சர்வேசுரனின் இரக்கத்தின் நவநாள் ஜெபங்கள் - இரண்டாம் நாள்.

சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

குருக்கள், துறவிகளின் ஆன்மாக்களுக்காக .

"இன்று, குருக்கள், துறவியரின் ஆன்மாக் களை என்னிடம் அழைத்துவந்து ஆழங்காண முடியாத எனது இரக்கத்தில் மூழ்கவிடு. எனது கசப்பான பாடுகளை நான் சகித்துக்கொள்ள எனக்குச் சக்தியளித்தவர்கள் இவர்கள்தாம். எனது இரக்கத்தின் வாய்க்கால்களாகிய இவர்கள் வழியாக மனுக்குலத்தின் மேல் என் இரக்கம் பாய்கிறது" என்றார் நமதாண்டவர்.

இரக்கம் மிகுந்த சேசுவே! உம்மிடம் இருந்தே எல்லா நன்மையும் வருகின்றது. நாங்கள் தகுந்த இரக்கச் செயல்களைப் புரிய எம்மில் உமது அருளைப் பெருக்கியருளும். அதனால் எம்மை நோக்கும் யாவரும் பரலோகத்திலுள்ள இரக்கத் தின் பிதாவைப் புகழ்வார்களாக!

நித்திய சீவியரான பிதாவே! உமது திராட்சைத் தோட்டத்திற்கென நீர் தெரிந்துள்ள உமது குருக்கள் துறவியரின் ஆன்மாக்கள் மீது உமது கருணைக் கண்ணைத் திருப்பியருளும். உமது ஆசீர்வாதத்தின் பலத்தால் அவர்களை நிரப்பும். உம் திருக்குமாரனின் இருதய அன்பிற்காக, அந்த அன்பில் ஒன்றுசேர்ந்துள்ள இவர்களுக்கு உமது வல்லமையையும், ஒளியையும் தாரும். இவர்கள் மீட்பின் பாதையில் பிறரை வழிநடத்தி உமது எல்லையற்ற இரக்கத்தை முடிவில்லாக் காலத்துக்கும் ஒரே குரலில் போற்றுவார்களாக!

ஆமென்.