ஸ்வீடன் நகர அர்ச். பிரிஜித் அம்மாளுக்கு நமதாண்டவரால் அறிவிக்கப்பட்ட மகத்தான வாக்குறுதிகள்!

உரோமையில் அர்ச். சின்னப்பர் தேவாலயத்தில், ஸ்வீடன் நகரத்து அர்ச். பிரிஜித் அம்மாளுக்கு நமது ஆண்டவரால் பதினைந்து செபங்கள் வெளிப்படுத்தப்பட்டன. (பாப்பரசர் 9-ம் பத்திநாதரால் அங்கீகரிக்கப்பட்டவை).

அர்ச். பிரிஜித்தின் காட்சிகளைப்பற்றிப் பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பர் பின்வருமாறு கூறுகின்றார்.

"இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம், நன்கு ஆராய்ந்த பிறகு, விசுவாசிகள் மத்தியில் பரப்புவதற்கு அனுமதி வழங்கலாம். வேதத்தின் உண்மைகளைப் போல விசுவசிக்க தேவையில்லை. இருப்பினும் விவேகத்தோடு, மனித நம்பிக்கையோடு, போதிய குறிக்கோளோடு, இவை நடந்திருக்கலாம் என்று பக்தி முயற்சியாக ஒருவர் இதை நம்பலாம்.'' (Les Petits Bollandistes, tome XII)

பிரிஜித் பிறந்த 1303, ஜூன் 14-ம் தேதி ராஸ்போ நகரின் குருவானவர் பெனடிக்ட் என்பவர் இஞ்ச் போர்தேவின் விடுதலைக்காக செபித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் தம்மை ஒரு ஒளிவெள்ளம் சூழ்ந்திருப்பதாகக் கண்டார். அதன் நடுவே நமதாண்டவர் தோன்றி, "பிர்ஜர் நகரில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. உலகமெத்திசையிலும் அவள் குரல் கேட்கப்படும்” என்றார். (Sagii, die XXIV Aprilis 1903 IMPRIMATUR)

பெற்றோர்களும், ஆசிரியர்களும், சிறு குழந்தைகளிடம் குறைந்தது ஓராண்டு காலமாவது இச்செபங்களை வாசித்தால் ஐம்புலன்களில் எதையாவது இழக்கும்படியான பயங்கர விபத்து எதுவும் இக்குழந்தைகளின் வாழ்நாளில் ஒருபோதும் நடக்காது, நடந்தாலும் அதினின்று காப்பாற்றப்படுவர் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

இச்செபங்களைச் செபித்த அனைவரும் சேசுவின் வாக்குறுதிகள் நிறைவேறக் கண்டதனாலும் ஆண்டவர் இவைகளின் உண்மையை இயற்கைக்கு மேற்பட்ட காரியங்களால் அறிவிக்க விரும்பியதாலும் பரி. பாப்பரசர் 9-ம் பத்திநாதர் இச் செபங்கள் உண்மையானவை, ஆன்மீகநலம் பயப்பவை என உறுதியாகக் கூறினார். 1863 ஆகஸ்ட் 22-ல் இவை அங்கீகரிக்கப்பட்டன.

இச்செபங்களை ஒருவர் நாள் தவறாமல் தினமும் செபிக்கவேண்டும். ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தால் தவறு நேர்ந்தால் ஓராண்டுக்குள் எப்படியாவது 5480 செபங்கள் செபித்துவிட்டால், இதற்குரிய பலன்களை அடையலாம். பக்தியோடு உச்சரிக்கும் வார்த்தைகளில் மனதை ஈடுபடுத்திப் பராக்கின்றி செபிக்கவேண்டும். இல்லையெனில், பலன் இல்லை. இச்செபங்கள் சிலுவைப்பாதைக்கும் ஏற்றவை.

உரோமையிலுள்ள அர்ச். சின்னப்பர் தேவாலயத்தைத் தரிசிப்போர், அங்கு திவ்விய நற்கருணை சிற்றாலயத்தில் நற்கருணை பேழைக்கு மேல் ஒரு பாடுபட்ட சுரூபத்தைக் காணலாம். இதன் முன்னிலையில் அர்ச். பிரிஜித் முழந்தாளிலிருந்து செபித்தபோதுதான், நமதாண்டவராகிய சேசு அவருக்கு இந்த 15 செபங்களையும் கொடுத்தார்.

