஸ்கோ இராயப்பர் என்னும் ஒருவர் இருந்தார். நீண்ட நாட்களாக இந்த நிர்ப்பாக்கிய கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவி செய்யக்கூடும் என ஆலோசித்து வந்தார். ஒருநாள் அவர் அதிக பக்தியோடு தேவ சிம்மாசனத்தருகில் தம்முடைய வேண்டுதல்களை ஒப்புக்கொடுக்கும்போது மகா பிரகாசத்தோடும், நிகரில்லாத மகிமையோடும் பரிசுத்த கன்னிகை அவருக்குத் தம்மைக் காண்பித்து நீ நம்முடைய பேரால் மகமதியரின் அடிமைத்தனத்திலிருந்து நிர்ப்பாக்கிய கிறிஸ்தவர்களை மீட்கும்படியாக சந்நியாசிகளுடைய ஓர் சபையை ஸ்தாபிப்பாயேயாகில் நம்முடைய குமாரனுக்கு மிகவும் பிரியமான காரியமாக இருக்கும் என்றார்கள். 

அதே இரவில் தேவமாதா அரகோனியா நாட்டின் அரசரான யாகப்பருக்கும் பென்னாப்போர் என்னும் ரே மொந்துக்கும் தோன்றி மேற்சொன்ன சபையை ஸ்தாபிக்கிறதற்கு அவர்கள் இருவரும் உதவி செய்ய வேண்டுமென்று கற்பித்தார்கள். இதன்படி தேவமாதாவின் பேரால் அடிமைத்தனத்தினின்றும் கிறிஸ்தவர்களை மீட்கும்படியாக ஓர் சபையானது ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையின் சந்நியாசிகள் மூன்று பெரிய வார்த்தைப்பாடுகள் கொடுத்ததுமல்லாமல் கிறிஸ்தவர்களை வேறுவகையில் மீட்க முடியா விட்டால் நாங்கள் அவர்களுக்குப் பதிலாய் அடிமையாக அவமானத்தில் நிற்போம்: சபையானது தேவமாதாவின் கிருபையினாலும் சர்வேசுரனுடைய ஆசீராலும் அநேக நாடுகளில் பரம்பினதுமின்றி அதன்மூலம் எண்ணிக்கைக்குள் அடங்காத ஜனங்கள் தாங்கள் அகப்படுகிற கொடிய அடிமைத்தனத்திலிருந்தும் மீட்கப்பட்டு தங்களுடைய வீடுகளுக்கு சந்தோஷமாய் அனுப்பப்பட்டார்கள். இந்த சந்நியாசிகளுக்கும் அநேகர் அடிமைகளை மீட்க வேண்டிய பணம் இல்லாதிருக்கும் பொழுது, கன்னிமரியாயின் பெயரைச் சொல்லித் தங்களைத்தானே அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார்கள்.

கிறிஸ்தவர்களே, பசாசின் கொடிய அடிமைத்தனத்தில் வருத்தப்படும் நிர்ப்பாக்கிய பாவிகளின் மட்டில் நீங்கள் இரக்கமாயிருந்து அவர்களுக்காகத் தேவ உதவியை மன்றாடி, அவர்கள் தங்கள் அக்கிரமத்தை கைவிடுமாறு அவர்களுக்கு உதவி புரிவீர்களாக.