அர்ச். பிரிஜித், நமதாண்டவர் தமது பாடுகளின் போது எத்தனை அடிகள் பட்டார் என்று அறிய நீண்ட நாட்களாக விரும்பியதால், அவர் ஒருநாள் அவளுக்கு தோன்றி, என் உடலில் 5480 அடிகள் வாங்கினேன். அவைகளை நீ மகிமைப்படுத்த விரும்பினால் 15 பர . , 15 அருள். மந்திரம், 15 தமதிரித்துவ ஜெபம் அத்துடன் நான் தந்த (கீழ்க்காணும்) 15 செபங்களையும் ஓராண்டு முழுவதும் விடாது செபி. அப்போது ஒவ்வொரு காயத்தையும் நீ மகிமைப்படுத்தியிருப்பாய் என்று கூறினார்.

அர்ச். பிரிஜித் செபங்களாகிய இந்த 15 செபங்களையும் ஓராண்டு முழுவதும் சொல்லி வந்தவர்களுக்கு நமதாண்டவர் கூறிய வாக்குறுதிகள்:

1. உங்கள் குடும்பத்திலிருந்து 15 ஆன்மாக்களை உத்தரிப்பு நிலையிலிருந்து மீட்பேன்.

2. உங்கள் குடும்பத்திலுள்ள 15 ஆன்மாக்களை இறையருளில் காத்து உறுதிப்படுத்துவேன். 

3. உங்கள் குடும்பத்திலுள்ள 15 பாவிகள் மனமாற்றம் அடைவர்.

4. இச்செபங்களைச் செபிக்கும் நீங்கள் உத்தம தனத்தின் முதல்நிலையை அடைவீர்கள்.

5. உங்களது மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு உங்களது முடிவில்லாப் பசியையும், தாகத்தையும் தணிக்கும் பொருட்டு, எனது விலைமதிப்பற்ற சரீரத்தையும் இரத்தத்தையும் உங்களுக்கு அளிப்பேன்.

6. மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு நீங்கள் செய்த பாவங்களின் தன்மையை நன்கு அறிந்து ஆழ்ந்த மனஸ்தாபப்படும் வரத்தை அருளுவேன்.

7. உங்களுக்கு துணைபுரியவும், உங்களது எதிரிகளின் தாக்குதலிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும், என் வெற்றிச் சின்னமாகிய திருச்சிலுவையை உங்கள் முன் நிறுத்துவேன்.

8. உங்கள் மரணத்திற்கு முன் எனது அன்புத் தாயோடு உங்களிடம் வருவேன்.

9. உங்களுடைய ஆன்மாவை அன்புடன் ஏற்று அதை முடிவில்லாப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்வேன்.

10. அங்கு எனது தெய்வீக ஊற்றிலிருந்து உங்களுக்கு பருகக் கொடுப்பேன். இச்செபங்களைச் செபிக்காதவர்களுக்குக் கிடைக்காதது இது ஒன்று.

11. 30 ஆண்டுகள் தொடர்ந்து சாவான பாவநிலையில் இருப்பவன்கூட இச் செபத்தைப் பக்தியோடு சொல்வானாகில் அல்லது சொல்ல விரும்புவானாகில், அவனது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்.

12. பலத்த சோதனைகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பேன். 

13. உங்களது ஐம்புலன்களையும் பாதுகாப்பேன். 

14. அகால மரணத்திலிருந்து உங்களைக் காத்தருள்வேன்.

15. நித்திய மரணத்திலிருந்து உங்களது ஆத்துமம் மீட்கப்படும்.

16. கடவுளிடமும் கன்னித்தாயிடமும் நீங்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அடைவீர்கள்.

17. நீங்கள் உங்கள் வாழ்நாள் எல்லாம் உங்கள் மனம் போல் திரிந்தாலும், நீங்கள் மறுநாளே இறப்பதாயிருந்தால், உங்கள் வாழ்நாள் நீடிக்கப்படும்.

18. நீங்கள் உன்னத தேவதூதர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவது உறுதி.

19. இச்செபங்களை உங்கள் அயலானுக்கு கற்றுக் கொடுத்தால் உங்களுக்கு நிலையான மகிழ்ச்சியும் நித்திய வாழ்வின் பலனும் உண்டாகும்.

20. எங்கு இச்செபங்கள் செபிக்கப்படுகின்றனவோ, செபிக்கப்படுமோ அங்கு கடவுள் தம் அருளோடு இருக்கின்றார்.